الترجمة التاميلية இலிருந்து التاميلية மொழியில் சூரா الممتحنة இன் மொழிபெயர்ப்பு
1. நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக் கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள்)என் திருப்பொருத்தத்தை விரும்பி, என் பாதையில் போர் புரிய மெய்யாகவே நீங்கள் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறியிருந்தால், அவர்களுடன் நீங்கள் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் மறைத்துக் கொள்வதையும், இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். (இவ்வாறு) உங்களில் எவரேனும் செய்தால், நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார்.
Verse 2
2. அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்கள் கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். மேலும், நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
Verse 3
3. (அவர்களுடன் இருக்கும்) உங்கள் சந்ததிகளும், உங்கள் பந்துத்துவமும் மறுமைநாளில் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
4. இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தம் மக்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குகிறவற்றிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவற்றையும்) நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். மேலும் இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி ‘‘அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) எதையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும், உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்'' என்று கூறி, ‘‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கிறது'' (என்றும்),
Verse 5
5. ‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்'' (என்றும்) பிரார்த்தித்தார்.
Verse 6
6. நிச்சயமாக அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மெய்யாகவே நம்புகிற உங்களுக்கு இவர்களில் அழகான முன்னுதாரணம் இருக்கிறது. எவர் புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களின்) தேவையற்றவன், மிக புகழுடையவன் ஆவான்.
Verse 7
7. உங்களுக்கும், அவர்களில் உள்ள உங்கள் எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
Verse 8
8. (நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான்.
Verse 9
9. அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார்களோ, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
10. நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கைகொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்கள் பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம். இது அல்லாஹ்வுடைய கட்டளை. அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனும் ஆவான்.
Verse 11
11. உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கைகொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்று விட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்.
Verse 12
12. நபியே! நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, ‘‘அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை, திருடுவதில்லை, விபசாரம் செய்வதில்லை, தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை, தங்கள் கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை'' என்று உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீர் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களை) அல்லாஹ்விடம் மன்னிக்கக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
Verse 13
13. நம்பிக்கையாளர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபப்பட்டானோ அவர்களை நீங்கள் நேசிக்காதீர்கள். சமாதிகளில் இருப்பவர்களைப்பற்றி நிராகரிப்பவர்கள் (அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட மாட்டார்கள் என) நம்பிக்கை இழந்தபடியே, மறுமையைப் பற்றி நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
تقدم القراءة