الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா يوسف இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮢﮣﮤﮥﮦﮧ
ﮨ
1. அலிஃப் லாம் றா. இவை (-இந்த அத்தியாயம்) தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
Verse 2
ﮩﮪﮫﮬﮭﮮ
ﮯ
2. (அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.
Verse 3
3. (நபியே!) வஹ்யி மூலம் நாம் உமக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உமக்கு நாம் விவரிக்கிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் இதை அறியாதவராகவே இருந்தீர்.
Verse 4
4. யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில்,
Verse 5
5. (யஅகூப் நபி யூஸுஃபை நோக்கி) ‘‘என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்)'' என்று கூறினார்.
Verse 6
6. மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்).
Verse 7
7. (நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
Verse 8
8. (யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்'' என்றும்,
Verse 9
9. ஆகவே, ‘‘யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்தி விடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மக்களாகி விடுங்கள்'' என்றும் கூறினார்கள்.
Verse 10
10. (அதற்கு) அவர்களில் ஒருவர், ‘‘யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்து விடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்'' என்று கூறினார்.
Verse 11
11. (பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) ‘‘எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்கள் ஆவோம்'' என்றும்,
Verse 12
12. ‘‘நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்'' என்றும் கூறினார்கள்.
Verse 13
13. (அதற்கவர்) ‘‘நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
Verse 14
14. அதற்கவர்கள், ‘‘பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் அப்போது நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்'' என்று கூறி (தங்கள் தந்தையை சம்மதிக்கச் செய்த)னர்.
Verse 15
15. (யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். ‘‘அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்'' என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம்.
Verse 16
ﭤﭥﭦﭧ
ﭨ
16. அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுது கொண்டே வந்தனர்,
Verse 17
17. ‘‘எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.
Verse 18
18. (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு ‘‘அவரை ஓநாய் அடித்துத் தின்னவே) இல்லை'' உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்'' என்று கூறினார்கள்.
Verse 19
19. பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி! இதோ (அழகிய) சிறுவர் ஒருவர்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
Verse 20
20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து ‘‘இவன் தப்பி ஓடி வந்து விட்ட எங்கள் அடிமை'' எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்தவர்களாகவே இருந்தனர்.
Verse 21
21. (அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Verse 22
22. அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்கமுடையவர்களுக்கு இவ்வாறு தான் நாம் கூலி தருகிறோம்.
Verse 23
23. அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்.
Verse 24
24. அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
Verse 25
25. (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா?'' என்று கேட்டாள்.
Verse 26
26. (யூஸுஃப் அதை மறுத்து) ‘‘அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்'' என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: ‘‘அவருடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் இவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (ஆனால்,)
Verse 27
27. அவருடைய சட்டைப் பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால், இவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்'' (என்றார்).
Verse 28
28. (ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) ‘‘நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியே; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது'' என்று கூறி,
Verse 29
29. (யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்.)
Verse 30
30. (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இதை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்.
Verse 31
31. (அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து வந்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியையும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தியையும் கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய் மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
Verse 32
32. அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்.
Verse 33
33. அதற்கவர், ‘‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்.
Verse 34
34. (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Verse 35
35. (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)
Verse 36
36. (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்).
Verse 37
37. (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.
Verse 38
38. என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
Verse 39
39. சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா?
Verse 40
40. அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)
Verse 41
41. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்.)
Verse 42
42. மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னோர். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.
Verse 43
43. (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்.
Verse 44
44. அதற்கவர்கள், ‘‘இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல'' என்று கூறினார்கள்.
Verse 45
45. (யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக் கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) ‘‘அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பிவையுங்கள்'' என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பிவைத்தார்.)
Verse 46
46. (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே! யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்.
Verse 47
47. அதற்கவர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
Verse 48
48. அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் (விதைப்பதற்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.
Verse 49
49. அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்).
Verse 50
50. (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்.
Verse 51
51. (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்.
Verse 52
52. (இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்).
Verse 53
53. ‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்.)
Verse 54
54. (யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) ‘‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்'' என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) ‘‘நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்'' என்றார்.
Verse 55
55. (அதற்கவர்) ‘‘தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுவீராக. நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்'' என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.)
Verse 56
56. யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.
Verse 57
57. எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.)
Verse 58
58. ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தான் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை.
Verse 59
59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு ‘‘மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்த போதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா?
Verse 60
60. நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிட்டால் என்னிடமுள்ள (தானியத்)தை உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது'' என்று கூறினார்.
Verse 61
ﯣﯤﯥﯦﯧﯨ
ﯩ
61. அதற்கவர்கள் ‘‘நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்'' என்று கூறினார்கள்.
Verse 62
62. (பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதை அறிந்துகொண்டு (அதை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்'' என்று கூறினார்.
Verse 63
63. (தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவைப்பீராக. நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்'' என்று கூறினார்கள்.
Verse 64
64. (அதற்கு யஅகூப்) ‘‘இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்'' என்று கூறிவிட்டார்.
Verse 65
65. பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு ‘‘எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டு விட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்'' என்று கூறினார்கள்.
Verse 66
66. (அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கின்ற வரை நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்'' என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே, அதற்கு அவர் ‘‘நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்'' என்று கூறினார். (பிறகு, புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.)
