ترجمة سورة القصص

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة القصص باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

அலிஃப் லாம் மீம்.
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
மூசா மற்றும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையாக உம்மீது நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்காக நாம் ஓதுகிறோம்.
நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை) பலவந்தப்படுத்தினான். அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்றான். அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிட்டான். நிச்சயமாக அவன் கெட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
இன்னும் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை அரசர்களாக நாம் ஆக்குவதற்கும் அவர்களை (ஃபிர்அவ்னின்) வாரிசுகளாக (-ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டதன் பின்னர் அவனுடைய பூமிக்கும் சொத்துகளுக்கும் சொந்தக்காரர்களாக) நாம் ஆக்குவதற்கும் நாடினோம்.
இன்னும் (அவனுடைய) பூமியில் அவர்களுக்கு நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் இராணுவங்களுக்கு அவர்கள் மூலமாக (-இஸ்ரவேலர்கள் மூலமாக) அவர்கள் அச்சப்பட்டுக் கொண்டு இருந்ததை நாம் காண்பிப்பதற்கும் (நாடினோம்).
மூசாவின் தாயாருக்கு (மூசாவை அவர் பெற்றெடுத்த பின்னர்) நாம் உள்ளத்தில் போட்டோம்: “நீ அவருக்கு (-குழந்தை மூசாவிற்கு) பாலூட்டு! அவர் மீது (எதிரிகளின் பார்வை பட்டுவிடும் என்று) நீ பயந்தால் அவரை கடலில் எரிந்து விடு! பயப்படாதே! கவலைப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் திரும்பக் கொண்டு வருவோம். இன்னும், அவரை தூதர்களில் (ஒருவராக) ஆக்குவோம்.
ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர் முடிவில் அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் ஆகுவதற்காக. நிச்சயமாக ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் ராணுவங்கள் பாவிகளாகவே இருந்தனர். (ஆகவே, அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் மாறினார்.)
ஃபிர்அவ்னின் மனைவி கூறினாள்: “(இந்தக் குழந்தை) எனக்கும் உனக்கும் கண்குளிர்ச்சியாகும். அதைக் கொல்லாதீர்கள்! அது நமக்கு நன்மை தரலாம். அல்லது அதை நாம் (நமக்கு) பிள்ளையாக வைத்துக் கொள்ளலாம்.” இன்னும் (இவரின் கரத்தினால்தான் தங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதை அப்போது) அவர்கள் உணரவில்லை.
மூசாவின் தாயாருடைய உள்ளம் (மூசாவின் நினைவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும்) வெறுமையாக ஆகிவிட்டது. அவள் நம்பிக்கையாளர்களில் ஆகவேண்டும் என்பதற்காக அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தவில்லையெனில் நிச்சயமாக அவள் அவரை (-மூஸாவை) வெளிப்படுத்தி இருக்கக்கூடும்.
அவள் (-மூசாவின் தாயார்) அவருடைய சகோதரிக்கு “நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறினாள். ஆக, அவள் அவரை தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார் இவள் அவருடைய சகோதரி என்பதை) உணரவில்லை.
இன்னும் (அவருடைய தாயாருக்கு) முன்னர் பால் கொடுப்பவர்களை (அவர்களிடமிருந்து பால் அருந்துவதை) அவர் மீது நாம் தடுத்துவிட்டோம். (அவரது சகோதரி) கூறினாள்: ஒரு வீட்டாரை நான் உங்களுக்கு அறிவிக்கலாமா? அவர்கள் உங்களுக்காக அவரை பொறுப்பேற்பார்கள். அவர்கள் அவருக்கு (-மன்னருக்கு) நன்மையை நாடுபவர்கள் ஆவர்.
அவரை அவருடைய தாயாரிடம் நாம் திரும்பக் கொண்டுவந்தோம் அவளது கண் குளிர்வதற்காகவும், அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை அவள் அறிவதற்காகவும். என்றாலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறியமாட்டார்கள்.
