سورة الأنبياء

الترجمة التاميلية

ترجمة معاني سورة الأنبياء باللغة التاميلية من كتاب الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الناشر

مجمع الملك فهد

آية رقم 1
1. மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்.
2. தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதை அவர்கள் (நம்பாது பரிகாசம் செய்து) விளையாடிக் கொண்டே கேட்கிறார்கள்.
3. அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
4. ‘‘வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்'' என்று (நம் தூதர்) பதில் கூறினார்.
5. (தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்!
6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்களா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்!
7. (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம் கட்டளைகளை) அவர்களுக்கும் வஹ்யி (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி கூறுவீராக. இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் (முன்னுள்ள வேத) ஞானமுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
8. உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
آية رقم 9
9. பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
10. உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கிறோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
11. அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்.
آية رقم 12
12. அவர்களும் நம் வேதனையின் அறிகுறியை உணர்ந்து கொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு விரைந்து ஓட ஆரம்பித்தார்கள்.
13. (அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேகமாக ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அது பற்றி கேட்கப்படுவீர்கள்'' (என்று கூறினோம்.)
آية رقم 14
14. அதற்கவர்கள் ‘‘எங்கள் கேடே! நிச்சயமாக நாங்கள் (வரம்பு மீறிய) தீயவர்களாக இருந்தோம்'' என்று கூக்குரலிட்டார்கள்.
آية رقم 15
15. அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரை நீடித்திருந்தது.
آية رقم 16
16. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
17. நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.
18. அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகிறோம். அது அதை (அதன் தலையை) உடைத்து விடுகிறது. பின்னர் அது அழிந்தும் விடுகிறது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்.
19. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
آية رقم 20
20. அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்து துதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
آية رقم 21
21. பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா?
22. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.
آية رقم 23
23. அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன் அவன்.) எனினும், படைப்புகள்தான் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கப்படுவார்கள்.
24. (நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்கள் ஆதாரத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்து கொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்.
25. உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை.
26. (அவ்வாறிருந்தும்) ரஹ்மான் (வானவர்களை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று இவர்கள் கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகளன்று,) எனினும், (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.
آية رقم 27
27. (அவனுக்கு முன்னால்) இ(வ்வான)வர்கள் ஒரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்.
28. அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
29. அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு அவ்வாறே கூலி கொடுப்போம்.
30. (ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு உயிருள்ள ஒவ்வொன்றையும் (வாழ்ந்திருக்கச்) செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
31. பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு சரியாக செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம்தான் ஏற்படுத்தினோம்.
32. மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
33. அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை எல்லாம் வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன.
34. (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீர் இறந்துவிட்ட பின்னர் (என்ன) இவர்கள் என்றென்றும் வாழப்போகிறார்களா?
35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
36. (நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.
37. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! கூறுவீராக: ‘‘வேதனைகளாகிய) என் அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆகவே, நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.''
آية رقم 38
38. (அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த (மிரட்டல்) வாக்கு எப்பொழுது வரும்'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.
39. அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக்கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று).
40. எனினும், அது இவர்களிடம் திடுகூறாகவே வந்து அவர்களைத் தட்டுக் கெட்டுத் தடுமாறும்படிச் செய்து விடும்; அதைத் தட்டிக் கழித்துவிட இவர்களால் முடியாது. இவர்களுக்கு சிறிதும் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டாது.
41. உமக்கு முன்னர் வந்த நம் தூதர்களும் (இவ்வாறே எதிரிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர். ஆகவே, பரிகாசம் செய்து கொண்டிருந்தவர்களை அவர்கள் பரிகாசம் செய்த வேதனை வந்து சூழ்ந்து கொண்டது.
42. (நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
43. இவர்களை (நம் வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மைத் தவிர இவர்களுக்கு வேறு இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வங்கள் எனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை இவர்களுக்குத் துணை புரியாது.
44. இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (ஆகவே, அவர்கள் கர்வங்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழ்ந்துள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா (நம்மை) வென்று விடுவார்கள்?
45. (நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
46. உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!'' என்று கூச்சல் இடுவார்கள்.
47. மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.)
آية رقم 48
48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்.
آية رقم 49
49. (இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் பயந்து) நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
آية رقم 50
50. இந்த குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதை நாமே இறக்கி வைத்தோம். இதை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா?
51. நிச்சயமாக நாம் இப்றாஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம்.
52. அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவற்றை வணங்குகிறீர்கள்)'' என்று கேட்டதற்கு,
آية رقم 53
53. அவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் இவற்றை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவற்றை வணங்குகிறோம்)'' என்று கூறினார்கள்.
آية رقم 54
54. அதற்கவர் ‘‘நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
آية رقم 55
55. அதற்கவர்கள் ‘‘நீர் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீர் விளையாடுகிறீரா?'' என்று கேட்டனர்.
