ترجمة سورة الطلاق

الترجمة التاميلية
ترجمة معاني سورة الطلاق باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீர் கூறுவீராக:) “நீங்கள் உங்கள் மனைவிகளை ‘தலாக்கு' (விவாகப்பிரிவினை) செய்ய விரும்பினால், அவர்களுடைய (சுத்த காலமான) ‘இத்தா'வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்கள்) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதான் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறுகிறார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக்கிடையில் (சமாதானத்திற்குரிய) ஒரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.
2. அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்த போதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகிறது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான்.
3. மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.)
4. (தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கை இழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரை மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கிறது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகிறான்.
5. அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த கட்டளை இதுதான். ஆகவே, எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்கிறாரோ, அவருடைய பாவங்களை அவன் மன்னித்து, (அவருடைய) கூலியையும் அவருக்கு பெரிதாக்கி விடுகிறான்.
6. (‘தலாக்' கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்கள்) பெண்களை உங்களால் முடிந்தவரை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம்.
7. (பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன் தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான்.
8. எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம்.
9. ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆகிவிட்டது.
10. (இன்னும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். ஆகவே, நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திரு குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக்கிறான்.
11. (மேலும்), ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கிறான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகிறார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை சொர்க்கங்களில் புகச்செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்.
12. ஏழு வானங்களையும், அவற்றைப்போல் பூமியையும் அல்லாஹ்தான் படைத்தான். இவற்றில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கிறது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கிறான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றைப் படைத்தான்.
Icon