ترجمة سورة الإنسان

الترجمة التاميلية
ترجمة معاني سورة الإنسان باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான்.
2. (பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.
3. பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர்.
4. நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும், (கை, கால்) விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
5. நல்லவர்கள், கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.
6. அது (சொந்தமாக) அல்லாஹ்வுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள்.
7. இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள்.
8. மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்.
9. (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்),
10. ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்'' (என்றும் கூறுவார்கள்).
11. ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான்.
12. மேலும், அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சொர்க்கத்தையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்).
13. (அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணைகளின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
14. அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும்.
15. (பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும்.
16. (அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
17. (இஞ்சி கலந்த) ‘சன்ஜபீல்' என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.
18. அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு ‘ஸல்ஸபீல்' என்றும் பெயர் கூறப்படும்.
19. (என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீர் கண்டால் சிதறிய முத்துக்கள் என்றே கருதுவீர்.
20. பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர்.
21. அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக் காப்பும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்.
22. (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்கள் முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது'' (என்றும் கூறுவான்).
23. (நபியே!) நிச்சயமாக நாம் இந்த குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைக்கிறோம்.
24. ஆகவே, உமது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ள) நீர் பொறுத்திருப்பீராக. அவர்களிலுள்ள பாவிகளையும், நன்றி கெட்டவர்களையும் நீர் பின்பற்றாதீர்.
25. காலையிலும் மாலையிலும் உங்கள் இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவு கூருவீராக.
26. இரவிலும், அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!
27. நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர்.
28. நாம்தான் அவர்களைப் படைத்தோம். நாம்தான் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம்.
29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். விரும்பியவர் தன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய (நேரான) வழியைப் பலமாகப் பிடித்துக் கொள்ளவும்.
30. எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மைகளையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
31. (ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன் அருளில் புகுத்தி விடுகிறான். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
Icon