56. அதற்கவர் ‘‘(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன், வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன்தான். (இந்த சிலைகளல்ல) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்.
آية رقم 57
57. (இங்கிருந்து) ‘‘நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்திவிடுவேன்'' (என்றும் கூறினார்.)
آية رقم 58
58. (அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக் கூடும் (என்று அதை மட்டும் உடைக்கவில்லை).
آية رقم 59
59. அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) ‘‘எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்'' என்று கூறினார்கள்.
آية رقم 60
60. அதற்கு (அவர்களில் சிலர்) ‘‘ஒரு வாலிபர் இவற்றைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கிறோம். அவருக்கு ‘இப்றாஹீம்' என்று பெயர் கூறப்படுகிறது'' என்று கூறினார்கள்.
آية رقم 61
61. அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.
آية رقم 62
62. (அவ்வாறு இப்றாஹீமைக் கொண்டு வந்து அவரை நோக்கி) ‘‘இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானோ?'' என்று கேட்டனர்.
63. அதற்கவர் ‘‘இல்லை. இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே! இதுதான் செய்திருக்கலாம்! (உடைப்பட்ட) இவை பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றையே கேளுங்கள்'' என்றார்.
آية رقم 64
64. அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) “நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்'' என்று கூறிக் கொண்டார்கள்.
65. பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்றாஹீமை நோக்கி) ‘‘இவை பேசாது என்பதை நிச்சயமாக நீர் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றிடம் நாங்கள் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)'' (என்று கூறினார்கள்).
66. அதற்கவர் ‘‘உங்களுக்கு ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?
67. சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
آية رقم 68
68. அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) ‘‘நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றி ருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்'' என்று கூறினார்கள்.
آية رقم 69
69. (அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம்.
آية رقم 70
70. அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.
آية رقم 71
71. அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.
72. மேலும், நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம்.
73. மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
74. லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களில் இருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
آية رقم 75
75. நாம் அவரை நம் அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
76. நூஹையும் (நபியாக அனுப்பிவைத்தோம்.) அவர் இதற்கு முன்னர் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையை அவருக்காக நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சிரமத்தில் இருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
77. நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம்.
78. தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.
79. தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவற்றை எல்லாம் செய்தோம்.
80. (போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா?
81. ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச்செல்லும் எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.
82. கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவற்றைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத் தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்துகொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம்.
83. ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்.
84. ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது.
آية رقم 85
85. இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும் (நாம் நம் தூதர்களாக அனுப்பிவைத்தோம்). இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைச்) சகித்துக் கொண்டனர்.
آية رقم 86
86. ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம் அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே.
87. (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.
88. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
89. ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டுவிடாதே! நீயோ வாரிசாகக்கூடியவர்களில் மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்,
90. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
91. தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
آية رقم 92
92. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.
آية رقم 93
93. எனினும் இவர்கள் தங்கள் காரியத்தில் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான்.
94. ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் பதிவு செய்து வருகிறோம்.
آية رقم 95
95. நாம் எவ்வூரார்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு) திரும்பவே மாட்டார்கள் என விதிக்கப்பட்டுள்ளது.
96. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதிசீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்.
97. (உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். ‘‘எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!'' (என்றும் அவர்கள் புலம்புவார்கள்).
98. (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவையும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தான்'' (என்று கூறப்படும்).
99. (அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள்.
آية رقم 100
100. அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். அதில் (மற்றெவரின் சப்தத்தை) அவர்கள் செவியுற மாட்டார்கள்.
آية رقم 101
101. ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள்.
102. அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சொர்க்கத்தில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
103. (மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) வானவர்கள் அவர்களை எதிர்கொண்டழைப்பார்கள் ‘‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்'' (என்று நற்செய்தியும் கூறுவார்கள்).
104. எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதைச் செய்தே தீருவோம்.
105. நிச்சயமாக நாம் ‘ஜபூர்' என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம், ‘‘நிச்சயமாக பூமிக்கு என் அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தான் வாரிசாவார்கள்'' என்று.
آية رقم 106
106. என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது.
آية رقم 107
107. (நபியே!) உம்மை உலகத்தாருக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.
108. (ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
109. (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) ‘‘நான் (என் தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்'' என்று கூறுவீராக.
آية رقم 110
110. நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்.
آية رقم 111
111. (இன்னும் இதுவரை வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரை நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறிய மாட்டேன்.
112. (மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்கள் (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்.''
تقدم القراءة