الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா الحديد இன் மொழிபெயர்ப்பு
Verse 1
(நபியே!) உம்மிடம் தனது கணவரின் விஷயத்தில் விவாதிக்கின்றவளின் பேச்சை திட்டமாக அல்லாஹ் செவியுற்றான். அவள் அல்லாஹ்விடம் முறையிடுகிறாள். அல்லாஹ் உங்கள் இருவரின் உரையாடலை செவியுறு கின்றான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.
Verse 2
வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன்தான் உயிர்கொடுக்கின்றான்; மரணிக்க வைக்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Verse 3
அவன்தான் முதலாமவன்; இறுதியானவன்; வெளிப்படையானவன்; மறைந்தவன். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
அவன்தான் ஆறு நாள்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது அவன் உயர்ந்துவிட்டான். பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்தில் இருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கு இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
Verse 5
வானங்கள், இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படுகின்றன.
Verse 6
அவன் பகலில் இரவை நுழைக்கின்றான். இரவில் பகலை நுழைக்கின்றான். நெஞ்சங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன் ஆவான்.
Verse 7
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் எதில் உங்களை (ஒருவருக்குப் பின்னர் ஒருவரை) பிரதிநிதிகளாக ஆக்கினானோ அதில் (-அந்த செல்வத்தில்) இருந்து தர்மம் செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு, தர்மம் செய்தவர்கள் - அவர்களுக்கு மிகப் பெரிய கூலி உண்டு.
Verse 8
அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு தூதரோ உங்களை அழைக்கின்றார். திட்டமாக அவன் உங்கள் வாக்குறுதியை (நீங்கள் உங்கள் தந்தையின் முதுகில் இருந்த போது) வாங்கி இருக்கின்றான். நீங்கள் நம்பிக்கையாளராக இருந்தால்... (இது நம்பிக்கை கொள்வதற்கு சரியான தருணமாகும்).
Verse 9
அவன் தனது அடியார் மீது தெளிவான அத்தாட்சிகளை இறக்குகின்றான் அவன் உங்களை இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் வெளியேற்றுவதற்காக. நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் கருணையாளனும் ஆவான்.
Verse 10
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? வானங்கள் இன்னும் பூமியின் சொத்துக்கள் அல்லாஹ்விற்கே உரியன. (மக்காவின்) வெற்றிக்கு முன்னர் தர்மம் செய்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தவருக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின் வெற்றிக்கு) பின்னர் தர்மம் செய்து போர் செய்தவர்களை விட அவர்கள்தான் மிக மகத்தான பதவி உடையவர்கள். எல்லோருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான். அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Verse 11
யார் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுக்கின்றார்? (யாரும் கொடுத்தால்) அவன் அவருக்கு அதை பன்மடங்காக்குவான். இன்னும் அவருக்கு கண்ணியமான கூலி உண்டு.
Verse 12
(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி - (அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்.
Verse 13
அந்நாளில் நயவஞ்சகம் உடைய ஆண்களும் நயவஞ்சகம் உடைய பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூறுவார்கள்: “எங்களை (கொஞ்சம்) எதிர்பாருங்கள்! உங்கள் ஒளியிலிருந்து நாங்கள் (கொஞ்சம்) எடுத்துக் கொள்கிறோம்.” (அப்போது அவர்களுக்கு) கூறப்படும் உங்களுக்குப் பின்னால் (வந்த வழியிலேயே) நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! (அங்கு) ஒளியை தேடுங்கள்!” ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஒரு சுவர் அமைக்கப்படும். அதற்கு ஒரு வாசல் இருக்கும். அதன் உள் பக்கம் அதில் அருள் இருக்கும். அதன் வெளிப்பக்கம் அதற்கு முன்னால் வேதனை இருக்கும்.
Verse 14
நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? என்று அவர்களை (நம்பிக்கையாளர்களை) கூவி அழைப்பார்கள். அவர்கள் கூறுவார்கள். ஏன் இல்லை. என்றாலும் நீங்கள் (-நயவஞ்கசர்கள்) உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) தீமையை எதிர்பார்த்தீர்கள்; (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.
