ترجمة سورة الأحقاف

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة الأحقاف باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வழிகேட்டில் ஆக்கிவிட்டான்.
மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்படுகிறது.
வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணைக்கும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள் தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதை புறக்கணிக்கின்றார்கள்.
(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! “அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு காண்பியுங்கள்? அல்லது வானங்களில் (-அவற்றைப் படைத்ததில்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கின்றதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை அல்லது (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால்.
அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைகின்றவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ அவர்களுக்கு (-அழைக்கப்படுபவர்கள் அழைப்பவர்களுக்கு) மறுமை நாள் வரை பதில் அளிக்க மாட்டார்கள். அவர்கள் அவர்களின் (-அழைக்கப்படுபவர்கள் அழைப்பவர்களின்) துஆவை (-அழைப்பை, பிரார்த்தனையை) அறிய மாட்டார்கள்.
மக்கள் எழுப்பப்படும்போது அவர்கள் (-வணங்கப்பட்டவர்கள்) அவர்களுக்கு (-வணங்கியவர்களுக்கு) எதிரிகளாக ஆகிவிடுவார்கள். இன்னும், அவர்கள் (-மக்கள்) தங்களை வணங்கியதை மறுப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.
இவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவான அத்தாட்சிகளாக ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இது தெளிவான சூனியமாகும்” என்று சத்தியத்தை (-குர்ஆனையும் நபியின் மற்ற அற்புதங்களையும்) பார்த்து அது அவர்களிடம் வந்த போது நிராகரித்தவர்கள் கூறினார்கள்:
இதை இவர் (-நமது தூதர்) இட்டுக்கட்டினார் என்று கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் (அதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கும் போது) அல்லாஹ்விடமிருந்து எனக்காக எதையும் (பரிந்துரை செய்ய) நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்களோ அதை அவன் மிக அறிந்தவன் ஆவான். எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அவனே சாட்சியால் போதுமானவன். அவன்தான் மகா மன்னிப்பாளன் மகா கருணையாளன் ஆவான்.
(நபியே!) கூறுவீராக! நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. எனக்கு என்ன செய்யப்படும் உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகின்றதோ அதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.
(நபியே!) கூறுவீராக! இது (-இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருந்தால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்ற ஒன்றுக்கு சாட்சியும் கூறி, (அவர் இதை) நம்பிக்கை கொண்டிருக்க, (ஆனால்,) நீங்களோ பெருமை அடித்து, இதை நீங்கள் நிராகரித்து விட்டால்... (இதை விட பெரிய அநியாயம் வேறென்ன இருக்க முடியும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
நிராகரித்தவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: இது (-இந்த வேதமும் இந்த மார்க்கமும்) சிறந்ததாக இருந்தால் இவர்கள் (இந்த பாமர மக்கள்) இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் மூசாவின் வேதம் ஒரு முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கின்றது. (அதையும் நாம்தான் இறக்கினோம்.) இதுவோ (முந்திய வேதங்களை) மெய்ப்பிக்கக்கூடிய அரபி மொழியில் உள்ள ஒரு வேதமாகும், அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாகவும் (இதையும் நாம்தான் இறக்கினோம்).
நிச்சயமாக, எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, பிறகு (தங்களது நம்பிக்கையிலும் மார்க்கத்திலும்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது பயமில்லை, அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்கு (-நன்மைகளுக்கு) கூலியாக அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
மனிதனுக்கு நாம் உபதேசித்தோம்: - “தன் பெற்றோருக்கு நன்மை செய்வதற்கு.” அவனது தாய் அவனை சிரமத்துடன் (வயிற்றில்) சுமந்தாள். சிரமத்துடன் அவனை ஈன்றெடுத்தாள். அவனை (அவள்) சுமந்ததும் அவனுக்கு (அவள்) பால் குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். இறுதியாக, அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள் புரிந்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ திருப்திபடுகின்ற நல்ல அமலை நான் செய்வதற்கும் என்னைத்தூண்டுவாயாக! என் சந்ததியில் எனக்கு சீர்திருத்தம் செய்! நிச்சயமாக நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாவேன்.
இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், இவர்கள் செய்தவற்றில் மிக அழகானதை நாம் இவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்வோம். இவர்களின் பாவங்களை நாம் மன்னித்து விடுவோம். இவர்கள் சொர்க்க வாசிகளில் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உண்மையான வாக்காகும் இது.
