ترجمة سورة النّمل

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة النّمل باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

தா, சீம், மீம்.
(இது) நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.
(அவர்கள்) தொழுகையை நிலை நிறுத்துவார்கள், ஸகாத்தை தருவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்.
நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் -அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்.
அவர்கள்தான் - கெட்ட தண்டனை அவர்களுக்கு உண்டு. மறுமையில் அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
நிச்சயமாக நீர் இந்த குர்ஆனை நன்கறிந்த மகா ஞானவானிடமிருந்து மனனம் செய்விக்கப்படுகிறீர் (இன்னும் கற்பிக்கப்படுகிறீர்).
அந்த சமயத்தை நினைவு கூறுவீராக! மூசா தன் குடும்பத்தினருக்கு கூறினார்: “நிச்சயமாக நான் நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது எடுக்கப்பட்ட (கொஞ்சம்) நெருப்பை நீங்கள் குளிர்காய்வதற்காக கொண்டு வருகிறேன்.
அவர் அதனிடம் வந்தபோது, “நெருப்பில் (-ஒளியில்) இருப்பவன் பரிசுத்தமானவன். இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் (பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்) என்று (நற்செய்தி கூறி) அழைக்கப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
மூசாவே! நிச்சயமாக நான்தான் மிகைத்தவனான மகா ஞானமுடையவனான அல்லாஹ் ஆவேன்.
உமது தடியைப் போடுவீராக! அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்த போது புறமுதுகிட்டு திரும்பினார். அவர் திரும்பவே இல்லை. மூசாவே, பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம் -இறைத்தூதர்கள்- பயப்பட மாட்டார்கள்.
(எனினும்) தவறிழைத்தவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தவரைத் தவிர. ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (அவரை நான் மன்னித்து விடுவேன்.)
உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னும் வென்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.
ஆக, அது அவர்களிடம் (அவர்கள் மிகத்தெளிவாக) பார்க்கும்படியாக நம் அத்தாட்சிகள் வந்தபோது, இது தெளிவான சூனியம்”என்று கூறினர்.
அவர்கள் அவற்றை (-ஒன்பது அத்தாட்சிகளை) மறுத்தனர், அநியாயமாக பெருமையாக. அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதியாக நம்பின. ஆகவே, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
திட்டவட்டமாக தாவூதுக்கும் சுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினர்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”
தாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) சுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: “மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லாம் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்.
சுலைமானுக்கு ஜின்கள், மனிதர்கள் இன்னும் பறவைகளில் இருந்து அவருடைய ராணுவங்கள் ஒன்று திரட்டப்பட்டன. ஆக, அவர்கள் (ஒன்றிணைந்து செல்வதற்காக இடையிடையே) நிறுத்தப்படுவார்கள்.
இறுதியாக, (ஒரு முறை) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்த போது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! சுலைமானும் அவருடைய ராணுவங்களும் உங்களை மிதித்து அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்.
ஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ மகிழ்ச்சியுறுகின்ற நல்லதை நான் செய்வதற்கும் எனக்கு நீ அகத்தூண்டுதலை (-உள்ளத்தில் உதிப்பை) ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து.) உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!”
அவர் பறவைகளில் (ஹுத்ஹுத் பறவையைத்) தேடினார். (அது காணவில்லை.அப்போது) எனக்கென்ன, நான் ஹுத்ஹுதை (ஏன்) காண முடியவில்லை?! அல்லது அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா? என்று கூறினார்.
நிச்சயமாக நான் அதை கடுமையாக தண்டிப்பேன். அல்லது அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன். அல்லது அது கண்டிப்பாக என்னிடம் தெளிவான ஆதாரத்தை கொண்டுவர வேண்டும்.
அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்து விட்டு) சிறிது நேரம்தான் தாமதித்தார். (ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது. பின்னர்) அது கூறியது: “ஆக, நீர் அறியாததை நான் அறிந்துள்ளேன். உம்மிடம் ‘சபா’ இனத்தாரிடமிருந்து உறுதியான செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்.
நிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண்ணை, அவள் அவர்களை (-அந்நாட்டு மக்களை) ஆட்சி செய்கின்றவளாகக் கண்டேன். (ஆட்சிக்கு தேவையான) எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த, மதிக்கத்தக்க) அரச கட்டிலும் உள்ளது.
