ترجمة معاني سورة النّور باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
عبد الحميد الباقوي
آية رقم 1
1. (மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். மேலும், இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கிவைத்தோம்.
آية رقم 2
2. விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்.
آية رقم 3
3. (கேவலமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணைத் தவிர (மற்றெவளையும்) திருமணம் செய்ய முடியாது. (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவலமான) ஒரு விபசாரனை அல்லது இணைவைத்து வணங்கும் ஓர் ஆணைத் தவிர (மற்றெவனையும்) திருமணம் செய்ய முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.
آية رقم 4
4. எவனேனும் கற்புடைய பெண்கள் மீது குற்றம் கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பெரும் பாவிகள்தான்.
آية رقم 5
5. ஆயினும், (இவர்களில்) எவரேனும் இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து) விலகி கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி(த் தங்கள்) நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மன்னிப்பவனும் கருணை செய்பவனுமாக இருக்கிறான்.
آية رقم 6
6. எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபசாரத்தைக் கொண்டு) குற்றம் கூறித் தங்களைத் தவிர அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,
آية رقم 7
7. ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும்.
آية رقم 8
8. (அவனுடைய மனைவி குற்றமற்றவளாக இருக்க அவள் மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதை மறுத்து) நிச்சயமாக(த் தனது) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து,
آية رقم 9
9. ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் அவள் கூறவேண்டும். (இதன் மூலம் அவள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை நீக்கப்பட்டுவிடும்.)
آية رقم 10
10. அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனுமாகவும் இல்லையெனில்... (உங்கள் குடும்ப வாழ்க்கையே சிதறி நீங்கள் பல துன்பங்களுக்குள்ளாகி இருப்பீர்கள்).
آية رقم 11
11. எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தான்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொருவருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக் கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு.
آية رقم 12
12. இதை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து ‘‘இது பகிரங்கமான அவதூறே'' என்று கூறியிருக்க வேண்டாமா?
آية رقم 13
13. (அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததினால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டுவிட்டது.
آية رقم 14
14. இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் இல்லையெனில் இதை நீங்கள் கூறிக்கொண்டிருந்ததன் காரணமாக மகத்தான வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
آية رقم 15
15. (ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை, நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதை நீங்கள் இலேசாகவும் மதித்து விட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க பெரியது.
آية رقم 16
16. நீங்கள் இதைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இதை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?
آية رقم 17
17. மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இத்தகைய விஷயத்தை இனி ஒரு காலத்திலும் நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
آية رقم 18
18. அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
آية رقم 19
19. எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
آية رقم 20
20. அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இல்லையெனில் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்).
آية رقم 21
21. நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக ஆகி இருக்க முடியாது. எனினும், அல்லாஹ், தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிபவன் ஆவான்.
آية رقم 22
22. உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (தர்மம்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், கருணையுடையவன் ஆவான்.
آية رقم 23
23. எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். இன்னும், அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
آية رقم 24
24. (நபியே! ஒரு நாளை நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவற்றைப் பற்றி சாட்சியம் கூறும்.
آية رقم 25
25. அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையாளன், (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
آية رقم 26
26. கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தான் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர். இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு.
آية رقم 27
27. நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரை நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக!
آية رقم 28
28. அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை அதில் நுழையாதீர்கள். ‘‘ (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) நீங்கள் திரும்பிவிடுங்கள்'' என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
آية رقم 29
29. (நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத ஒரு வீட்டில் உங்கள் சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான்.
آية رقم 30
30. (நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
31. (நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். தங்கள் அலங்காரத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக்கூடிய (ஹிஜாபின் வெளிப்புறத்)தைத் தவிர எதையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்கள் கணவர்கள், தங்கள் தந்தைகள், தங்கள் கணவர்களின் தந்தைகள், தங்கள் பிள்ளைகள், தங்கள் கணவர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது (முஸ்லிமாகிய) தங்கள் இனத்தாரின் பெண்கள், தங்கள் அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்னும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்கள் அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்கள் கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு பாவமன்னிப்பைக் கோரி அல்லாஹ்வின் பக்கமே (உங்கள் மனதால்) திரும்புங்கள்.
آية رقم 32
32. (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன் அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவன், (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவன் ஆவான்.
33. (வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரை அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்து விடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி, அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்களை எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து கருணை புரிவான்.(எனினும், நிர்ப்பந்தித்தவன் பாவி ஆகிவிடுவான்.)