அவர் தனது வலிமையை அடைந்து (பின்னர் நாற்பது வயதை அடைந்து) அவர் முழுமை பெற்றபோது அவருக்கு (முந்திய நபிமார்களின் மார்க்கத்தைப் பற்றிய) ஞானத்தையும் (விளக்கத்தையும் முந்திய வேதங்கள் பற்றிய) அறிவையும் நாம் தந்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
அவர் (மூசா) நகரத்தில் -அதன் வாசிகள் கவனமற்று இருந்த நேரத்தில்- நுழைந்தார். அதில் இருவரைக் கண்டார். அவ்விருவரும் சண்டை செய்தனர். இவர் அவருடைய (-மூஸாவுடைய) பிரிவை சேர்ந்தவர். இன்னும் இவரோ அவருடைய (-மூஸாவுடைய) எதிரிகளில் உள்ளவர். இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக அவரிடம் (மூஸாவிடம்) உதவி கேட்டான். மூஸா அவனை குத்து விட்டார். அவனுடைய கதையை முடித்து விட்டார். (தான் செய்த தவறை உணர்ந்த அவர்) கூறினார்: இது ஷைத்தானின் செயலில் உள்ளது. நிச்சயமாக அவன் தெளிவான வழி கெடுக்கின்ற எதிரி ஆவான்.
(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு அநீதி இழைத்தேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன்,மகா கருணையாளன்.
(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததின் மீது சத்தியமாக, ஆகவே, குற்றவாளிகளுக்கு உதவுபவனாக (இனி ஒருக்காலும்) நான் ஆகவே மாட்டேன்.”
(அந்)நகரத்தில் பயந்தவராக (செய்திகளை) எதிர் பார்த்தவராக (மறுநாள்) காலையில் அவர் இருந்தார். அப்போது நேற்று அவரிடத்தில் உதவி தேடியவன் (இன்றும்) அவரை உதவிக்கு கத்தி அழைத்தான். அவனுக்கு மூசா கூறினார்: “நிச்சயமாக நீ ஒரு தெளிவான மூடன் ஆவாய்.”
ஆக, அவர் அவர்கள் இருவருக்கும் எதிரியாக உள்ளவனை தண்டிக்க நாடியபோது அவன் கூறினான்: “மூஸாவே! நீ என்னை கொல்ல நாடுகிறாயா? நேற்று ஓர் உயிரை நீ கொன்றது போன்று. நீ நாடவில்லை பூமியில் அநியாயக்காரனாக (அடக்கு முறையாளனாக, வன்முறையாளனாக) ஆகுவதைத் தவிர. சீர்திருத்தவாதிகளில் நீ ஆகுவதை நாடவில்லை.”
நகரத்தின் இறுதியிலிருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்து கூறினார்: “மூசாவே! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் உம்மைக் கொல்வதற்கு உமக்காக ஆலோசிக்கின்றனர். ஆகவே, நீர் வெளியேறிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு (ஆலோசனை கூறியதில்) நன்மையை நாடுபவர்களில் ஒருவன்.”
ஆக, அவர் (தனது குற்றத்தை) பயந்தவராக (தன்னைத் துரத்தி பிடிக்க வருபவர்களை) எதிர்பார்த்தவராக அதிலிருந்து வெளியேறினார். அவர் கூறினார்: என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்!
மேலும், அவர் மத்யன் நகரத்தின் பக்கம் முன்னோக்கிச் சென்றபோது கூறினார்: “என் இறைவன் எனக்கு நேரான பாதையை வழிகாட்டுவான்.”
அவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் மக்களில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் அன்றி (தங்கள் ஆடுகளை மக்களை விட்டும் அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினர்: “நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட மாட்டோம். மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளை இங்கிருந்து) வெளியேற்றாதவரை. எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார்.
ஆகவே, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலின் பக்கம் (அதில் அமர்ந்து இளைப்பாறுவதற்காக) திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் (-நல்ல உணவின் பக்கம்) நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளிப்பாயாக!)
அவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்தவளாக) வெட்கத்துடன் நடந்தவளாக வந்து கூறினாள்: “நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார் நீ எங்களுக்காக நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக. அவர் அவரிடம் வந்து, (தனது) வரலாற்றை விவரித்த போது அவர் (-அப்பெண்ணின் தந்தை) கூறினார்: பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.
அவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! அவரை பணியில் அமர்த்துவீராக! நீர் பணியில் அமர்த்தியவர்களில் சிறந்தவர் (இந்த) நம்பிக்கையாளரான பலசாலி ஆவர்.
அவர் கூறினார்: நான் எனது இந்த இரண்டு பெண்பிள்ளைகளில் ஒருத்தியை உனக்கு மணமுடித்துத்தர விரும்புகிறேன். நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் (என் கால்நடைகளை மேய்ப்பதை) எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும் என்ற நிபந்தனையின் மீது. நீ (எட்டுக்குப் பதிலாக) பத்து ஆண்டுகளை பூர்த்திசெய்தால் அது உன் புறத்திலிருந்து (நீ செய்யும் உதவியாகும்). நான் உன்மீது சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் நீ காண்பாய்.
அவர் (-மூசா) கூறினார்: இது (நாம் செய்த இந்த ஒப்பந்தம்) எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் உள்ளதாகும். (இருவரும் அதை சரியாக நிறைவேற்றுவது கடமையாகும்.) இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது வரம்பு மீறுதல் கூடாது. (அதைவிட அதிகம் என்னிடம் கேட்கக்கூடாது.) நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான்.
மூசா (அந்த) தவணையை முடித்து, தனது குடும்பத்தினரோடு (புறப்பட்டு) சென்றபோது மலையின் அருகில் நெருப்பைப் பார்த்தார். தனது குடும்பத்தினரிடம் கூறினார்: “நீங்கள் தாமதியுங்கள், நிச்சயமாக நான் ஒரு நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது நீங்கள் குளிர்காய்வதற்காக நெருப்பின் கங்கை (-கொள்ளிக் கட்டையை) நான் உங்களிடம் கொண்டு வருகிறேன்.”
அவர் அதனிடம் (அந்த நெருப்புக்கு அருகில்) வந்தபோது பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து அந்த மரத்தின் புனித இடத்தில் (இவ்வாறு) சப்தமிட்டு அழைக்கப்பட்டார்: அதாவது, “மூசாவே! நிச்சயமாக நான்தான் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் ஆவேன்.”
“இன்னும், உமது கைத்தடியை எறிவீராக!” ஆக, அவர் அது ஒரு பெரிய பாம்பைப்போன்று நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டவராக திரும்பி ஓடினார். அவர் (பயத்தால் திரும்பி) பார்க்கவில்லை. “மூஸாவே! முன்னே வருவீராக! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்.”
“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது குறை இன்றி (மின்னும்) வெண்மையாக வெளிவரும். (பாம்பைப் பார்த்து நீர்) பயந்து விட்டதால் உமது கையை உம்முடன் அணைப்பீராக! (அந்த பயம் போய்விடும்.) ஆக, இவை இரண்டும் உமது இறைவன் புறத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக செல்வதற்குரிய) இரண்டு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருக்கின்றனர்.” (இவ்வாறு அல்லாஹ் மூசாவிடம் கூறினான்.)
அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் அவர்களில் ஓர் உயிரைக் கொன்றுள்ளேன். ஆகவே, அவர்கள் என்னை (பழிக்குப்பழி) கொல்வதை நான் பயப்படுகிறேன்.”
“எனது சகோதரர் ஹாரூன் அவர் என்னைவிட தெளிவான நாவன்மை உடையவர். ஆகவே, அவரை என்னுடன் உதவியாக அனுப்பு! அவர் என்னை உண்மைப்படுத்துவார். நிச்சயமாக நான் அவர்கள் என்னை பொய்ப்பிப்பதைப் பயப்படுகிறேன்.”
அவன் (-அல்லாஹ்) கூறினான்: உமது புஜத்தை உமது சகோதரரைக் கொண்டு பலப்படுத்துவோம். உம் இருவருக்கும் ஓர் அத்தாட்சியை ஆக்குவோம். ஆகவே, அவர்கள் உங்கள் இருவர் பக்கம் (எந்த தீங்கையும் கொண்டு) வரமுடியாது. நீங்கள் இருவரும் உங்களை பின்பற்றியவர்களும் தான் நமது அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும்) மிகைத்தவர்கள்.