அவளையும் அவளுடைய மக்களையும் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குகின்றவர்களாக கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (இந்த இணைவைப்பு) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆகவே, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்ற, இன்னும் நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்ற அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது ஷிர்க்கான செயல்களை அலங்கரித்துக் காட்டினான்).
அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை, மகத்தான அர்ஷுடைய அதிபதி (அவன்).
அவர் (சுலைமான்) கூறினார்: “நீ உண்மை கூறினாயா? அல்லது பொய்யர்களில் ஆகிவிட்டாயா? என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்! இதை அவர்கள் முன் நீ போடு! பிறகு, அவர்களை விட்டு விலகி இரு! அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்!”
அவள் (-அரசி) கூறினாள்: பிரமுகர்களே! நிச்சயமாக - ஒரு கண்ணியமான கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது.
நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து (அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில் எழுதப்பட்ட) செய்தியாவது: “.
என்னிடம் நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி விடாதீர்கள்!) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்!”
அவள் கூறினாள்: பிரமுகர்களே! எனது இந்த காரியத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு காரியத்தை நீங்கள் என்னிடம் ஆஜராகி (கருத்து தெரிவிக்கி)ன்ற வரை முடிவு செய்பவளாக இல்லை.
அவர்கள் கூறினர்: நாங்கள் (உடல்) பலமுடையவர்கள், (எதிரிகளை தாக்க தேவையான) கடும் வலிமை உடையவர்கள். முடிவு உன்னிடம் இருக்கிறது. ஆகவே, நீ (கருதுவதை அல்லது) உத்தரவிடுவதை நன்கு நீ யோசித்துக்கொள்!
அவள் கூறினாள்: “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுழைந்து விட்டால் அதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள். அந்த ஊர் வாசிகளில் உள்ள கண்ணியவான்களை இழிவானவர்களாக ஆக்கிவிடுவார்கள்.” (ஆகவே, இவர்களும்) அப்படித்தான் செய்வார்கள்.
“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதில் திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன்.” (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)
அவர் (-அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, அவர் (சுலைமான்) கூறினார்: செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு பெருமிதம் அடைவீர்கள். (நான் அடைய மாட்டேன்.)
நீ அவர்களிடம் திரும்பிப் போ! நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை (-இராணுவங்களை எதிர்ப்பதற்கு) அவர்களுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும் நிச்சயமாக அவர்களை அதிலிருந்து (அவர்களின் ஊரிலிருந்து) இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். அவர்கள் (இஸ்லாமை ஏற்கவில்லை என்றால்) சிறுமைப்படுவார்கள்.
அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “பிரமுகர்களே! உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை -அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் -கொண்டு வருவார்.” (அல்லாஹ் தனக்கு தந்துள்ள அற்புதத்தை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறு சுலைமான் விரும்பினார்.)
ஜின்களில் சாதுர்யமான (கடும் தந்திரமும் வலிமையும் வீரமும் முரட்டுக் குணமும் உடைய) ஒன்று கூறியது: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன். நிச்சயமாக நான் அதற்கு ஆற்றல் உள்ளவன், (அதில் உள்ள பொருள்களுக்கு) நம்பிக்கைக்குரியவன்.
தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர், அந்த) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” அவர் (-சுலைமான்) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) நிலையாகி விட்டதாக பார்த்த போது, இது (-இந்த ஆட்சி, அதிகாரம், படை பலம், அறிவு, எல்லாம்) என் இறைவனின் அருளாகும். நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி கெடுகிறேனா? என்று அவன் என்னை சோதிப்பதற்காக (தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ (-நன்றி கெடுவாரோ அவரால் அல்லாஹ்விற்கு எவ்வித குறையும் இல்லை.) ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் வாரி கொடுக்கும்) பெரும் தயாளன்.
அவர் கூறினார்: நீங்கள் அவளுக்கு அவளுடைய அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், “அவள் அறிந்து கொள்கிறாளா? அல்லது அவள் அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா?” என்று.
