ترجمة معاني سورة المائدة باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
عبد الحميد الباقوي
آية رقم 1
1. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டிருக்கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ், உம்ராவில்) உடையவர்களாக இருக்கும் சமயத்தில் (இவற்றை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகிறான்.
2. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற புனித மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) மாலை கட்டப்பட்டவற்றையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதை விட்டு உங்களைத் தடுத்த வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
3. (நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவையும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப் பல்லும், வீர நகமுமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவற்றில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவற்றைத் தவிர. (அவ்வாறு அறுக்கப்பட்டவற்றைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவையும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன). இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்பட வேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன் (அங்கீகரித்துக் கொண்டேன்). எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது. ஏனென்றால்), நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னிப்பவன், (அவர் மீது) பெரும் கருணை காட்டுபவன் ஆவான்.
آية رقم 4
4. (நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘(சுத்தமான) நல்லவை அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றை, (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம். (அவையும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன.) (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும் பொழுது ‘பிஸ்மில்லாஹ்' என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
آية رقم 5
5. (நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்). எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இந்த சட்டங்களை) நிராகரிக்கிறானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில்தான் இருப்பான்.
6. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) ‘மஸஹு' செய்துகொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதை)க்கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!
آية رقم 7
7. (யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கிய பொழுது அதை நீங்கள் உறுதிப்படுத்தி ‘‘நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
آية رقم 8
8. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
آية رقم 9
9. எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும், மகத்தான (நற்) கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.
آية رقم 10
10. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.
آية رقم 11
11. நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
آية رقم 12
12. நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கிறோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்(காக சிரமத்தில் இருப்பவர்களுக்)கு அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவற்றை) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் உங்களை நுழைய வைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்.
آية رقم 13
13. அவர்கள் தங்கள் உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகிறார்கள். (நமது இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீர் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர். ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து வருவீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கிறான்.
آية رقم 14
14. எவர்கள் தங்களை ‘‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' எனக் கூறுகிறார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கிறோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரை (நீங்காதிருக்கும்படி) மூட்டிவிட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்.
آية رقم 15
15. வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவற்றைக் கூறாது) விட்டுவிடுகிறார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் மிகத்தெளிவான ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.
آية رقم 16
16. (உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்.
آية رقم 17
17. எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைவரையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால்,) வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை (விரும்பியபடி) படைக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்.
آية رقم 18
18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் ‘‘நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய அன்பிற்குரியவர்கள்'' என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறாயின், உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுடைய பிள்ளைகளல்ல. ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கிறது.
آية رقم 19
19. வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரை) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் ‘‘நற்செய்தி கூறுபவர், அச்சமூட்டி எச்சரிப்பவர் எங்களிடம் வரவேயில்லை'' என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நமது (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். ஆகவே, அச்சமூட்டி எச்சரிப்பவர், நற்செய்தி கூறுபவர் உங்களிடம் வந்திருக்கிறார். அல்லாஹ், அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
آية رقم 20
20. மூஸா தன் சமூகத்தாரை நோக்கி ‘‘என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், ‘மன்னு ஸல்வா' என்ற உணவு போன்ற)வற்றையும் உங்களுக்கு அளித்திருக்கிறான்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
آية رقم 21
21. (தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்'' (என்றும் கூறினார்.)
آية رقم 22
22. (அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்'' என்றனர்.
آية رقم 23
23. (இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந் நகரத்தின்) வாயில் வரை சென்றுவிடுங்கள். அதில் நீங்கள் நுழைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை சாட்டுங்கள்'' என்று கூறினார்கள்.
آية رقم 24
24. (இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீரும், உமது இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள்.
آية رقم 25
25. (அதற்கு மூஸா) ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளான (இந்த) மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
آية رقم 26
26. (அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) ‘‘அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, (இந்தப்) பாவிகளான மக்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்!'' என்று (மூஸாவுக்குக்) கூறினான்.