ஆகவே, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூசா வந்தபோது அவர்கள் கூறினர்: “இது (நீர்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை. எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
மூசா கூறினார்: “என் இறைவன் அவனிடமிருந்து நேர்வழியுடன் வந்தவரையும் மறுமையின் (நல்ல) முடிவு யாருக்கு இருக்குமோ அரையும் நன்கறிந்தவன். நிச்சயமாக, அநியாயக்காரர்கள் (-நிராகரிப்பாளர்கள்) வெற்றிபெற மாட்டார்கள்.”
ஃபிர்அவ்ன் கூறினான்: “பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுள் உங்களுக்கு இருப்பதை நான் அறியமாட்டேன். ஆகவே, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். முகடுள்ள ஒரு உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூசாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.” (அவ்வாறு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஏறி, வானத்தை நோக்கி அவன் அம்பெறிய, அது இரத்தக் கரையுடன் திரும்பி வந்தவுடன், நான் மூசாவின் இறைவனை கொன்றுவிட்டேன் என்றான்.)
அவனும் அவனுடைய ராணுவங்களும் பூமியில் நியாயமின்றி (சத்தியத்தை ஏற்காமல்) பெருமையடித்தனர். நிச்சயமாக அவர்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்.
ஆகவே, அவனையும் அவனுடைய ராணுவங்களையும் நாம் ஒன்றிணைத்து அவர்களை கடலில் எறிந்தோம். ஆக, (நபியே!) அநியாயக்காரர்களின் (நம்பிக்கையற்றவர்களின்) முடிவு எப்படி இருந்தது என்று பார்ப்பீராக.
அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கின்ற முன்னோடிகளாக ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
இவ்வுலகத்திலும் மறுமையிலும் சாபத்தை அவர்களுக்குத் தொடர வைத்தோம் (சாபம் அவர்களை விட்டுப் பிரியாமல் சாபத்தை அவர்கள் மீது விதித்து விட்டோம். கடுமையான தண்டனையால்) அவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்.
முந்திய தலைமுறையினர்களை நாம் அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் கருணையாகவும் மூசாவிற்கு நாம் திட்ட வட்டமாக வேதத்தை தந்தோம். அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்.
மூசாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்த போது. (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. (இன்னும் அவருடன்) இருந்தவர்களில் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூசாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் உண்மையாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை இந்த மக்கள் எப்படி மறுக்கமுடியும்?)
என்றாலும், பல தலைமுறையினரை (அவருக்குப் பின்) நாம் உருவாக்கினோம். அவர்களுக்கு காலம் நீண்டு சென்றது. (ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்கை மறந்தனர்.) இன்னும் (நபியே!) நீர் மத்யன் வாசிகளுடன் தங்கி(யவராகவும்) அவர்கள் மீது நமது வசனங்களை நீர் ஓதியவராக(வும்) இல்லை. (இவற்றில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர் உடன் இருக்கவில்லை.) என்றாலும் (நாம்தான் அவற்றை எல்லாம் செய்தோம். இன்னும்) தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக நாம்தான் இருந்தோம்.
(அந்த) மலைக்கு அருகில் நாம் (மூசாவை) அழைத்த போது நீர் (அங்கு) இருக்கவில்லை. எனினும், (முந்திய நபிமார்களின் வரலாறுகளை உமக்கு நாம் எடுத்துக்கூறியதும் உம்மை இவர்களுக்கு தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின் அருளினால் ஆகும். ஏனெனில், நீர் ஒரு மக்களை -அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக- எச்சரிக்க வேண்டும். உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிப்பாளர் எவரும் வரவில்லை.