அவள் வந்தபோது, “இது போன்றா உனது அரச கட்டில்?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான்.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டோம். இன்னும், முஸ்லிம்களாக இருக்கிறோம்.
அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அவள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள்.
அவளுக்கு கூறப்பட்டது: “நீ மாளிகையில் நுழை!” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் நானும் முஸ்லிமாகி விட்டேன்.
திட்டவட்டமாக நாம் சமூது (மக்களு)க்கு அவருடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக) அனுப்பினோம், “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கட்டளையிடுவதற்காக). ஆனால், அவர்கள் அப்போது தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்ற இரண்டு பிரிவுகளாக ஆகிவிட்டனர்.
அவர் (ஸாலிஹ்) கூறினார்: என் மக்களே! நன்மைக்கு (இறைவனின் அருளுக்கு) முன்னதாக தீமையை (தண்டனையை) ஏன் அவசரப்படுகிறீர்கள்? அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா? நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்.
அவர்கள் கூறினர்: “உம்மாலும் உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள் துற்சகுணம் அடைந்தோம்.” அவர் கூறினார்: (மாறாக) உங்கள் துன்பத்தின் காரணம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. (உங்கள் செயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து கொள்கிறான்.) மாறாக, நீங்கள் சோதிக்கப்படுகின்ற மக்கள்.
அப்பட்டணத்தில் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள் (அங்கு) பூமியில் குழப்பம் செய்தனர், சீர்திருத்தம் செய்யவில்லை. (நன்மை செய்யாமல் பாவம் செய்து வந்தனர்.)
அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினர்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் ஆஜராகவில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்’என்று கூறுவோம்.”
அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் (நமது சூழ்ச்சியை) உணர மாட்டார்கள்.
அவர்களின் சூழ்ச்சியின் முடிவு எப்படி ஆகியது என்று (நபியே!) நீர் பார்ப்பீராக! (அதன் முடிவு:) நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களின் மக்கள் அனைவரையும் (தரைமட்டமாக) அழித்து விட்டோம்.
இதோ அவர்கள் தீமை செய்ததால் அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது வீடுகள் வெறுமையாக இருக்கின்றன. அறிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாத்தோம். அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொண்டிருந்தனர்.
இன்னும் லூத்தையும் (நாம் அனுப்பினோம்). அவர் தம் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! நீங்கள் மகா அசிங்கமான செயலை செய்கிறீர்கள். (இதன் அசிங்கத்தையும் கேவலத்தையும்) நீங்கள் அறியத்தான் செய்கிறீர்கள்.
பெண்கள் அன்றி ஆண்களிடமா நீங்கள் இச்சையை தீர்க்கிறீர்கள். மாறாக, நீங்கள் (அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமையையும் அதை மீறுவதால் உங்களுக்கு நிகழப்போகும் தண்டனையையும்) அறியாத மக்கள் ஆவீர்கள். (என்று கூறினார்).
அவருடயை மக்களின் பதிலோ, “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக அவர்கள் (இந்த செயலை செய்வதற்கு) அசூசைப்படுகிறார்கள்”என்பதாகவே தவிர (வேறு) இல்லை.
நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் -அவருடைய பிள்ளைகள், மனைவியைத் தவிர-பாதுகாத்தோம். அவளை நாம், (ஊரில்) மிஞ்சியவர்களில் (இருக்க வைத்து தண்டனையில் அழிக்கப்பட) முடிவு செய்தோம்.
அவர்கள் மீது (வேதனையின்) மழையை பொழிவித்தோம். எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மழை (மழைகளிலே) மிகக் கெட்டதாகும்.
(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்களுக்கு (-உமது தோழர்களுக்கு) ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா? (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா? அல்லது சிலைகளையும் படைக்கப்பட்ட படைப்பினங்களையும் வணங்குவது சிறந்ததா?)
வானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு அவன்) சிறந்தவனா? (அல்லது எதற்கும் ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் இணைவைக்கின்ற மக்கள் ஆவர்.
எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் மகத்துவத்தை) அறியமாட்டார்கள்.
அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குகின்றானோ, இன்னும் உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குகின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
(அல்லது) தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.
(அல்லது) படைப்புகளை எவன் முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகின்றானோ, மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கின்றானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (நபியே!) கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!
