ترجمة سورة الواقعة

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة الواقعة باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.
(அது பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியது. (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியது.
பூமி பலமாக குலுக்கப்பட்டால்,
மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,
பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் அவை ஆகிவிடும்.
நீங்கள் மூன்று வகையினராக ஆகிவிடுவீர்கள்.
அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?
துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
(உலகில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.
அவர்கள் (அல்லாஹ்வின் அருகில்) மிக நெருக்கமானவர்கள்.
“நயீம்” இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.
முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்).
இன்னும் பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்)
அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் மீது நிரந்தரமான சிறுவர்கள் சுற்றி வருவார்கள்,
குவளைகளுடனும் கூஜாக்களுடனும் தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடனும் (சுற்றி வருவார்கள்).
அதனால் அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,
அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின் பறவை மாமிசங்களுடனும் (அந்த சிறுவர்கள் சுற்றுவார்கள்).
வெண்மையான கண்ணழகிகளான பெண்கள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்).
அவர்கள் பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு கூலியாக (இந்த அருள்கள் அவர்களுக்கு கிடைக்கும்).
அதில் அவர்கள் வீண் பேச்சுகளையும் பாவமான பேச்சுகளையும் செவியுற மாட்டார்கள்.
சலாம், சலாம் என்ற பேச்சைத் தவிர (வேறு பேச்சை செவியுற மாட்டார்கள்).
வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!
அவர்கள், முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகில் இருப்பார்கள்;
இன்னும், குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகில் இருப்பார்கள்.
இன்னும், நீங்காத நிழல்களில் இருப்பார்கள்;
இன்னும், ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகில் இருப்பார்கள்.
இன்னும், அதிகமான பழங்களுக்கு அருகில் இருப்பார்கள்.
அவை தீர்ந்துவிடாது, தடுக்கப்படாது.
இன்னும் உயர்வான விரிப்புகளில் இருப்பார்கள்.
அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்.
அவர்களை நாம் (எப்போதும்) கன்னிப் பெண்களாக ஆக்குவோம்.
கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக ஆக்குவோம்.
வலப் பக்கமுடையவர்களுக்காக (நாம் அவர்களை படைத்திருக்கின்றோம்).
(வலப் பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்.
இன்னும் பின்னோரிலும் அதிகமானவர்கள் ஆவர்.
இடப்பக்கமுடையவர்கள்! இடப்பக்கமுடையவர்கள் யார்?
கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,
கரும் புகையின் நிழலிலும் (அவர்கள் இருப்பார்கள்).
(இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது.
இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) சுகவாசிகளாக இருந்தனர்.
பெரும் பாவத்தின் மீது பிடிவாதம் பிடித்தவர்களாக இருந்தனர்.
“நாங்கள் இறந்துவிட்டால், மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக (இந்த நிலைக்கு நாங்கள் மாறிய பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து) நாங்கள் எழுப்பப்படுவோமா?
முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (எங்களுடன் எழுப்பப்படுவார்கள்)?
(நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்
(அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
பிறகு, பொய்ப்பிக்கின்ற வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
“சக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.
அதில் இருந்து வயிறுகளை நிரப்புவீர்கள்.
அதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை குடிப்பீர்கள்.
தாகித்த ஒட்டகங்கள் குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.
இதுதான் கூலி நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.
நாம்தான் உங்களைப் படைத்தோம். நீங்கள் (இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்படுவதை) உண்மை என நம்பமாட்டீர்களா?
நீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!
அதை (-அந்த இந்திரியத்தையும் அதில் இருந்து உருவாகுகின்ற குழந்தையையும்) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் (அதை) படைப்பவர்களா?
நாம் தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை (யார் யாருக்கு எப்போது மரணம் வரும் என்று) நிர்ணயித்தோம். நாங்கள் முடியாதவர்கள் (இயலாதவர்கள்) இல்லை,
உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை).
முதல் முறை படைத்திருப்பதை (அதை செய்தவன் யார் என்பதை) நீங்கள் திட்டவட்டமாக அறிந்தீர்கள். (இதன் மூலம்) நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
நீங்கள் (பூமியில்) உழு(து பயிரிடு)கின்றீர்களே அதைப் பற்றி அறிவியுங்கள்!
அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் முளைக்க வைக்கின்றோமா?
நாம் நாடினால் அதை குப்பையாக (அதைப் போன்று) ஆக்கிவிடுவோம். நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக ஆகி இருப்பீர்கள்.
“நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்” (என்றும்)
“மாறாக, நாங்கள் பெரும் இழப்புக்குள்ளானவர்கள்” (என்றும் நீங்கள் உங்களைப் பற்றி கூறுவீர்கள்).
நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!
அதை கார்மேகத்தில் இருந்து நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை மேகத்தில் இருந்து) இறக்குகின்றவர்களா?
நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். நீங்கள் (இந்த மா பெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நன்றிசெலுத்த வேண்டாமா?
நீங்கள் தீ மூட்டுகின்ற நெருப்பைப் பற்றி அறிவியுங்கள்!
அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை) உருவாக்குகின்றோமா?
நாம் அதை (-அந்த உலக நெருப்பை மறுமையின் நரக நெருப்பைப் பற்றி உங்களுக்கு) ஒரு நினைவூட்டலாகவும் பயணிகளுக்கு ஒரு பலனாகவும் ஆக்கினோம்.
ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
(தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
நீங்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாக இது மாபெரும் சத்தியமாகும்.
நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்.
(அது) பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.
மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இதைத் தொடமாட்டார்கள்.
(இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.
இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கின்றீர்களா?
நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?
(மரணிக்கின்றவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது நீங்கள் (அதை) தடுத்திருக்க வேண்டாமா!
நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கின்றீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)
நாம் (-நமது வானவர்கள்) உங்களை விட அவருக்கு மிக அருகில் இருக்கின்றோம். என்றாலும் நீங்கள் பார்க்க முடியாது. (உயிரை வாங்கும் போது வானவர்கள் அருகில் இருந்தும் அவர்களை மனிதர்களால் பார்க்க முடியாது.)
நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,
(இந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?
ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களில் (ஒருவராக) இருந்தால்,
(அவருக்கு மறுமையில்) இறையருளும் (நல்ல) உணவும் “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு.
ஆக, (இறந்தவர்) வலப்பக்கம் உடையவர்களில் (ஒருவராக) இருந்தால்,
(ஓ நல்லவரே!) வலப்பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு சலாம் உண்டாகட்டும்.
ஆக, (இறந்த) அவர் வழிகெட்டவர்களான பொய்ப்பித்தவர்களில் (ஒருவராக) இருந்தால்,
கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின் விருந்தும்
நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கிடைக்கும்).
நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்.
ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
Icon