آية رقم 27
27. (நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இருவரும் ‘‘குர்பானி' (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி யான)து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால், ‘‘நிச்சயம் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்'' என்றார். உடனே (குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லவர்) ‘‘அல்லாஹ் (குர்பானியை) ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுள்ளவர்களிடமிருந்துதான்'' என்று பதில் கூறினார்.
آية رقم 28
28. ‘‘நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றன்.
آية رقم 29
29. என் பாவச் சுமையையும், உன் பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகின்றன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய் இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்'' (என்று கூறினார்.)
آية رقم 30
30. (இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டிவிடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்.
آية رقم 31
31. பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பிவைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற்காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதைக் கண்ட) அவர் ‘‘அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய் விட்டதே!'' என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
آية رقم 32
32. இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்.
آية رقم 33
33. எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்றுவிடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும், மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு.
آية رقم 34
34. எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னிப்பவன் பெரும் கருணை புரிபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
آية رقم 35
35. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
آية رقم 36
36. நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை அனைத்தையும் தாங்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து தப்பிக்க பிரதியாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்.
آية رقم 37
37. அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அவர்களுக்கு வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும்.
آية رقم 38
38. ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
آية رقم 39
39. எவரேனும் தன் (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
آية رقم 40
40. (நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன் ஆவான்.
41. (நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் ‘‘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர்(களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். மேலும், (இதுவரை) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவற்றை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அவருக்காக அல்லாஹ்விடம் எதையும் செய்ய நீர் ஆற்றல் பெறமாட்டீர். இவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு.
آية رقم 42
42. இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் (ஒரு நியாயத்திற்காக) உம்மிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நீதமாக) தீர்ப்பளிப்பீராக அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உமக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீர் தீர்ப்பளித்தால், நீதமாகவே தீர்ப்பளிப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்.
آية رقم 43
43. (எனினும் நபியே!) இவர்கள் உம்மை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கிறது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கிறது. அவ்வாறிருந்தும் அதை இவர்கள் புறக்கணித்துவிட்டனர். ஆகவே, (அதையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.
آية رقم 44
44. ‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!
آية رقم 45
45. அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கும் (காயமாக) நிச்சயமாக பழி வாங்கப்படும்'' என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) நன்மைக்காக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!
آية رقم 46
46. (முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தன்முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அவருக்கு ‘இன்ஜீல்' என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கிறது. இறையச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கிறது.
آية رقم 47
47. ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்.
48. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உம் மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ் (உமக்கு) இறக்கிய இதைக்கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய மண விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் (எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, (இவற்றில் உயர்வான இஸ்லாம் கூறுகின்ற) நன்மைகளுக்கு விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கிறது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்.
آية رقم 49
49. (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்தவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்தவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பிவிடாதபடியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பீராக. (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்துகொள்வீராக, அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகள்தான்.
آية رقم 50
50. அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, (மறுமையை) உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?
آية رقم 51
51. நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான்.
آية رقم 52
52. (நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! மேலும், ‘‘(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசமான என்னத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.
آية رقم 53
53. நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?'' என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்.
آية رقم 54
54. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
آية رقم 55
55. அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலை சாய்த்தும் வருகின்றனரோ இவர்கள்தான் நிச்சயமாக உங்கள் (உண்மையான) தோழர்கள் ஆவர்.
آية رقم 56
56. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக ‘ஹிஸ்புல்லாக்கள்' என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்). அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
آية رقم 57
57. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர் களாகவும்) எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து)கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.)
آية رقم 58
58. நீங்கள் (மக்களைத்) தொழுகைக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்கு)அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்!
آية رقم 59
59. ‘‘வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீர் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)'' என்று கூறுவீராக.
آية رقم 60
60. “அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' (என்று நபியே! நீர் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். நேரான வழியிலிருந்து முற்றிலும் வழி தவறியவர்கள்'' என்று நீர் கூறுவீராக.
آية رقم 61
61. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் ‘‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்து)க் கொண்டே (உங்களிடம்) வந்தார்கள். நிச்சயமாக அத்துடனேயே (உங்களிடமிருந்து) அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் (தங்கள் உள்ளங்களுக்குள்) மறைத்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ்தான் நன்கறிவான்.