(நபியே!) கூறுவீராக: வானங்களிலும் பூமியிலும் மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். (படைப்புகள்) தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.
அல்லது, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா? (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் அதில் (-மறுமை விஷயத்தில்) குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிந்துகொள்ள முடியாது.)
நிராகரித்தவர்கள் கூறினர்: “நாங்களும் எங்கள் மூதாதைகளும் (இறந்த பின்னர் மண்ணோடு) மண்ணாக மாறிவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் (பூமியிலிருந்து) வெளியேற்றப்படுவோமா?
திட்டவட்டமாக நாங்களும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளும் இதை வாக்களிக்கப்பட்டோம். (வாக்களிப்பவர்கள் இப்படி வாக்களித்து சென்றுள்ளனர். ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லையே! ஆகவே,) இது முன்னோர்களின் கட்டுக் கதைகள் அன்றி வேறு இல்லை.
(நபியே!) கூறுவீராக! பூமியில் (அழிக்கப்பட்ட மக்களின் இல்லங்களுக்கு) செல்வீர்களாக! குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்று (சிந்தித்துப்) பார்ப்பீர்களாக!
அவர்கள் மீது நீர் துக்கப்படாதீர்! அவர்கள் (உமக்கு) சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால் நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடாதீர்!
அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது (நிகழும் என்று கூறுங்கள்!)”
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில உங்களுக்கு சமீபமாக வரக்கூடும்.”
நிச்சயமாக உமது இறைவன் மக்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி அறியமாட்டார்கள்.
நிச்சயமாக உமது இறைவன் அவர்களது உள்ளங்கள் மறைப்பவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிவான்.
வானத்திலும் பூமியிலும் (மக்களின் பார்வைகளுக்கும் செவிகளுக்கும்) மறைந்த எதுவும் இல்லை (அது) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.
நிச்சயமாக இந்த குர்ஆன் இஸ்ரவேலர்கள் மீது அவர்கள் முரண்படுகின்றவற்றில் பல விஷயங்களை (அவற்றில் எது உண்மை என்று) விவரிக்கிறது.
நிச்சயமாக இது நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்.
நிச்சயமாக உமது இறைவன் தனது சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி) அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவன்தான் மிகைத்தவன், நன்கறிந்தவன்.
ஆகவே, (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தின் மீது இருக்கின்றீர்.
நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் -அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால்- அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.
(அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்யமுடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்.
அவர்கள் மீது நமது வாக்கு (அவர்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற நமது வாக்கு உறுதியாக) நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளைக் கொண்டு உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்”என்று அவர்களிடம் அது பேசும்.
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகின்ற நாளில், ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
இறுதியாக, அவர்கள் வந்து விடும்போது அவன் (-அல்லாஹ்) கூறுவான்: எனது அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பித்தீர்களா? அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க! அல்லது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?
அவர்களின் (இம்மையில் செய்து கொண்டிருந்த) தீமைகளால் அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கூற்று (-கோபம் மறுமையில்) நிகழ்ந்து விட்டது. ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் நாம் அமைத்தோம். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
‘சூர்’இல் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் திடுக்கிடுவார்கள் (-பயத்தால் நடுங்குவார்கள்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர (-மார்க்கப் போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது). எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.
(நபியே!) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று செல்கின்றன. (இது) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.
யார் நன்மையை (லாஇலாஹ இல்லல்லாஹ் வை)க் கொண்டு வருவரோ அவருக்கு அதன் காரணமாக சிறந்தது (-சொர்க்கம் கூலியாக) உண்டு. அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்.
யார் தீமையைக் கொண்டு வருவாரோ (-இணைவைத்தவராக வருவாரோ) அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்து கொண்டு இருந்ததற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம் இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவை. இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றியவர்களில்) நான் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்.
இன்னும், (இந்த) குர்ஆனை நான் ஓதுவதற்கும்(கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகின்றானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன் தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”
(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (நபியே!) உமது இறைவன் நீங்கள் (-இணைவைப்பவர்கள்) செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகின்றனர். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும், உமக்கு வெற்றியும் உண்டு.)பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
Icon