الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الكهف இன் மொழிபெயர்ப்பு
Verse 1
1. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.
Verse 2
2. இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்).
Verse 3
ﯸﯹﯺ
ﯻ
3. அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
Verse 4
ﯼﯽﯾﯿﰀﰁ
ﰂ
4. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.
Verse 5
5. அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை.
Verse 6
6. (நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீர் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உமது உயிரை அழித்துக் கொள்வீரோ! (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்.)
Verse 7
7. பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகத்தான்.
Verse 8
ﭼﭽﭾﭿﮀﮁ
ﮂ
8. (ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்டவெளியாக்கி விடுவோம்.
Verse 9
9. (நபியே! ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம் அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீரா! (அவர்களின் சரித்திரத்தை உமக்கு நாம் கூறுகிறோம்.)
Verse 10
10. (அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
Verse 11
11. ஆதலால், அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை செய்யும்படி) அவர்களுடைய காதுகளைத் தட்டிக் கொடுத்தோம்.
Verse 12
12. அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம்.
Verse 13
13. (நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கைகொண்ட வாலிபர்களாவர். (ஆகவே,) மேலும், நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்.
Verse 14
14. அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள்.
Verse 15
15. ‘‘நமது இந்த மக்கள் அவனைத் தவிர்த்து வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட மகா அநியாயக்காரன் யார்?'' (என்றார்கள்.)
Verse 16
16. அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்).
Verse 17
17. (நபியே! அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீர் காண்பீர்! அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன்தான் நேரான வழியில் செல்வான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீர் காணமாட்டீர்.
Verse 18
18. (நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணுவீர். அவர்களை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதையும் நீர் காண்பீர்). அவர்களை நீர் எட்டிப் பார்த்தால் அவர்களைவிட்டு வெருண்டோடுவீர்; திடுக்கமும் (நடுக்கமும்) உம்மைச் சூழ்ந்துகொள்ளும்.
Verse 19
19. அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)'' என்று கூறினர். (மற்றவர்கள்) ‘‘நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறி ‘‘உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டிணத்திற்கு அனுப்பிவையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கிறது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டிணத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.
Verse 20
20. ஏனென்றால், (ஊர் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள்; அல்லது உங்களை தங்கள் மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (அப்படி நீங்கள் சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்'' (என்றார்கள்).
Verse 21
21. (மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்.
Verse 22
22. (குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தான்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே!) ‘‘அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கையை என் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறுவீராக. இன்னும், அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவே தவிர தர்க்கிக்காதீர். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்.''
Verse 23
23. (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர்.
Verse 24
24. ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக.
Verse 25
25. அவர்கள் குகையில் (சூரிய கணக்கின்படி) முன்னூறு ஆண்டுகள் தங்கி இருந்தனர், (சந்திர கணக்கின்படி 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர்.) மேலும் (சிலர்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தினர்.
Verse 26
26. (நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை.
Verse 27
27. (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட உமது இறைவனின் வேதத்தை நீர் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருப்பீராக! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனைத் தவிர உமக்கு பாதுகாக்கும் எந்த ஓர் இடத்தையும் காணமாட்டீர்.
Verse 28
28. (நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உமது கண்களைத் திருப்பி விடாதீர். தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது.
Verse 29
29. (நபியே!) உமது இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜூவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடமும் மிகக் கெட்டதாகும்.
Verse 30
30. (எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை.
Verse 31
31. இவர்களுக்கு நிலையான சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். இருக்கைகளிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் அனுபவிக்கின்ற இடமும் மிக்க அழகானது.
Verse 32
32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்.
Verse 33
33. அவ்விரு தோட்டங்களிலுமே அதன் பலனை ஒரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்.
Verse 34
34. அவனிடத்தில் இன்னும் (பல) கனி (தரும் மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி ‘‘நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன், மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்'' என்று (கர்வத்துடன்) கூறினான்.
Verse 35
35. பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக ‘‘இவை ஒரு காலத்திலும் அழிந்துவிடுமென நான் நினைக்கவில்லை'' (என்றும்)
Verse 36
36. ‘‘மறுமை நிகழும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்'' என்றும் கூறினான்.
Verse 37
37. அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி ‘‘உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்.
Verse 38
38. எனினும், அந்த அல்லாஹ்தான் என்(னைப் படைத்த) இறைவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்.
Verse 39
39. நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் செய்து விட அறவே (நமக்கு) சக்தி இல்லை? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உன்னைவிட குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும்,
Verse 40
40. உன் தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது ஓர் ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்.
Verse 41
41. அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் ஆக்கிவிடக் கூடும்'' என்றும் கூறினார்.
