ترجمة سورة التغابن

الترجمة التاميلية
ترجمة معاني سورة التغابن باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் (தொடர்ந்து) அல்லாஹ்வைத் துதிக்கின்றன. (இவற்றின்) ஆட்சியும் அவனுக்குரியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுடையவன் ஆவான்.
2. அவன்தான் உங்களைப் படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குகிறான்.
3. உண்மையான காரணத்திற்கே வானங்களையும் பூமியையும் படைத்திருக்கிறான். அவனே உங்கள் உருவத்தை அமைத்து, அதை மிக அழகாகவும் ஆக்கிவைத்தான். அவனிடம்தான் (நீங்கள் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.
4. வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவதுடன், நீங்கள் இரகசியமாகச் செய்வதையும் நீங்கள் பகிரங்கமாகச் செய்வதையும் அவன் நன்கறிகிறான். (இது மட்டுமா? உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
5. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் இருந்த நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்கள் தங்கள் தீய செயலின் பலனை (இவ்வுலகில்) அனுபவித்ததுடன், (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
6. இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ ‘‘(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?'' என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடையவனும் ஆவான்.
7. (மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறல்ல. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.”
8. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த (இவ்வேத மென்னும்) பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
9. ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் அவரைப் புகுத்திவிடுகிறான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தான வெற்றியாகும்.
10. எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். அது மகா கெட்ட சேரும் இடமாகும்.
11. அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஒரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
12. அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்.
13. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள்.
14. நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)
15. உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கிறது.
16. ஆதலால், உங்களால் சாத்தியமான வரை அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனு(டைய வசனங்களு)க்குச் செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து, தர்மமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்.
17. அழகான முறையில் அல்லாஹ்வுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். அல்லாஹ் (நன்றியை) அங்கீகரிப்பவனும் மிக்க சகிப்பவனும் ஆவான்.
18. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்.
Icon