آية رقم 34
34. நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்;
35. அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கின்ற ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கின்ற) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டு) இருக்கிறது. (அதில்) பாக்கியம் பெற்ற ‘ஜைத்தூன்' மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகிறது. அது கீழ்நாட்டில் உள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெயை நெருப்புத் தொடாவிடினும் அது பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடியவர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகிறான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன் தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.
آية رقم 36
36. (அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகள் அவற்றில் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறப்படவும், அதைக் கண்ணியப்படுத்தப்படவும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு,
آية رقم 37
37. பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள்.
آية رقم 38
38. அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றை விட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மேன்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கிறான்.
آية رقم 39
39. எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர்களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கிறான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.
آية رقم 40
40. அல்லது (அவர்களுடைய செயல்) கடலின் ஆழத்திலுள்ள இருளுக்கு ஒப்பாக இருக்கிறது. அதை அலைக்கு மேல் அலைகள் மூடிக் கொண்டிருப்பதுடன் மேகங்களும் (கவிழ்ந்து) மூடிக்கொண்டிருக்கின்றன. அன்றி, அவன் தன் கையை நீட்டிய போதிலும் அதைக் காண முடியாத அளவுக்கு இருள்களும் ஒன்றன்மேல் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும்) ஒரு பிரகாசமும் கிட்டாது.
آية رقم 41
41. வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவையும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீர் காணவில்லையா? இவை அனைத்தும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
آية رقم 42
42. வானங்கள் பூமி (ஆகியவை)யின் ஆட்சி அல்லாஹ்வுக்கு உரியதே! அவனிடமே (அனைவரும்) திரும்பச் செல்ல வேண்டியதிருக்கிறது.
آية رقم 43
43. (பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவற்றை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயம் அல்லாஹ்தான் அடுக்குகிறான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? பின்னர், அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீர் காண்கிறீர். அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டி (கல் மாரி)யையும் பொழியச் செய்கிறான். அதை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கிறான். அவன் நாடியவர்களை விட்டு அதைத் தடுத்துக் கொள்கிறான். அதன் மின்னலின் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது.
آية رقم 44
44. இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக் கொண்டு இருக்கிறான். அறிவுடையவர்களுக்கு இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு.
آية رقم 45
45. (மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை அனைத்தும் ஒரு வகையாக இருக்கவில்லை.) அவற்றில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவற்றில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவற்றில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் ஆவான்.
آية رقم 46
46. (மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல)வர்களையே (இதன் மூலம்) நேரானவழியில் செலுத்துகிறான்.
آية رقم 47
47. (நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்'' என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களே அல்ல.
آية رقم 48
48. தவிர, தங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்புபெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர்.
آية رقم 49
49. எனினும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம் தூதருக்கு) கீழ்ப்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர்.
آية رقم 50
50. என்னே! இவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தான் வரம்பு மீறும் அநியாயக்காரர்கள் ஆவர். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்.)
آية رقم 51
51. எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் ‘‘நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் கீழ்ப்படிந்தோம்'' என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இவர்கள்தான் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள் ஆவர்.
آية رقم 52
52. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகி அவனை அஞ்சிக் கொண்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்.
آية رقم 53
53. (நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீர் (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ''(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.''
آية رقم 54
54. (மேலும்) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)து தான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தான் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை.
آية رقم 55
55. (மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான்.
آية رقم 56
56. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்.
آية رقم 57
57. (நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீர் எண்ண வேண்டாம். (அவர்களைத் தண்டனைக் குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
58. நம்பிக்கையாளர்களே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவார்களாயின் உங்கள்) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோர வேண்டும். (அந்த நேரங்களாவன:) ‘ஃபஜ்ரு' (அதிகாலை) தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக் கூடிய ‘ளுஹர்' (மதிய) வேளையிலும், ‘இஷா' (இரவு) நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர்களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை). இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
آية رقم 59
59. உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோர வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.
آية رقم 60
60. திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (‘ஸலாம்' என்னும்) முகமனை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக் கொள்ளவும். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன் வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்துகொள்வீர்களாக!
آية رقم 62
62. நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் விலகிப் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உம்மிடம் அனுமதியைக்கோரி செல்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்கள் அவசர வேலை ஒன்றுக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி அளிப்பீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
آية رقم 63
63. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருத வேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம் தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும்.
آية رقم 64
64. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய தினம்) இருக்கும் நிலைமையையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அவனிடம் கொண்டு போகப்படும் நாளில் (இருக்கும் நிலைமையையும் அவன் நன்கறிவான். ஆகவே,) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அந்த நாளில்) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
تقدم القراءة