سورة الزخرف

الترجمة التاميلية

ترجمة معاني سورة الزخرف باللغة التاميلية من كتاب الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الناشر

مجمع الملك فهد

آية رقم 1
1. ஹா மீம்.
آية رقم 2
2. தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
آية رقم 3
3. (மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்கள்) அரபி மொழியில் அமைத்தோம்.
آية رقم 4
4. நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும்.
آية رقم 5
5. நீங்கள் வரம்பு மீறிய மக்களாகிவிட்டீர்கள் என்பதற்காக, உங்களுக்கு நல்லுபதேசம் செய்வதை விட்டு முற்றிலும் நாம் உங்களைப் புறக்கணித்து விடுவோமா?
آية رقم 6
6. (உங்களைப் போன்று சென்றுபோன உங்கள்) முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பியிருக்கிறோம்.
آية رقم 7
7. (எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
آية رقم 8
8. இவர்களை விட மிக பலசாலிகளான அவர்களையெல்லாம் (அவர்களின்பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். இதற்கு முன் சென்றவர்களின் (இத்தகைய) உதாரணம் (இதில் பல இடங்களில் கூறப்பட்டு முன்னர்) சென்றுவிட்டது.
9. வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால் (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவனும்தான் அவற்றை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்.)
10. அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் அமைத்தான்.
11. அவன்தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கிறான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தான், பின்னர் (மழையை பொழியச் செய்து) அதைக்கொண்டு வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளியேற்றப்படுவீர்கள்.
12. அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் வாகனித்து செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான்.
13. ஆகவே, அவற்றின் முதுகுகள் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன் மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, (இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து) ‘‘இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதை வசப்படுத்தித்தந்தவன் மிக்க பரிசுத்தவான்'' என்றும்,
آية رقم 14
14. ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்'' என்றும் கூறுவீர்களாக!
15. (இணைவைத்து வணங்கும்) அவர்கள் இறைவனுடைய அடியார்க(ளில் உள்ள வானவர்க)ளை அவனுடைய (பெண்) சந்ததி என்று கூறுகிறார்கள். நிச்சயமாக (இவ்வாறு கூறுகின்ற) மனிதன் பகிரங்கமாகவே பெரும் நன்றி கெட்டவனாவான்.
آية رقم 16
16. (இறைவன்) தான் படைத்தவற்றில் தனக்கு மகள்களை எடுத்துக் கொண்டு (தன்னைவிட உங்களை கௌரவப்படுத்துவதற்காக) உங்களுக்கு மட்டும் மகன்களை அளித்தானோ?
17. (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகிறது.
18. என்னே! தன் விவகாரத்தைத் தெளிவாக எடுத்துக் கூற சக்தியற்று ஆபரணத்தில், (சிங்காரிப்பில்) வளர்க்கப்படுபவரையா (-பெண்களையா அவனுக்குச் சந்ததி என்று கூறுகின்றனர்?)
19. தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களைப் படைக்கும் போது இவர்கள் (நம்முடன் இருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவையெல்லாம் (நம் பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள்.
20. தவிர, ரஹ்மான் (அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) நாடியிருந்தால் அவனையன்றி நாம் (வானவர்களை) வணங்கியே இருக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு வீண் தர்க்க வாதம் செய்பவர்களேதவிர, அவர்களுக்கு ஓர் அறிவும் இல்லை.
آية رقم 21
21. அல்லது ஒரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதை அவர்கள் (இதற்கு ஆதாரமாக வைத்து) பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனரா?
22. மாறாக! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவதெல்லாம் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நாங்கள் நடக்கிறோம்'' என்பதுதான்.
23. இவ்வாறே, உங்களுக்கு முன்னரும் எச்சரிக்கும் தூதரை ஓர் ஊராரிடம் நாம் அனுப்பிவைத்தால், அங்குள்ள தலைவர்கள் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம்; அவர்களின் அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றிச் செல்வோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை.