Verse 67
67. பின்னும் (அவர்களை நோக்கி) ‘‘என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் எதையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்புபவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்'' என்றார்.
Verse 68
68. (எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த (ஓர்) எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய (விதியில் உள்ள எந்த) ஒரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. (ஏனென்றால், இறுதியாக புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதை) அறிந்தவராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதை) அறியாதவர்களாகவே இருந்தனர்.
Verse 69
69. அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உமது சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்'' என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உம்மை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.)
Verse 70
70. பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன் சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்து விட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) ‘‘ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்'' என்று சப்தமிட்டான்.
Verse 71
ﭡﭢﭣﭤﭥ
ﭦ
71. அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து ‘‘நீங்கள் எதை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்டார்கள்.
Verse 72
72. அதற்கவர்கள், ‘‘அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதை எவர் (தேடிக்) கொடுத்த போதிலும் அவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி'' என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.
Verse 73
73. அதற்கு இவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். மேலும், நாங்கள் திருடுபவர்களும் அல்ல'' என்று கூறினார்கள்.
Verse 74
ﮁﮂﮃﮄﮅﮆ
ﮇ
74. அதற்கு அவர்கள் ‘‘நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?'' என்று கேட்டனர்.
Verse 75
75. அதற்கவர்கள் ‘‘எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்'' என்று கூறினார்கள்.
Verse 76
76. பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலே தவிர அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும்விட மேலான கல்விமான்.)
Verse 77
77. (புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக் கொண்டு ‘‘நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதை அல்லாஹ் நன்கறிவான்'' என்று கூறிவிட்டார்.
Verse 78
78. அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) ‘‘அஜீஸே! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீர் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக்கொள்வீராக. நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்'' என்று கூறினார்கள்.
Verse 79
79. அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு அல்லாஹ் எங்களைக் காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நாம் பெரும் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்'' என்று கூறிவிட்டார்.
Verse 80
80. அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை அல்லது அல்லாஹ் எனக்கு ஒரு தீர்ப்பளிக்கும் வரை இங்கிருந்து நான் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்'' என்று கூறினார்.
Verse 81
81. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே தவிர (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;
Verse 82
82. (நாங்கள் சொல்வதை நீர் நம்பாவிட்டால்) நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீர் கேட்டறிந்து கொள்வீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்'' (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)
Verse 83
83. (ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் ‘‘நீங்கள் கூறுவது சரியல்ல!) மாறாக, உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' என்று கூறிவிட்டு,
Verse 84
84. அவர்களை விட்டுவிலகிச் சென்று, ‘‘யூஸுஃபைப் பற்றி என் துக்கமே!'' என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.
Verse 85
85. (இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள்.
Verse 86
86. அதற்கவர் ‘‘என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன்.
Verse 87
87. என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப்பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்'' என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.
Verse 88
88. பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்.
Verse 89
89. (அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்.
Verse 90
90. அதற்கவர்கள் (திடுக்கிட்டு) ‘‘மெய்யாகவே நீர் யூஸுஃபாக இருப்பீரோ?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை'' என்று கூறினார்.
Verse 91
91. அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)'' என்று கூறினார்கள்.
Verse 92
92. அதற்கவர் ‘‘இன்றைய தினம் உங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று கூறினார்.
Verse 93
93. ‘‘நீங்கள் என் இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்'' என்று கூறி (அனுப்பி)னார்.
Verse 94
94. அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (‘‘இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமலிருக்க வேண்டுமே!'' என்றார்.
Verse 95
ﯸﯹﯺﯻﯼﯽ
ﯾ
95. (இதைச் செவியுற்ற அவருடைய மக்கள்) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீர் உமது பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்'' என்று கூறினார்கள்.
Verse 96
96. அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று கேட்டார்.
Verse 97
97. (அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) ‘‘எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீர் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்'' என்று (அவர்களே) கூறினார்கள்.
Verse 98
98. அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்.
Verse 99
99. (பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து) மிக மரியாதையுடன் வரவேற்று ‘‘(அல்லாஹ்வின் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்'' என்று கூறினார்.
100. பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதை செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) ‘‘என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவன். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்'' என்றார்.
Verse 101
101. ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)
Verse 102
102. (நபியே) இது (நீர் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவற்றை நாம் உமக்கு வஹ்யி மூலமே அறிவித்தோம்.
Verse 103
ﰇﰈﰉﰊﰋﰌ
ﰍ
103. நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அந்த)மனிதரில் பெரும் பாலானவர்கள் (உம்மை நபி என்று) நம்பவே மாட்டார்கள்.
Verse 104
104. இதற்காக நீர் அவர்களிடத்தில் ஒரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே தவிர வேறில்லை.
Verse 105
105. (இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்.
Verse 106
106. அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை, அவர்கள் அவனுக்கு இணைவைத்தே தவிர.
Verse 107
107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
Verse 108
108. (நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.''
Verse 109
109. உமக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த ஆடவர்களே தவிர வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம் கட்டளைகளை) வஹ்யி மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டு கொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறையச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவுகூட நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
Verse 110
110. நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும்வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது.
Verse 111
111. அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.
تقدم القراءة