Verse 42
42. (அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்து விட்டன. ஆகவே, அவற்றில் அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்து கொண்டான். (மறுமையில் இறைவன் முன் அவன் கொண்டுவரப்படும்போது) ‘‘என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?'' என்று (கைசேதப்பட்டு) கூறுவான்.
Verse 43
43. அச்சமயம் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கூட்டமும் (படையும்) அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று.
Verse 44
44. அங்கு எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியன. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன். (இதையும் அவன் அங்கு அறிந்து கொள்வான்).
Verse 45
45. (நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) பின்னர் காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகி விட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Verse 46
46. (ஆகவே,) செல்வமும் ஆண் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்லாதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.
Verse 47
47. (நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடுகின்ற நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.
Verse 48
48. உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். எனினும், (விசாரணைக்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நாளை) உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று அவர்களிடம் கூறப்படும்).
Verse 49
49. (நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான்.
Verse 50
50. வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் என்னைத் தவிர்த்து அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது.
Verse 51
51. நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுதும், அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் நாம் அவர்களை (உதவிக்கு) அழைக்கவில்லை. வழி கெடுக்கின்ற ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம் சகாக்களாக (-உதவியாளர்களாக) ஆக்கிக் கொள்ளவில்லை.
Verse 52
52. (இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்குத் துணையானவை என எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றை நீங்கள் அழையுங்கள்'' என்று கூறுகின்ற ஒரு நாளை (நபியே! அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஆகவே, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. மேலும், நாம் (அவற்றுக்கும்) அவர்களுக்கும் இடையில் (சந்திக்க முடியாத) ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்.
Verse 53
53. குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் ‘‘நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்'' என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காணமாட்டார்கள்.
Verse 54
54. மனிதர்களுக்கு இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.
Verse 55
55. மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன்சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம் வேதனை வரவேண்டும் என்பதற்காகத்தான்.
Verse 56
56. நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம் வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
Verse 57
57. எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) எதையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீர் அவர்களை நேரான வழியில் (எவ்வளவுதான் வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்.
Verse 58
58. ஆனால், (நபியே!) உமது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இதுவரை அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்.
Verse 59
59. பாவம் செய்துகொண்டிருந்த இவ் ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.)
Verse 60
60. மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி ‘‘இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை நான் அடையும் வரை செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்'' என்று கூறியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
Verse 61
61. அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை அடைந்த பொழுது தங்கள் மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (சென்று) விட்டது.
Verse 62
62. (தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி ‘‘நம் காலை உணவை நீர் கொண்டு வா. நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று கூறினார்.
Verse 63
63. அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) ‘‘அந்த கற்பாறை அருகில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) பார்த்தீரா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டு வந்த) மீனை மறந்துவிட்டேன். அதை நான் (உமக்குக்) கூறுவதை ஷைத்தானைத் தவிர (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கொரு வழியை ஏற்படுத்திக்கொண்டது'' என்று கூறினார்.
Verse 64
64. அதற்கு மூஸா ‘‘நாம் தேடிவந்த இடம் அது தான்'' என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடிகளைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்.
Verse 65
65. இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நம் புறத்திலிருந்து (சிறப்பான) ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.
Verse 66
66. மூஸா அவரை நோக்கி ‘‘உமக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக்கூடியதை நீர் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா?'' என்று கேட்டார்.
Verse 67
ﮘﮙﮚﮛﮜﮝ
ﮞ
67. அதற்கவர் ‘‘என்னுடன் இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர்.
Verse 68
68. அவ்வாறிருக்க உமது அறிவுக்கு அப்பாற்பட்டவற்றை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீர் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்'' என்று கூறினார்.
Verse 69
69. அதற்கு மூஸா ‘‘இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர். எந்த விஷயத்திலும் நான் உமக்கு மாறுசெய்ய மாட்டேன்'' என்று கூறினார்.
Verse 70
70. அதற்கு அவர் ‘‘நீர் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உமக்கு அறிவிக்கும் வரை நீர் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்'' என்று சொன்னார்.
Verse 71
71. (இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறியபோது, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா ‘‘இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீர் துவாரமிட்டீர்? நிச்சயமாக நீர் மிக்க அபாயகரமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்'' என்று கூறினார்.
Verse 72
72. அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது என்று நான் கூறவில்லையா?'' என்றார்.
Verse 73
73. (அதற்கு) மூஸா, ‘‘நான் மறந்துவிட்டதைப் பற்றி என்னைக் குற்றம் பிடிக்காதீர். என் விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பும் செய்யாதீர்'' என்று கேட்டுக் கொண்டார்.
Verse 74
74. பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா, ‘‘கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை கொலை செய்து விட்டீர்! நிச்சயமாக ஒரு தகாத காரியத்தையே நீர் செய்து விட்டீர்'' என்று கூறினார்.
