ترجمة معاني سورة الحشر باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
عبد الحميد الباقوي
ﰡ
آية رقم 1
1. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
آية رقم 2
2. வேதத்தை உடையவர்களில் எவர்கள் நிராகரிப்பவர்களாக ஆனார்களோ அவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிப்படுத்தியவன் அவன்தான். (அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளில்) இது முதலாவதாகும். அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளிப்பட்டு விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்கள் கோட்டைக் கொத்தளங்கள், அல்லாஹ்வை விட்டுத் தங்களை தடுத்துக் கொள்ளுமென்று மெய்யாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டு, அவர்கள் தங்கள் கையைக் கொண்டே தங்கள் வீடுகளை அழிக்குமாறு செய்ததுடன், நம்பிக்கையாளர்களுடைய கைகளைக் கொண்டும் அவர்களுடைய வீடுகளை அழித்தான். (அகப்)பார்வையுடையவர்களே! (இதைக் கொண்டு) நீங்கள் அறிவுணர்ச்சி பெறுவீர்களாக!
آية رقم 3
3. அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கிறது.
آية رقم 4
4. இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கிறானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்.
آية رقم 5
5. நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவற்றை விட்டுவைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியம் ஆகும்).
آية رقم 6
6. அவர்களிடமிருந்து, அல்லாஹ் தன் தூதருக்கு (சிரமம் ஏதுமின்றி)க் கொடுத்த பொருள்களுக்காக (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் குதிரையின் மீதேறியோ, ஒட்டகத்தின் மீதேறியோ (போர் புரிந்து) சிரமப்படவில்லை. எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது தன் தூதர்களுக்கு ஆதிக்கத்தைக் கொடுப்பான். அல்லாஹ் சகலவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான்.
آية رقم 7
7. அவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகிறான்.) ஆகவே, நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்.
آية رقم 8
8. தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர்.
آية رقم 9
9. முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக் கொண்டார்களே அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத்துச் செய்து தங்களிடம் வருபவர்களை அன்பாக நேசித்து வருவதுடன், (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்)கொடுப்பதைப் பற்றித் தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்கள் பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
آية رقم 10
10. எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்கள் (முஹாஜிர், அன்சாரி) சகோதரர்களையும் மன்னித்தருள்! அந்த நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், மகா கருணையுடையவன்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர்.
آية رقم 11
11. (நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களில் உள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி ‘‘நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு விரோதமாக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் கட்டுப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்'' என்று கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்.
آية رقم 12
12. ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள்.
آية رقم 13
13. அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கிறது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும்.
آية رقم 14
14. அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தபோதிலும், பலமான ஒரு கோட்டைக் குள்ளாகவோ அல்லது மதில்களுக்கப்பாலோ இல்லாமல் (நேருக்கு நேராக) உங்களுடன் போர் புரியமாட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே பெரும் (பகைமையும்) சண்டைகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர். (இல்லை) அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக் கிடக்கின்றன. மெய்யாகவே அவர்கள் (எதையும்) அறிந்துகொள்ள சக்தியற்ற மக்கள் என்பதுதான் இதற்குரிய காரணமாகும்.
آية رقم 15
15. (இவர்களுக்கு உதாரணமாவது:) இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தங்கள் கெட்ட செயல்களின் பலனை (பத்ரு யுத்தத்தில்) அனுபவித்தவர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (மறுமையில்) இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
آية رقم 16
16. (இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கிறது. அவன் மனிதனை நோக்கி ‘‘நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு'' என்று கூறுகிறான். அவ்வாறே அவனும் நிராகரித்து விட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படுகிறேன்'' என்று கூறுவான்.
آية رقم 17
17. நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகி விட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களின் கூலி இதுவேயாகும்.
آية رقم 18
18. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, தான் எதைத் தயார்படுத்தி வைக்கிறான் என்பதைக் கவனித்து கொள்ளட்டும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
آية رقم 19
19. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்)மறந்து விட்டவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், (அதன் காரணமாக) அவர்கள் தம்மையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான். இவர்கள்தான் பெரும்பாவிகள் ஆவார்.
آية رقم 20
20. நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சொர்க்கவாசிகள் தான் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்.)
آية رقم 21
21. (நபியே!) ஒரு மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறக்கிவைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீர் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம்.
آية رقم 22
22. அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன்.
آية رقم 23
23. அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
آية رقم 24
24. அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன்.
تقدم القراءة