அவர்களின் கரங்கள் முற்படுத்தியதால் அவர்களுக்கு ஒரு சோதனை (தண்டனை ஒன்று) ஏற்பட்டு, (பிறகு) எங்கள் இறைவா! நீ எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே! நம்பிக்கையாளர்களில் நாங்கள் ஆகியிருப்போமே! என்று அவர்கள் கூறாதிருப்பதற்காக (உம்மை அவர்களுக்கு தூதராக அனுப்பினோம். இல்லை என்றால் உம்மை தூதராக அனுப்புவதற்கு முன்னரே நாம் அவர்களை தண்டித்திருப்போம்.)
நம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, “அவர் (-அந்த தூதர்) மூசாவிற்கு வழங்கப்பட்டதை (-மூஸாவின் வேதம்) போன்ற (வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா! என்று கூறினர். இதற்கு முன்னர் மூசாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? அவர்கள் (அந்த யூதர்கள்) கூறினர்: (மூசாவின் வேதமும் ஈசாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். (உமக்கு வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினர்: “நிச்சயமாக நாங்கள் (மூசா, ஈசா, முஹம்மது ஆகியோரின் வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள்தான்.
(நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டை விட (தவ்ராத், இன்ஜீலை விட) மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள், (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நான் அதை பின்பற்றுகிறேன்.”
அவர்கள் உமக்கு பதிலளிக்கவில்லை என்றால் நீர் அறிவீராக! “நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்கள் மன இச்சைகளைத்தான்.” அல்லாஹ்வின் நேர்வழி அன்றி தனது மன இச்சையை பின்பற்றியவனை விட பெரும் வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (நிராகரிப்பில் வரம்பு மீறுகின்ற) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
திட்டவட்டமாக அவர்களுக்கு (-குறைஷிகளுக்கும் யூதர்களுக்கும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களுக்கு இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய) செய்தியை நாம் சேர்ப்பித்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
இதற்கு முன்னர் (-இந்த குர்ஆனுக்கு முன்னர்) நாம் வேதத்தை கொடுத்தவர்கள் (-அவர்களில் உள்ள உண்மை விரும்பிகள்) இதையும் (இந்த குர்ஆனையும் அது கொடுக்கப்பட்ட தூதரையும்) நம்பிக்கை கொள்வார்கள்.
அவர்கள் முன் (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் இதை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான வேதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரும் (எங்கள் வேதத்தில் கூறப்பட்ட பிரகாரம் இறுதி நபியையும் இறுதி வேதத்தையும் நம்பிக்கை கொண்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்.”
அவர்கள் தங்கள் கூலியை இருமுறை வழங்கப்படுவார்கள் அவர்கள் (முந்திய வேதத்தை பின்பற்றி நடந்ததிலும் இந்தத் தூதரை பின்பற்றியதிலும்) பொறுமையாக (உறுதியாக) இருந்ததால். அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
அவர்கள் வீணானவற்றை செவிமடுத்தால் அதை புறக்கணித்து விடுவார்கள். எங்களுக்கு எங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்கள் மீது சலாம் உண்டாகட்டும். (நாங்கள் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டோம்.) அறியாதவர்களிடம் (பேசுவதையும் தர்க்கிப்பதையும்) நாங்கள் விரும்ப மாட்டோம். (எனவே, உங்களோடு தர்க்கம் செய்யமாட்டோம்.) என்று கூறுவார்கள்.
நிச்சயமாக நீர் விரும்பியவரை நேர்வழி செலுத்த மாட்டீர். (அது உம்மால் முடியாது.) என்றாலும் அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழி செலுத்துகின்றான். அவன்தான் நேர்வழி செல்பவர்களை மிக அறிந்தவன்.
அவர்கள் கூறினர்: “நாம் உம்முடன் நேர்வழியை பின்பற்றினால் நாங்கள் எங்கள் பூமியிலிருந்து (உடனே) வெளியேற்றப்பட்டிருப்போம்.” (அவர்கள் சொல்வது பொய்.) நாம் அவர்களுக்கு பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? எல்லா வகையான கனிகளும் நம் புறத்திலிருந்து உணவாக அங்கு கொண்டு வரப்படுகின்றன. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
எத்தனையோ ஊர்களை நாம் அழித்தோம். அவர்கள் தங்களது வாழ்க்கை வசதியால் வரம்பு மீறி நிராகரித்தனர். இதோ அவர்களது இல்லங்கள் அவர்களுக்கு பின்னர் குறைவாகவே தவிர (பிற மக்களால்) வசிக்கப்படவில்லை. நாமே (அனைத்திற்கும்) வாரிசுகளாக (சொந்தக்காரர்களாக) இருக்கின்றோம்.