எவர் தனது பெற்றோரை நோக்கி உங்கள் இருவருக்கும் “ச்சீ” கேவலம், நான் (இறந்த பின்னர் மண்ணறையில் இருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவேன் என்று என்னை எச்சரிக்கிறீர்களா? எனக்கு முன்னர் பல தலைமுறைகள் திட்டமாக சென்றுள்ளனர். அவ்விருவரும் (அவனது தாய், தந்தையும்) அல்லாஹ்விடம் (அவனது நேர்வழிக்காக) உதவி தேடுகின்றனர். (தங்களது மகனை நோக்கி) “உனக்கு என்ன கேடு! நீ நம்பிக்கை கொள்! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே!” (என்று கூறினார்கள்). அதற்கு அவன் கூறுகிறான்: “இது (-நீங்கள் கூறுவதைப் போன்று மறுமையில் எழுப்பப்படுவதும் சொர்க்கமும் நரகமும்) முன்னோரின் கதைகளே தவிர வேறு இல்லை.”
இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின், மற்றும் மனித சமுதாயங்களுடன் இவர்கள் மீதும் (அல்லாஹ்வுடைய தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிட்டது. “நிச்சயமாக இவர்கள் (-நிராகரிப்பாளர்களான முன்னோரும் பின்னோரும்) நஷ்டவாளிகளாகவே இருகின்றனர்.”
(நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இவர்கள்) எல்லோருக்கும் அவர்கள் செய்தவற்றின் (-அவர்களுடைய செயல்களின்) அடிப்படையில் தகுதிகள் உண்டு. இன்னும், இறுதியாக அவன் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான். இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
நிராகரிப்பாளர்கள் நரகின் முன் சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில், (அவர்களுக்கு கூறப்படும்:) “நீங்கள் உங்கள் நன்மைகளை உங்கள் உலக வாழ்க்கையிலே போக்கிக் கொண்டீர்கள் (அவற்றை அனுபவித்து முடித்து விட்டீர்கள்). அவற்றின் மூலம் (உலகத்தில்) இன்பம் அடைந்தீர்கள். ஆகவே, பூமியில் நீங்கள் அநியாயமாக பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் நீங்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்றைய தினம் கேவலமான தண்டனையை கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்.”
(நபியே!) ஆது சமுதாயத்தின் சகோதரரை (நபி ஹூதை) நினைவு கூர்வீராக! அவர் தனது மக்களை மணல் பாங்கான இடத்தில் (உள்ள அவர்களது இல்லங்களுக்கு அருகில் வைத்து) எச்சரித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இவருக்கு முன்னரும் இவருக்குப் பின்னரும் எச்சரிப்பாளர்கள் திட்டமாக சென்றுள்ளனர். (அவர் எச்சரித்து கூறியதாவது:) “அல்லாஹ்வை அன்றி யாரையும் நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய நாளின் தண்டனையை பயப்படுகின்றேன்.”
அவர்கள் கூறினர்: “நீர் எங்களை எங்கள் தெய்வங்களை விட்டு திருப்புவதற்காக எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளர்களில் இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக!”
அவர் கூறினார்: (உங்கள் முடிவைப் பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். என்றாலும், நீங்கள் அறியாத மக்களாக இருப்பதாகவே நான் உங்களை கருதுகிறேன்.
அவர்கள் அதை (-அல்லாஹ்வின் வேதனையை) தங்களது பள்ளத் தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (ஆது நபி கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை) மாறாக, இது நீங்கள் எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். இதில் வலி தரக்கூடிய தண்டனை இருக்கிறது.
இது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் சின்னாபின்ன மாக்கிவிடும் (நாசமாக்கிவிடும்). அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர (வேறு எதையும்) பார்க்க முடியாதபடி அவர்கள் ஆகிவிட்டனர். (அவர்கள் எல்லோரும் அழிந்துவிட்டனர். அவர்கள் வசித்த வீடுகளின் இடிபாடுகள் மட்டும் மிஞ்சி இருக்கின்றன.) இவ்வாறுதான் குற்றவாளிகளான மக்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
உங்களுக்கு நாம் எதில் வசதியளிக்கவில்லையோ அதில் (எல்லாம்) அவர்களுக்கு நாம் வசதியளித்தோம். இன்னும், அவர்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தபோது அவர்களின் செவியும் அவர்களின் பார்வைகளும் அவர்களின் உள்ளங்களும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்கவில்லை. அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தார்களோ அது (-அல்லாஹ்வின் தண்டனை) அவர்களை சூழ்ந்து கொண்டது.