24. (அதற்கு, அத்தூதர் அவர்களை நோக்கி) ‘‘உங்கள் மூதாதைகளை நீங்கள் எதில் கண்டீர்களோ அதைவிட நேரான வழியை நான் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்றும் கூறினார்கள்.
آية رقم 25
25. ஆதலால், நாம் அவர்களை பழி வாங்கினோம். (நபியே! நம் தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் கவனித்துப் பார்ப்பீராக.
26. இப்ராஹீம் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக. ‘‘நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன்.
آية رقم 27
27. எனினும் எவன் என்னை படைத்தானோ (அவனையே நான் வணங்குவேன்). நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்'' (என்றும் கூறினார்).
آية رقم 28
28. ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) அவர்கள் திரும்பவரும் பொருட்டு, அவர் தன் சந்ததிகளில் இக்கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார்.
29. (ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் மூதாதையாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நமது இந்தத்) தூதரும் வருகின்றவரை, அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன்.
30. அவர்களிடம் இந்தச் சத்திய வேதம் வரவே, அவர்கள் (இதை) ‘‘இது சூனியம்தான். நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கிறோம்'' என்று கூறுகின்றனர்.
31. மேலும் (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள ஒரு பெரிய மனிதன் மீது இந்த குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.
32. (நபியே!) உமது இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தானா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரை விட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். (நபித்துவம் என்னும்) உமது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதை அவன் விரும்பியவருக்குத்தான் கொடுப்பான்.)
33. (இந்நிராகரிப்பவர்களின் செல்வ செழிப்பைக் கண்டு, ஆசை கொண்ட மற்ற) மனிதர்கள் அனைவருமே (அவர்களைப் போல் நிராகரிக்கின்ற) ஒரே வகுப்பினராக ஆகிவிடுவார்கள் என்று இல்லாதிருப்பின் ரஹ்மானை (அல்லாஹ்வை), நிராகரிப்பவர்களின் வீட்டு முகடுகளையும் அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் கூட நாம் வெள்ளியினால் ஆக்கிவிடுவோம்.
آية رقم 34
34. அவர்களுடைய வீடுகளின் வாயில்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் கூட (வெள்ளியினால்) ஆக்கி இருப்போம்.
35. (வெள்ளி என்ன! இவற்றைத்) தங்கத்தாலேயே (அலங்கரித்தும் விடுவோம்). ஏனென்றால், இவை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அழிந்துவிடக்கூடிய) அற்ப இன்பங்களே தவிர வேறில்லை. உங்கள் இறைவனிடம் இருக்கும் மறுமை(யின் நிலையான இன்ப வாழ்க்கையோ, மிக மேலானதும் நிலையானதுமாகும். அது) இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்குத்தான் சொந்தமானது.
36. எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாக) சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான்.
آية رقم 37
37. நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தான்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்.
38. நம்மிடம் (வரும் வரைதான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘எனக்கும் உமக்கும் இடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலை தூரம் இருந்திருக்க வேண்டாமா?'' என்றும், ‘‘(எங்களை வழிகெடுத்த எங்கள்) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்'' என்றும் கூறுவார்கள்.
39. (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தான்'' (என்றும் கூறப்படும்).
40. (நபியே!) நீர் செவிடர்களைக் கேட்கும்படி செய்து விடுவீரா? அல்லது குருடர்களை (அல்லது மன முரண்டாகவே) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்களை நேரான வழியில் நீர் செலுத்திவிடுவீரா?
آية رقم 41
41. (நபியே! அவர்களுக்கு மத்தியிலிருந்து) உம்மை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம்.
آية رقم 42
42. அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்த தண்டனையை நீர் (உயிருடன் இருக்கும்போதே) உமது கண்ணால் காணும்படி செய்வோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றல் உடையவர்களாகவே இருக்கிறோம்.
43. (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக. நிச்சயமாக நீர் நேரான பாதையில்தான் இருக்கிறீர்.