உமது இறைவன் (மக்காவை சுற்றி உள்ள) ஊர்களை அழிப்பவனாக இல்லை. அதனுடைய தலைநகரில் (மக்காவில்) ஒரு தூதரை (-உம்மை) அனுப்புகின்ற வரை. அவர் அவர்கள் முன் நமது வசனங்களை ஓதுவார். (எந்த) ஊர்களை(யும்) நாம் அழிப்பவர்களாக இல்லை அதன் வாசிகள் அநியாயக்காரர்களாக இருந்தே தவிர.
நீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது உலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
எவருக்கு நாம் அழகிய வாக்கை வாக்களித்து அவர் அதை (மறுமையில்) சந்திப்பாரோ அவர் இவ்வுலக வாழ்க்கையின் இன்பத்தைக் கொண்டு நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா? பிறகு இவர் (-உலக இன்பம் பெற்ற நிராகரிப்பாளர்) மறுமை நாளில் (வேதனைக்கும் தண்டனைக்கும்) ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்.
இன்னும் அவன் அவர்களை அழைக்கும் நாளில் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த எனது இணைகள் எங்கே? என்று அவன் கேட்பான்.
(அல்லாஹ்வின் சாபத்தின்) வாக்கு கடமையாகிவிட்டவர்கள் (ஷைத்தான்கள்) கூறுவார்கள்: எங்கள் இறைவா! நாங்கள் வழிகெடுத்தவர்கள் இவர்கள்தான். நாங்கள் வழிகெட்டது போன்றே அவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம். (இப்போது அவர்களை விட்டும்) உன் பக்கம் நாங்கள் விலகி விட்டோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை.
இன்னும் (அவர்களுக்கு) சொல்லப்படும்: (நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கிய) “உங்கள் தெய்வங்களை அழையுங்கள்” என்று. அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே! (என்று ஆசைப்படுவார்கள்!)
இன்னும், அவன் அவர்களை அழைக்கின்ற நாளில், “நீங்கள் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்”என்று அவன் கேட்பான்.
அந்நாளில் அவர்கள் மீது செய்திகள் மறைத்து விடும். ஆகவே, அவர்கள் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரிடம் எதையும்) கேட்டுக்கொள்ள மாட்டார்கள்.
ஆக, யார் திருந்தி, நம்பிக்கைகொண்டு, நற்செயலை செய்வாரோ, அவர் வெற்றியாளர்களில் ஆகக்கூடும்.
உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும் தேர்ந்தெடுக்கிறான். அவர்களுக்கு (இதில் எந்த) விருப்பமும் இல்லை. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு மிக உயர்ந்தவன்.
அவர்களது நெஞ்சங்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும் உமது இறைவன் நன்கறிவான்.
அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. தீர்ப்பளிப்பது அவனுக்கே (உரிமையானது)! அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
(நபியே!) கூறுவீராக! உங்கள் மீது அல்லாஹ் இரவை மறுமை நாள் வரை நிரந்தரமானதாக ஆக்கிவிட்டால் அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் உங்களுக்கு ஒளியை கொண்டு வருவார்? என்று நீங்கள் அறிவியுங்கள். (இறைவனின் வசனங்களை) செவிமடு(த்து சிந்தி)க்க மாட்டீர்களா?
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் உங்கள் மீது பகலை மறுமை நாள் வரை நிரந்தரமாக ஆக்கிவிட்டால் நீங்கள் ஓய்வு எடுக்கக்கூடிய இரவை உங்களுக்கு அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் கொண்டு வருவார். என்பதை அறிவியுங்கள்! நீங்கள் (உங்கள் மீது இறை அருளாக இரவு, பகல் மாறி மாறி வருவதை) பார்(த்து அவற்றை செய்பவன்தான் வணங்கத் தகுதியானவன் என்பதை சிந்தி)க்க மாட்டீர்களா?