ஊர்களில் உங்களை சுற்றி உள்ளவற்றை நாம் திட்டவட்டமாக அழித்தோம். அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் விவரித்தோம்.
அல்லாஹ்வை அன்றி இவர்கள் வழிபாட்டுக்காக எவர்களை தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? மாறாக, அவர்கள் (-தெய்வங்கள்) இவர்களை (-வணங்கியவர்களை) விட்டு மறைந்து விட்டனர். இது (-சிலை வணக்க வழிபாடு) இவர்களின் பொய்யும் இன்னும் இவர்கள் (எதை) இட்டுக் கட்டுபவர்களாக இருந்தார்களோ அதுவுமாகும். (பல தெய்வ வழிபாடும் சிலை வழிபாடுகளும் மனிதர்கள் பொய்யாக இட்டுக்கட்டியதும் அவர்கள் கற்பனை செய்ததும்தான். அவற்றுக்கு எவ்வித உண்மை ஆதாரம் இல்லை.)
ஜின்களின் சில நபர்களை உம் பக்கம் நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக! அவர்கள் (நீர் ஓதுகின்ற) குர்ஆனை செவிமடுக்கின்றனர். அவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது, வாய்மூடி இருங்கள்! என்று (தங்களுக்குள்) கூறினார்கள். (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்ட போது அவர்கள் தங்களது சமுதாயத்தினர் பக்கம் (அவர்களை) எச்சரிப்பவர்களாகத் திரும்பினார்கள்.
(அந்த ஜின்கள்) கூறினார்கள்: எங்கள் சமுதாயமே! மூசாவிற்கு பின்னர் தனக்கு முந்தியவற்றை (-முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். உண்மைக்கும் மிக நேரான பாதைக்கும் அது வழி காட்டுகிறது.
“எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தாருங்கள்! (அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!) அவரை நம்பிக்கை கொள்ளுங்கள்! (அவர் கொண்டு வந்த குர்ஆனையும் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்!) அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வலிமிக்க தண்டனையில் இருந்து உங்களை பாதுகாப்பான்.
எவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தரவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வின் பிடியை விட்டு எங்கும்) தப்பித்துவிட மாட்டார். அவனை அன்றி அவருக்கு பாதுகாவலர்கள் இல்லை. இப்படிப்பட்டவர்கள் மிகத் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றனர்.
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைத்ததால் கலைத்துவிடாதவனுமாகிய அல்லாஹ் இறந்தவர்களை உயிர்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? ஏன் இல்லை. நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
அந்நாளில், நிராகரித்தவர்கள் நரகத்தின் முன் கொண்டுவரப்படும் (அவர்களுக்கு கூறப்படும்): “இது உண்மையாக இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை?” எங்கள் இறைவன் மீது சத்தியமாக (இது உண்மைதான்)” (அல்லாஹ்) கூறுவான்: “நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் இந்த வேதனையை நீங்கள் சுவையுங்கள்!”
தூதர்களில் மிகவும் வீரமிக்கவர்கள் (-மிக உறுதியுடையவர்கள்) பொறுத்தது போன்று (நபியே!) நீரும் பொறுமை காப்பீராக! அவர்களுக்காக (- நிராகரிப்பாளர்களுக்காக வேதனையை) அவசரமாக கேட்காதீர்! அவர்கள் எச்சரிக்கப்பட்டதை அவர்கள் பார்க்கின்ற நாளில் பகலில் சில மணிநேரம் தவிர அவர்கள் (இவ்வுலகில்) தங்கவில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். இது (-இந்த குர்ஆன்) எடுத்து சொல்லப்படும் செய்தியாகும். (அல்லாஹ்வின் தண்டனை வரும்போது) பாவிகளான மக்களைத் தவிர மற்றவர்கள் அழிக்கப்படுவார்களா? (இல்லை, பாவிகள்தான் அழிக்கப்படுவார்கள்.)
Icon