Verse 75
75. அதற்கவர் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உம்மால் முடியாது'' என்று நான் உமக்கு (முன்னர்) கூறவில்லையா? என்று கேட்டார்.
Verse 76
76. அதற்கு (மூஸா) ‘‘இதன் பின்னர் நான் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்பேனாயின் நீர் என்னை உம்முடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீர் கடந்து விட்டீர்'' என்று கூறினார்.
Verse 77
77. பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக்கொண்டனர். பிறகு, இருவரும் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டனர். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதை (விழாது) நிறுத்திவைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) ‘‘நீர் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீர் வாங்கியிருக்கலாமே'' என்று கூறினார்.
Verse 78
78. அதற்கவர், ‘‘எனக்கும் உமக்கும் இடையில் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுத்துக்கொள்ள முடியாமல்போன விஷயங்களின் விளக்கத்தை (இதோ) நான் உமக்கு அறிவிக்கிறேன் என்று கூறினார்.
Verse 79
79. (அவர் கூறினார்) ‘‘அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த (சில) ஏழைகளுக்குரியது. அதைக் குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், அது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கிறான். அவன் (நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கிறான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதைக் குறைப்படுத்தினேன்.)
Verse 80
80. (கொல்லப்பட்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.
Verse 81
81. அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனைவிட மேலான, பரிசுத்தமானவனையும் (தாய் தந்தை மீது) அதிகம் அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.
Verse 82
82. அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உமது இறைவன் அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்கள் புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரை அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதைச் செப்பனிட்டேன். இது) உமது இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் விளக்கம் இதுதான்'' (என்று கூறி முடித்தார்).
Verse 83
83. (நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘‘அவருடைய சரித்திரத்தில் (இருந்து) உங்களுக்கு (பயனளிக்கும்) அறிவுரையை ஓதிக் காண்பிக்கிறேன்'' என்று கூறுவீராக.
Verse 84
84. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம்.
Verse 85
ﭜﭝ
ﭞ
85. அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
Verse 86
86. சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்த பொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) ‘‘துல்கர்னைனே! நீர் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்யவும், அல்லது அவர்களுக்கு நன்மை செய்யவும் (இரண்டுக்கும் முழு சுதந்திரம் உமக்கு அளித்திருக்கிறோம்)'' என்று கூறினோம்.
Verse 87
87. ஆகவே அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்'' என்றார்.
Verse 88
88. ‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம் வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்.
Verse 89
ﮖﮗﮘ
ﮙ
89. பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார்.
Verse 90
90. அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை.)
Verse 91
91. (அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம்.
Verse 92
ﯓﯔﯕ
ﯖ
92. பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
Verse 93
93. (அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் பேச்சை (எளிதில்) புரியக்கூடியவர்களாக இருக்கவில்லை.
Verse 94
94. அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா?'' என்று கேட்டார்கள்.
Verse 95
95. அதற்கவர், ‘‘என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது,) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக்கொண்டு எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை (சுவரை) எழுப்பிவிடுகிறேன்'' என்றும்,
Verse 96
96. ‘‘நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்றும் கூறி, ‘‘(அவற்றைக் கொண்டுவந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்'' என்றார். (அதன் பின்னர்) ‘‘செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்'' என்றார்.
Verse 97
97. ‘‘பின்னர், அதைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது'' (என்று கூறினார்).
Verse 98
98. (இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது!'' என்று கூறினார்.
Verse 99
99. அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து விடுவோம்.
Verse 100
ﭱﭲﭳﭴﭵ
ﭶ
100. கண்டிப்பாக, அந்நாளில் நரகத்தை நிராகரிப்பவர்களுக்கு முன்பாக்குவோம்.
Verse 101
101. (அவர்கள்) எனது நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டு விட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்.
Verse 102
102. நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நரகத்தையே தங்குமிடமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
Verse 103
ﮓﮔﮕﮖﮗ
ﮘ
103. ‘‘(பாவமான) செயல்களில் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று, (நபியே!) கேட்பீராக.
Verse 104
104. அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல செயல்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்.
Verse 105
105. இவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்து விட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்த மாட்டோம்.
Verse 106
106. அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர்களுக்குக் கூலி நரகம்தான்.
Verse 107
107. நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர் களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் (உயர்) சொர்க்கங்கள் தங்குமிடங்களாக இருக்கும்.
Verse 108
ﯪﯫﯬﯭﯮﯯ
ﯰ
108. அதில், அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள்.
Verse 109
109. (நபியே!) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் (மை) அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்ட போதிலும்கூட!
Verse 110
110. (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!''
تقدم القراءة