அவன் தனது கருணையினால் உங்களுக்கு இரவை, -அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்- பகலை, -(அதில்) அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் (இந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும்- ஆக்கினான்.
அவன் அவர்களை அழைக்கின்ற நாளில் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த எனது இணைகள் எங்கே? என்று அவன் கேட்பான்.
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். பிறகு, உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறுவோம். அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ் விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். அவர்கள் பொய்யாக கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு தவறிவிடும்.
நிச்சயமாக காரூன் மூசாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது அநியாயம் புரிந்தான். அவனுக்கு நாம் பொக்கிஷங்களிலிருந்து கொடுத்தோம். அவற்றின் சாவிகளை பலமுள்ள கூட்டம் சிரமத்தோடு சுமக்கும். அந்த சமயத்தை நினைவு கூறுங்கள்: அவனுடைய மக்கள் அவனுக்கு கூறினர்: பெருமிதம் (மமதை) கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமிதப்படுவோரை (மமதைகொள்வோரை) நேசிக்க மாட்டான்.
அல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நன்மை செய்தது போன்று நீ (மக்களுக்கு) நன்மை செய்! பூமியில் குழப்பத்தை (கலகத்தை, தீமை செய்வதை, மக்களுக்கு அநீதி செய்வதை) விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிக்க மாட்டான்.
அவன் கூறினான்: “இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் என்னிடம் உள்ள அறிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல தலைமுறையினர்களில் இவனைவிட பலத்தால் மிகக் கடினமான, (செல்வங்களை) சேகரிப்பதில் மிக அதிகமானவர்களை நிச்சயமாக அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (மறுமை நாளில்) குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டார்கள்.
அவன் தனது அலங்காரத்தில் தனது மக்களுக்கு முன் வெளியில் வந்தான். உலக வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் (அவனைப் பார்த்து) கூறினார்கள்: “காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கும் (செல்வங்கள்) இருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பேருடையவன்.
கல்வி வழங்கப்பட்டவர்கள் கூறினர்: “உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! நம்பிக்கை கொண்டு நன்மை செய்பவருக்கு அல்லாஹ்வின் நற்கூலி மிகச் சிறந்ததாகும். இதற்கு (-இந்த வார்த்தையை கூறுவதற்கு) பொறுமையாளர்களைத் தவிர (மற்றவர்கள்) வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.
ஆகவே, அவனையும் அவனுடைய இல்லத்தையும் பூமியில் சொருகி விட்டோம். ஆக, அல்லாஹ்வை அன்றி உதவுகின்ற கூட்டம் ஏதும் அவனுக்கு இல்லை. அவன் (தனக்குத்தானே) உதவி செய்துகொள்பவர்களிலும் இல்லை.
நேற்று அவனுடைய இடத்தை (-தகுதியை) ஆசைப்பட்டவர்கள் காலையில் கூறினர்: பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகின்றான். (தான் நாடியவர்களுக்கு) சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்க வில்லையென்றால் அவன் நம்மையும் (பூமியில்) சொருகியிருப்பான். பார்க்க வில்லையா! நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
அந்த மறுமை இல்லமானது - பூமியில் அநியாயத்தையோ குழப்பத்தையோ விரும்பாதவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு.
எவர் நன்மையை (-லா இலாஹ இல்லல்லாஹ்வை)க் கொண்டு வருவாரோ அவருக்கு அதனால் நற்கூலி கிடைக்கும். எவர்கள் தீமையைக் கொண்டு வருவார்களோ, தீமைகளைச் செய்தவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார்கள்.
நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) வழமைக்கு (இயல்பான மரணத்திற்கு அல்லது நீர் பிறந்து வளர்ந்த மக்காவிற்கு) திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.”
(நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால் தான் (உமக்கு இது அருளப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர்.
அல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு -அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் உம்மை அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள்) திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு கடவுள் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே அவனது முகத்தைத் தவிர (-அவனைத் தவிர). அதிகாரம் அவனுக்கே உரியது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Icon