سورة العنكبوت

الترجمة التاميلية

ترجمة معاني سورة العنكبوت باللغة التاميلية من كتاب الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الناشر

مجمع الملك فهد

آية رقم 1
1. அலிஃப் லாம் மீம்.
2. மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
3. இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.
4. அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனை அடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது.
5. எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான்.
6. (அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவன்.
7. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
8. தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். (எனினும், கடவுள் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவற்றை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படியாதே! என்னிடமே நீங்கள் திரும்ப வேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்.
آية رقم 9
9. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லவர்களுடன் சேர்த்துவிடுவோம்.
10. மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் ‘‘ நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவி கிடைத்தால் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்'' என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?
آية رقم 11
11. ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான்.
12. நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘ நீங்கள் எங்கள் வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங்குறைகள் ஏற்பட்டால்) உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று கூறுகின்றனர். எனினும், அவர்களின் (நம்பிக்கையாளர்களின்) குற்றங்களிலிருந்து எதையுமே அவர்கள் (-நிராகரிப்பவர்கள்) சுமந்துகொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
13. ஆயினும், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளையும் இன்னும் தங்கள் பாவச் சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமைகளையும் நிச்சயமாக சுமப்பார்கள். மேலும், அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள்.
14. நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
آية رقم 15
15. எனினும், அவரையும் (அவருடைய) கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்துக் கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினையாக ஆக்கினோம்.
16. இப்றாஹீமை (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பிவைத்த சமயத்தில்) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்'' (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
17. தவிர, அல்லாஹ்வை அன்றி சிலைகளைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள். நீங்கள் பொய்யை கற்பனை செய்கிறீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்'' என்றும் கூறினார்.
18. (இப்றாஹீமே! மக்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘ நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். நம் தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது) அத்தூதர் மீது கடமையில்லை.
19. (ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவற்றை மீளவைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!'' (என்று கூறினார்).
20. (மேலும், மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்றாஹீமுக்கு கட்டளையிட்டோம்.) கூறுவீராக! பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன்.
21. அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள்புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.''
22. (அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை.
23. ‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி நம்பிக்கை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.''
24. (இவ்வாறெல்லாம் இப்றாஹீம் நபி தன் மக்களுக்குக் கூறியதற்கு) ‘‘இவரை வெட்டி விடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்து விடுங்கள்'' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்றாஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்)நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
25. (மேலும், இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்'' என்று கூறினார்.
26. (இப்றாஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்றாஹீம் அவரை நோக்கி) ‘‘ நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என் இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்'' என்று கூறினார்.
27. ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஅகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவருடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லவர்களில்தான் இருப்பார்.
28. லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி ‘‘ உங்களுக்கு முன்னர் உலக மனிதர்களில் ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கிறீர்கள்.
29. (பெண்களை விட்டு விட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கிறீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கிறீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்கிறீர்களே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் பதில் கூறவில்லை.
آية رقم 30
30. அதற்கவர் ‘‘ என் இறைவனே! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு விரோதமாக நீ எனக்கு உதவிபுரிவாயாக!'' என்று பிரார்த்தித்தார்.
31. (வானவர்களாகிய) நம் தூதர்கள், இப்றாஹீமுக்கு (இஸ்ஹாக் நபியின் பிறப்பைப் பற்றி) நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி ‘‘ லூத்துடைய) இந்த ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்துவிடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக்காரர்களாக ஆகிவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.
32. அதற்கவர் (அவ்வானவர்களை நோக்கி) ‘‘ நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கிறாரே!'' என்று கூறினார். அதற்கவர்கள் ‘‘ அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக்கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.
33. பின்னர் நம் (வானவ) தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த வானவர்களை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) ‘‘ நீர் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உமது இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம்.) நிச்சயமாக நாம் உம்மையும், உமது மனைவியைத் தவிர, (மற்ற) உமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உம்முடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்'' என்று கூறினார்கள்.
34. இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைப்போம்'' (என்று கூறினார்கள்).
آية رقم 35
35. (பின்னர், வானவர்கள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்கள் இருந்த ஊரில் விட்டு வைத்திருக்கிறோம்.
36. மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' என்று கூறினார்.
آية رقم 37
37. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்துவிட்டனர்.
38. மேலும், இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போகவர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயல்களை ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர்களாகத்தான் இருந்தார்கள். (ஆனால் ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.)
39. காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
40. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் சொருகி விட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், இவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
41. அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கிறது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
42. அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (கடவுளென) அழைக்கிறார்களோ, அவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவற்றுக்கு ஒரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
43. மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
44. மெய்யாகவே அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்.(வேறொருவர் இல்லை.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக இவற்றிலும் (பல) அத்தாட்சி(கள்) உண்டு.
45. (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).
46. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலேயே தவிர அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) ‘‘ எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்றபடியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கிறோம்'' என்றும் கூறுங்கள்!
47. (நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உமக்கு இவ்வேதத்தை அருளியிருக்கிறோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க)ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். மேலும், (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதை நம்பிக்கை கொள்கின்றனர். (மன முரண்டாக நிராகரிக்கும்) நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்ற எவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
48. (நபியே!) நீர் இதற்கு முன்னர் ஒரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உமது கையால் நீர் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதை நீர் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்.
49. அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இவை பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்.
50. மேலும், (‘‘ தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?'' என்று (இவ்வக்கிரமக்காரர்கள்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்.''
51. அவர்கள் மீது ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு (அத்தாட்சியால்) போதாதா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கிறது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன.
52. (நபியே!) கூறுவீராக: ‘‘ எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.''
53. (மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரை) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும்.
آية رقم 54
54. நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மிடம் அவசரப் படுகிறார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
55. அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக்கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்.
آية رقم 56
56. நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்கு சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்.)
آية رقم 57
57. (உங்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
58. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சொர்க்கங்களிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே.
آية رقم 59
59. உண்மை நம்பிக்கையாளர்கள் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக்கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள்.
60. உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
61. (நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?'' என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்.
62. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதிகள்) அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
63. (நபியே! நீர் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அதற்கு, ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) உணர்ந்து கொள்வதில்லை.
64. இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
65. (மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.
آية رقم 66
66. நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பலனை(ப் பின்னர்) நிச்சயமாக அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
67. (இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் (எதிரிகளால்) தாக்கப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா?
68. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடம் நரகத்தில் இல்லையா?.
69. எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.
تقدم القراءة