ترجمة سورة الدّخان

الترجمة التاميلية
ترجمة معاني سورة الدّخان باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1, 2. ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
1, 2. ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
3. நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.
4. உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
5. (நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம் தூதராக) அனுப்புகிறோம்.
6. (அது) உமது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனும் ஆவான்.
7. நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).
8. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்.
9. எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!
10. (நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக.
11. மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்து கொள்ளும். அது ஒரு துன்புறுத்தும் வேதனையாகும்.
12. (அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்).
13. (அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்.
14. எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர்.
15. (மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்.
16. மிக்க பலமாக (அவர்களை) நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.
17. இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்) தூதர் ஒருவர் வந்தார்.
18. ‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்.
19. அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்.)
20. (அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்.
21. ‘‘நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்'' (என்றும் கூறி),
22. தன் இறைவனை அழைத்து ‘‘நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கிறார்கள்'' என்று கூறினார்.
23. (அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
24. (நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்.)
25. (அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்.
26. இன்னும் எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
27. அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்).
28. இவ்வாறே (நடைபெற்றது). அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.
29. (அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வில்லை.
30. (இவ்வாறே) இழிவு தரும் வேதனையில் இருந்து இஸ்ராயீலின் சந்ததிகளை பாதுகாத்துக் கொண்டோம்.
31. ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் வரம்பு மீறிகளில் ஓர் ஆணவம் கொண்டவனாக இருந்தான்.
32. (இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
33. இன்னும், அவர்களுக்கு (மன்னு ஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவற்றில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.
34. (எனினும்,) நிச்சயமாக (நிராகரிப்பாளர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:
35. ‘‘இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்''
36. (மேலும், நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்'' (என்றனர்).
37. (நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்.
38. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
39. நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை.
40. நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
41. அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.
42. ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
43. நிச்சயமாக (நரகத்திலிருக்கும்)கள்ளி மரம்தான்
44. பாவியின் உணவு.
45. (அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்.
46. சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்).
47. ‘‘அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள்.
48. பிறகு, அவனுடைய தலைக்குமேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்'' (என்று கூறப்படுவதுடன், அவனை நோக்கி ஏளனமாக,)
49. ‘‘நிச்சயமாக நீ மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவன். ஆதலால், நீ (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பார்'' (என்றும் கூறப்படும்)
50. நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தவை.
51. இறையச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்,
52. அதுவும் சொர்க்கச் சோலைகளில், ஊற்றுகளின் சமீபமாக,
53. மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
54. இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). மேலும், ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளாகிய கன்னி)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.
55. அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.
56. முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு ஒரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.
57. (நபியே! இது) உமது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.
58. (நபியே!) அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உமது மொழியில் (இறக்கி அதை) எளிதாக்கி வைத்தோம்.
59. (இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.
Icon