ترجمة معاني سورة الأحقاف باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
عبد الحميد الباقوي
آية رقم 1
ﮑ
ﮒ
1, 2. ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது.
آية رقم 2
ﮓﮔﮕﮖﮗﮘ
ﮙ
1, 2. ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது.
آية رقم 3
3. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமும், (அவற்றுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர்.
آية رقم 4
4. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.
آية رقم 5
5. மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட மிக வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது.
آية رقم 6
6. தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவை) நிராகரித்துவிடும்.
آية رقم 7
7. நம் தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவற்றைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர்.
آية رقم 8
8. (நபியே!) இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) கூறுவீராக: ‘‘இதை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு எதுவும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகிறீர்களோ, அவற்றை அவன் நன்கறிந்துமிருக்கிறான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அவன்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
آية رقم 9
9. (நபியே! அவர்களை நோக்கி, மேலும்) கூறுவீராக: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) மேலும், என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹ்யி மூலமாக அறிவிக்கப்பட்டவற்றை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.
آية رقم 10
10. (நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
آية رقم 11
11. நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதை நம்பிக்கைகொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்தியிருக்க மாட்டார்கள். (இதில் ஒரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்)'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தான் என்றும் அவர்கள் கூறுவார்கள்.
آية رقم 12
12. இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. இன்னும் அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கிறது.
آية رقم 13
13. எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள்புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
آية رقم 14
14. இவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் செய்யும் நன்மைக்குக் கூலியாக என்றென்றுமே அதில் அவர்கள் தங்கிவிடுவார்கள்.
آية رقم 15
15. மனிதன் தன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்.
آية رقم 16
16. இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சொர்க்கவாசிகளான இவர்களின் பாவங்களையும் மன்னித்து விட்டு விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்.
آية رقم 17
17. எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய அறிவுரைகளை மறுத்து) ‘‘சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே திரும்ப வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகிறான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) ‘‘உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பிக்கை கொள். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது'' என்று கூறுகிறார்கள். அதற்கவன், ‘‘இவையெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை, (இதை நான் நம்பவே மாட்டேன்)'' என்று கூறுகிறான்.
آية رقم 18
18. இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார்களைப்போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
آية رقم 19
19. இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது.
آية رقم 20
20. நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவற்றை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்கள் சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்'' (என்று கூறப்படும்).
آية رقم 21
21. (நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். (அவர்) தன் மக்களை ‘அஹ்காஃப்' என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து), ‘‘அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகிறேன்'' என்று அச்சமூட்டி எச்சரித்தார்.
آية رقم 22
22. அதற்கவர்கள், ‘‘எங்கள் தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிடவா நீர் எங்களிடம் வந்தீர்? நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
آية رقم 23
23. அதற்கவர், (அவர்களை நோக்கி ‘‘உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற) ஞானம் எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
آية رقم 24
24. பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது).
آية رقم 25
25. ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
آية رقم 26
26. உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
آية رقم 27
27. உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவற்றை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.)
آية رقم 28
28. (அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவையேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவையெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவையெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைதான் (என்று தெளிவாகி விட்டது).
آية رقم 29
29. (நபியே!) இந்த குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) ‘‘நீங்கள் வாய் பொத்தி (இதைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்'' என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்.
آية رقم 30
30. (அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகிறது.
آية رقم 31
31. எங்கள் இனத்தார்களே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்.
آية رقم 32
32. எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இவர்கள் பகிரங்கமான வழி கேட்டில்தான் இருப்பர்'' என்றார்கள்.
آية رقم 33
33. வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? ஆம், நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்.
آية رقم 34
34. நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) ‘‘இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் ஏனில்லை! ‘‘எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்'' என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இதை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.
آية رقم 35
35. (நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. அவர்களுக்கு (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) பகலின் ஒரு நாழிகையே தவிர (அதற்கு அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதை) அவர்களுக்கு (நீர்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை.)
تقدم القراءة