آية رقم 62
62. (நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்பவை மிகத் தீயவையே!
آية رقم 63
63. அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவற்றை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டதுவே.
64. ‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். மாறாக, அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கிறான். உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகிறது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையை, வெறுப்பை இறுதிநாள் வரை (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகிறார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.
آية رقم 65
65. வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சொர்க்கங்களில் நிச்சயமாக நாம் அவர்களை நுழைவிப்போம்.
آية رقم 66
66. தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன.
آية رقم 67
67. (நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
آية رقم 68
68. (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்.
آية رقم 69
69. நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் (இந்த தூதர் கூறுகிறபடி) அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு (அவர் கற்பித்த வழியில்) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
آية رقم 70
70. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம் தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம் பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்.
آية رقم 71
71. (இதனால் தங்களுக்கு) ஓர் ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
آية رقم 72
72. ‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்'' என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
آية رقم 73
73. ‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். ஏனென்றால், ஒரே ஓர் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஆகவே, இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்.
آية رقم 74
74. இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவன் மிகக் கருணையுடையவன் ஆவான்.
آية رقم 75
75. மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டனர் என்பதையும் நீர் கவனிப்பீராக.
آية رقم 76
76. (அன்றி அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு ஒரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள் ?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஆவான்.
آية رقم 77
77. ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
آية رقم 78
78. இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர்.
آية رقم 79
79. அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே!
آية رقم 80
80. அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்.
آية رقم 81
81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகள் ஆவர்.
آية رقم 82
82. (நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை.
آية رقم 83
83. தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்.
آية رقم 84
84. அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசைப்படுகிறோம்'' என்றும் (கூறுகின்றனர்.)
آية رقم 85
85. அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்.
آية رقم 86
86. எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே!
آية رقم 87
87. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை.
آية رقم 88
88. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்.
آية رقم 89
89. உங்கள் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (எதையும்) உறுதிப்படுத்த நீங்கள் செய்கின்ற சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவற்றில் எதையும்) எவர் பெறவில்லையோ அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான்.
آية رقم 90
90. நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
آية رقم 91
91. மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)
آية رقم 92
92. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
آية رقم 93
93. நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
آية رقم 94
94. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்கள் கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய ஒரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
95. நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதை வேண்டுமென்ன்ற கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடு கொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவரேனும் (இத்தகைய குற்றம் செய்ய) மீண்டும் திரும்பி விட்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன் ஆவான்.
آية رقم 96
96. (நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
آية رقم 97
97. சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட கால்நடைகளையும் (பாதுகாப்பு பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிபவன் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்).
آية رقم 98
98. நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்; (அத்துடன்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்து பெரும் கருணை காட்டுபவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
آية رقم 99
99. நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
آية رقم 100
100. (நபியே! நீர் அவர்களை நோக்கி ‘‘எங்கும்) தீயவை அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்'' என்று கூறுவீராக.
آية رقم 101
101. நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், அதிகம் சகித்துக்கொள்பவன் ஆவான்.
آية رقم 102
102. உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறிவிட்டார்கள்.
آية رقم 103
103. பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்.
آية رقم 104
104. “அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)!
آية رقم 105
105. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.
آية رقم 106
106. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
آية رقم 107
107. (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர், (முன்பு சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று, ‘‘அவர்களுடைய சாட்சியத்தை விட எங்கள் சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்), நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
آية رقم 108
108. உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் இது மிக்க சுலபமான வழி. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்.
آية رقم 109
109. (நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்.
110. பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக.
آية رقم 111
111. என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்).
آية رقم 112
112. தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உமது இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
آية رقم 113
113. அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்.
آية رقم 114
114. அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா ‘‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கிவைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன் (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
آية رقم 115
115. அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்'' என்று கூறினான்.
آية رقم 116
116. அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்.
آية رقم 117
117. நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.
آية رقم 118
118. அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்,) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்'' (என்று கூறுவார்.)
آية رقم 119
119. அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும்.
آية رقم 120
120. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன்.
تقدم القراءة