سورة المؤمنون

الترجمة التاميلية

ترجمة معاني سورة المؤمنون باللغة التاميلية من كتاب الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الترجمة التاميلية

عبد الحميد الباقوي

الناشر

مجمع الملك فهد

آية رقم 1
1. நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.
آية رقم 2
2. அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்;
آية رقم 3
3. அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்;
آية رقم 4
4. அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள்;
آية رقم 5
5. அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்;
6. எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்.
آية رقم 7
7. இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளிகளாகி) விடுவார்கள்.
آية رقم 8
8. மேலும், அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்கள் வாக்குறுதியையும் பேணி நடப்பார்கள்;
آية رقم 9
9. அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப் பிடித்து தொழுது வருவார்கள்.
آية رقم 10
10. இவர்கள்தான் (சொர்க்கத்திற்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.
آية رقم 11
11. ஆகவே, இவர்கள் ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்திற்கு வாரிசுகளாகி அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
آية رقم 12
12. நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.
آية رقم 13
13. பின்னர், அதை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம்.
14. பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதை வேறு ஒரு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.
آية رقم 15
15. (மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே!
آية رقم 16
16. அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.
17. (மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவற்றைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவற்றுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.)
18. மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.
19. அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்.
20. ‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பையும்) தருகிறது.
21. நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.
آية رقم 22
22. அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
23. நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.
24. அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்,
25. ‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் வரை) சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறினார்கள்.
آية رقم 26
26. (அதற்கு நூஹ் நபி) ‘‘என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்'' என்று பிரார்த்தித்தார்.
27. அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம்.
28. நீரும் உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் ‘‘ அநியாயக்கார இந்த மக்களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்று கூறுவீராக.
آية رقم 29
29. ‘‘என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ள(வனாக பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலில் இருந்து) இறக்கிவைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்திப்பீராக'' (என்றும் கூறினோம்.)
آية رقم 30
30. நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (நிச்சயமாக மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதிப்பவர்களாக இருக்கிறோம்.
آية رقم 31
31. (வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் (‘ஆது' என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம்.
32. அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' (என்று கூறினார்.)
33. (ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
آية رقم 34
34. ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள்.
35. நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா?
آية رقم 36
36. அவர் உங்களை பயமுறுத்தும் விஷயம் வெகு தூரமோ தூரம் (அது ஆகக்கூடியதன்று).
37. நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்துவிடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை.
38. (ஹூது நபி என்னும்) இம்மனிதர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுபவரே தவிர வேறில்லை. இவரை நாம் நம்பவே மாட்டோம்'' என்றார்கள்.
آية رقم 39
39. அதற்கவர் ‘‘ என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். நீதான் எனக்கு உதவிசெய்ய வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.
آية رقم 40
40. அதற்கு இறைவன் ‘‘(ஹூதே சிறிது பொறுத்திரும்!) அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்'' என்று கூறினான்.
41. ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது.
آية رقم 42
42. இவர்களுக்குப் பின்னரும் மற்ற வகுப்பினர் பலரை நாம் உற்பத்தி செய்தோம்.
آية رقم 43
43. (அவர்களில் எனக்கு மாறுசெய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) அவர்களது தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (சரியாக அத்தவணையில் அழிந்து விட்டனர்.)
44. பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் அவர்களுடைய தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்.
آية رقم 45
45. பின்னர், மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் வசனங்களைக் கொண்டும், தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் நாம் அனுப்பினோம்.
آية رقم 46
46. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பிவைத்தோம்). அவர்களோ கர்வம் கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.
آية رقم 47
47. நம்மைப் போன்ற மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்.
آية رقم 48
48. ஆகவே, இவ்விருவரையும் பொய்யரென அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டுப் போயினர்.
آية رقم 49
49. அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம். (எனினும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.)
50. மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்.
51. (நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்.
آية رقم 52
52. நிச்சயமாக உங்கள் இந்த மார்க்கம் ஒரே ஒரு வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்'' (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.)
53. எனினும், (யூதர்களும், கிறித்தவர்களும்) தங்கள் வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு (அவர்களில்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்.
آية رقم 54
54. ஆகவே, (நபியே!) நீர் அவர்களை ஒரு காலம் வரை அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுவீராக.
آية رقم 55
55. நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்?
آية رقم 56
56. இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறல்ல! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
آية رقم 57
57. நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்,
آية رقم 58
58. எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கைகொள்கிறார்களோ அவர்களும்,
آية رقم 59
59. எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும்,
60. எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்,
آية رقم 61
61. ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர்.
62. எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
63. எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன.
آية رقم 64
64. ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) பயந்து சப்தமிடுகின்றனர்.
آية رقم 65
65. (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் பயந்து சப்தமிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
66. நிச்சயமாக எனது வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அச்சமயம் (அவற்றைப் புறக்கணித்து) நீங்கள் பின் வாங்கினீர்கள்.
آية رقم 67
67. நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறப்படும்).
68. (நம்) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா?
آية رقم 69
69. அல்லது தங்களிடம் வந்த தூதரை தாங்கள் அறியவில்லை என்பதாக(க் கூறி) அவர்கள் நிராகரிக்கின்றனரா?
70. அல்லது ‘‘ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது'' என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம் தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர்.
71. சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்.
72. அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாகும். அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன் ஆவான்.
آية رقم 73
73. (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான வழிக்கே அழைக்கிறீர்.
آية رقم 74
74. எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ நிச்சயமாக அவர்கள் நேரான வழியைப் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றனர்.
75. நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர்.
آية رقم 76
76. நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை.
77. அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர்.
78. அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவற்றைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
آية رقم 79
79. அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசிக்க வைத்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
80. அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
آية رقم 81
81. என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்.
آية رقم 82
82. (அதாவது:) ‘‘ நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா?'' என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்.
83. ‘‘ நிச்சயமாக நாமும் நம் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்.)
آية رقم 84
84. (ஆகவே நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘பூமியும் அதில் உள்ளவையும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்'' எனக் கேட்பீராக.
آية رقم 85
85. அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேட்பீராக.
آية رقم 86
86. ‘‘ ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?'' என்று கேட்பீராக.
آية رقم 87
87. அதற்கவர்கள் ‘‘அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.
88. ‘‘ எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக் கூறுங்கள்)'' எனக் கேட்பீராக.
آية رقم 89
89. அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனதான்'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்பீராக.
آية رقم 90
90. நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
91. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
آية رقم 92
92. அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவற்றை விட அல்லாஹ் மிக்க மேலானவன்.
آية رقم 93
93. ‘‘என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின்,
آية رقم 94
94. என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக.
آية رقم 95
95. ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உமக்குக் காண்பிக்கவும் ஆற்றலுடையவர்கள் ஆவோம்.
96. (நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீர் தடுத்துக் கொள்வீராக. அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம்.
آية رقم 97
97. ‘‘ என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தான்களுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன்.
آية رقم 98
98. என் இறைவனே! ஷைத்தான்கள் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) பிரார்த்தித்துக் கொண்டிருப்பீராக.
آية رقم 99
99. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.
100. நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்.
101. சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.)
آية رقم 102
102. ஆகவே, எவர்களுடைய நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.
103. எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
آية رقم 104
104. அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அதில் அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும்.
آية رقم 105
105. (அவர்களை நோக்கி) “உங்கள் மீது எனது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்'' (என்று கூறப்படும்.)
آية رقم 106
106. அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்.
آية رقم 107
107. ‘‘எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. மீண்டும் நாங்கள் (பாவத்திற்கு) திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' (என்பார்கள்).
آية رقم 108
108. அதற்கவன் கூறுவான்: ‘‘அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்.''
109. நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
آية رقم 110
110. ஆனால் நீங்களோ என் நினைவை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
آية رقم 111
111. (உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.''
آية رقم 112
112. ‘‘ நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?'' என அவன் கேட்பான்.
آية رقم 113
113. அதற்கவர்கள் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!'' எனக் கூறுவார்கள்.
114. அதற்கவன் ‘‘ ஒரு சொற்ப காலத்தைத் தவிர (பூமியில் அதிக காலம்) நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்.
آية رقم 115
115. (‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.)
116. ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே!
117. (நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு ஓர் இறைவனை அழைக்கிறானோ அவனிடத்தில் அதற்குரிய ஓர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
آية رقم 118
118. (நபியே!) கூறுவீராக: என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கருணை செய்வாயாக! கருணை செய்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.
تقدم القراءة