وَرَفَعۡنَا فَوۡقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمۡ وَقُلۡنَا لَهُمُ ٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُلۡنَا لَهُمۡ لَا تَعۡدُواْ فِي ٱلسَّبۡتِ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا
மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ وَكُفۡرِهِم بِـَٔايَٰتِ ٱللَّهِ وَقَتۡلِهِمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَقَوۡلِهِمۡ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَلۡ طَبَعَ ٱللَّهُ عَلَيۡهَا بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا
அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், "எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன." (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).