آية رقم 44
44. நிச்சயமாக இது உமக்கும், உமது மக்களுக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அதிலுள்ளபடி நடந்து கொண்டீர்களா என்பதைப் பற்றி) பின்னர் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
45. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம் தூதர்களைப் பற்றி நீர் கேட்பீராக, ‘‘ரஹ்மானையன்றி வணங்கப்படுகின்ற வேறு கடவுள்களை நாம் ஏற்படுத்தினோமா?''
46. நிச்சயமாக மூஸாவை, நாம் நமது (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் ''என்று கூறினார்.
آية رقم 47
47. அவர், அவர்களிடம் நம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றை (ஏளனம் செய்து) நகைக்க ஆரம்பித்தார்கள்.
48. நாம் அவர்களுக்குக் காண்பித்த ஒவ்வோர் அத்தாட்சியும், மற்றொன்றை விடப் பெரிதாகவே இருந்தது. அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்பி விடுவதற்காக (உடனே அழித்து விடாமல் இலேசான) வேதனையைக் கொண்டு (மட்டும்) அவர்களைப் பிடித்தோம்.
49. அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘சூனியக்காரரே! (உமது இறைவன் உமது பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உமக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ்வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உமது) நேரான வழிக்கு வந்து விடுவோம்'' என்று கூறினார்கள்.
آية رقم 50
50. (அவ்வாறு மூஸாவும் பிரார்த்தனை செய்தார்.) ஆகவே, நாம் அவர்களுடைய வேதனையை நீக்கிய சமயத்தில், அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விட்டார்கள்.
51. பின்னர், ஃபிர்அவ்ன் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! இந்த ‘மிஸ்ர்' தேசத்தின் ஆட்சி எனதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று பறை சாற்றினான்.
52. ‘‘தவிர, நான் இந்த இழிவான மனிதரை விட சிறந்தவனாயிற்றே! தெளிவாகப் பேசவும் அவரால் முடியவில்லையே!'' (என்றும்,)
53. ‘‘(அவர் நம்மைவிட மேலானவராக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் வானவர்கள் ஒன்று சேர்ந்து பரிவாரங்களாக வரவேண்டாமா?'' (என்றும் கூறி,)
آية رقم 54
54. அவன் தன் மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு கீழ்ப்படிந்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பாவம் செய்யும் (சுபாவமுடைய) மக்களாக இருந்தனர்.
آية رقم 55
55. (இவ்வாறு அவர்கள்) நமக்குக் கோபமூட்டவே, அவர்களிடம் நாம் பழிவாங்கும் பொருட்டு, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.
آية رقم 56
56. இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம்.
57. (நபியே!) மர்யமுடைய மகனை உதாரணமாகக் கூறப்பட்ட சமயத்தில், அதைப்பற்றி உமது மக்கள் (கொக்கரித்துக்) கைதட்டி, நகைக்க ஆரம்பித்து விட்டனர்.
58. ‘‘எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?'' என்று கேட்கத் தலைப்பட்டனர். வீண் விதண்டாவாதத்திற்கே தவிர உமக்கு அவர்கள், அவரை உதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் மக்கள்தான்.
59. ஈஸாவோ, நமது அடிமையே தவிர வேறில்லை. (அவர் கடவுளல்ல; நமது பிள்ளையுமல்ல; அவர் இவ்வாறு கூறவுமில்லை; மாறாக, இதை மறுத்தே கூறியிருக்கிறார்.) அவர் மீது நாம் அருள்புரிந்து, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை நாம் ஓர் உதாரணமாக்கினோம்.
آية رقم 60
60. நாம் விரும்பினால் (உங்களை அழித்து விட்டு பிறகு,) உங்களுக்குப் பதிலாக வானவர்களை படைத்து, பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கி விடுவோம்.
61. நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவரும் ஓர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி.
آية رقم 62
62. உங்களை ஷைத்தான் (நேர்வழியைவிட்டு) தடுத்து விட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.''
63. ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) ‘‘மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்றும்,
64. ‘‘நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். (நான் இறைவன் அல்ல.) ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (வேறு எதையும், எவரையும் என்னையும் வணங்காதீர்கள்.) இதுதான் நேரான வழி'' என்றும் கூறினார்.
65. எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு கடிண துன்பமுடைய வேதனையின் கேடுதான்!
66. இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
آية رقم 67
67. அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகி விடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர.
آية رقم 68
68. (அந்நாளில் இறையச்சமுடையவர்களை நோக்கி) ‘‘என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு ஒரு பயமும் இல்லை. நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்'' (என்று கூறப்படும்).
آية رقم 69
69. இவர்கள்தான் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் பணிந்து வழிபட்டு நடப்பவர்கள்.
آية رقم 70
70. ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) ‘‘நீங்களும் உங்கள் மனைவிகளும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சொர்க்கத்திற்குச் சென்று விடுங்கள்'' (என்று கூறப்படும்).
71. (பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவையும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) ‘‘இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்'' (என்றும் கூறப்படும்.)
آية رقم 72
72. நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாகவே, இச்சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆனீர்கள்.
آية رقم 73
73. நீங்கள் புசிக்கக்கூடிய (விதவிதமான) பல கனிவர்க்கங்களும் அதில் உங்களுக்கு உள்ளன'' (என்றும் கூறப்படும்).
آية رقم 74
74. (ஆயினும் பாவம் செய்த) குற்றவாளிகள் நிச்சயமாக நரக வேதனையில் என்றென்றும் நிலைபெற்று விடுவார்கள்.
آية رقم 75
75. அவர்களுடைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
آية رقم 76
76. நாம் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைத்துவிடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
77. (இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) ‘‘மாலிக்கே! உமது இறைவன் எங்கள் காரியத்தை முடித்து விடட்டும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)'' என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் ‘‘(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்'' என்று கூறுவார்.
آية رقم 78
78. (நிராகரிப்பாளர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையான வேதத்தை கொண்டுவந்தோம். எனினும், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையை வெறுக்கின்றனர்.
آية رقم 79
79. (நபியே! உமக்குச் சதி செய்ய) அவர்கள் ஏதும் முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நாமும் முடிவு கட்டித்தான் வைத்திருக்கிறோம்.
80. அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசுவதையும் நாம் செவியேற்க மாட்டோம் என்று அவர்கள் நினைக்கின்றனரா? அவ்வாறில்லை! அவர்களிடத்தில் இருக்கும் நம் வானவர்கள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்.
آية رقم 81
81. (நபியே!) கூறுவீராக: ‘‘ரஹ்மானுக்கு சந்ததி இருந்தால் (அதை) வணங்குபவர்களில் நானே முதன்மையானவனாக இருப்பேன்''
آية رقم 82
82. வானங்கள் இன்னும் பூமியின் இறைவன், அர்ஷுடைய இறைவன் இவர்கள் கூறும் (பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க பரிசுத்தமானவன்.
آية رقم 83
83. ஆகவே, (நபியே!) இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையின்) நாளை இவர்கள் சந்திக்கும் வரை, வீண் தர்க்கத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கும் படி இவர்களை விட்டுவிடுவீராக.
84. வானத்திலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன்; பூமியிலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன். (ஈஸாவும் அல்ல, வேறு எவரும் அல்ல.) அவன்தான் மிக்க ஞானமுடையவன், நன்கறிந்தவன்.
85. வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கிறது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு போகப்படுவீர்கள்.
86. அல்லாஹ்வையன்றி எவற்றை இவர்கள் (இறைவனென) அழைக்கிறார்களோ அவை (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்களுக்கு அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் அவர்கள் பரிந்து பேசுவார்கள்.)
87. (நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் வினவினால் (ஈஸாவும் அல்ல, வேறு எவரும் அல்ல.) அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனைவிட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?
آية رقم 88
88. ‘‘என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்'' என்று (தூதராகி) அவர் கூறுவது நமக்குத் தெரியும்.
آية رقم 89
89. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டு ‘ஸலாம்' என்று கூறி வருவீராக. பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.
تقدم القراءة