Verse 15
இன்றைய தினம் உங்களிடமும் நிராகரிப்பாளர்களிடமும் எவ்வித பரிகாரம் - வாங்கப்படாது. உங்கள் தங்குமிடம் நரகம்தான். அதுதான் உங்களுக்கு மிக ஏற்றமானது. மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது.
Verse 16
அல்லாஹ்வை நினைவு கூர்வதாலும் இறங்கிய சத்தியவேதத்(தை ஓதுவ)தினாலும் அவர்களின் உள்ளங்கள் நடுங்குவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு நேரம் வரவில்லையா? இதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் ஆகிவிட வேண்டாம். அவர்கள் மீது (-முந்திய வேதக் காரர்கள் மீது) காலம் மிக நீண்டுவிட்டது. ஆகவே, அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
Verse 17
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பூமியை அது இறந்த (காய்ந்த) பின்னர் உயிர்ப்பிக்கின்றான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக வசனங்களை நாம் உங்களுக்கு திட்டமாக தெளிவுபடுத்துகின்றோம்.
Verse 18
நிச்சயமாக (அல்லாஹ்வின் பாதையில்) தர்மம் செய்த ஆண்கள், தர்மம் செய்த பெண்கள், இன்னும் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தவர்கள் அவர்களுக்கு (நற்கூலி) பன்மடங்காக்கப்படும். இன்னும் அவர்களுக்கு கண்ணியமான கூலி (சொர்க்கம்) உண்டு.
Verse 19
அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள்தான் “ஸித்தீக்” என்ற மிக உண்மையானவர்கள் ஆவார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள், அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் உண்டு. எவர்கள் நிராகரித்து, நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள்.
Verse 20
உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமை அடிப்பதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகத்தின் போட்டியும்தான். (இவ்வாழ்க்கை) ஒரு மழையைப் போல்தான், அதன் விளைச்சல் விவசாயிகளை கவர்ந்தது. பிறகு, அது காய்ந்து விடுகிறது. அதை நீர் மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு, அது குப்பையாக ஆகிவிடுகிறது. மறுமையில் (நிராகரிப்பாளர்களுக்கு) கடுமையான வேதனையும் (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பும் திருப்பொருத்தமும் உண்டு. உலக வாழ்க்கை மயக்கக்கூடிய இன்பமே தவிர வேறில்லை.
Verse 21
உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் முந்துங்கள். அதன் அகலம் வானம், பூமியின் அகலத்தைப் போலாகும். அது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் சிறப்பா(ன அருளா)கும். அவன் நாடுகின்றவர்களுக்கு அதை அவன் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன் ஆவான்.
Verse 22
பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்.
Verse 23
(இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்.) ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் ஆகும். அல்லாஹ் அகம்பாவக்காரர்கள், பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் நேசிக்க மாட்டான்.
Verse 24
இவர்கள் கருமித்தனம் காட்டுகிறார்கள், இன்னும் மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுகிறார்கள். யார் (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதை விட்டும்) விலகுவாரோ (அவர் தனக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டார்.) நிச்சயமாக அல்லாஹ் தான் மகா நிறைவானவன் (அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை), மகா புகழாளன். (எவரின் புறக்கணிப்பாலும் அவனது புகழ் குறையாது.)
Verse 25
திட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் தராசையும், -மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும் இரும்பையும் நாம் இறக்கினோம். அதில் கடுமையான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும் அவனுக்கும் (-அல்லாஹ்விற்கும்) அவனது தூதருக்கும் மறைவில் உதவி செய்கின்றவரை (வெளிப்படையாக) அல்லாஹ் அறிவதற்காகவும் (இரும்பை அல்லாஹ் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையாளன், மிகைத்தவன் ஆவான்.
Verse 26
திட்டவட்டமாக நாம் நூஹையும் இப்ராஹீமையும் (நமது தூதர்களாக) அனுப்பினோம். அ(வ்விரு)வர்களின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதங்களையும் நாம் ஆக்கினோம். அவர்களில் (-அவர்களின் சந்ததிகளில்) நேர்வழி பெற்றவர்களும் உள்ளனர். அவர்களில் (-அவர்களின் சந்ததிகளில்) அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
பிறகு, அவர்களின் அடிச்சுவடுகளில் நமது தூதர்களை நாம் தொடர்ந்து அனுப்பினோம். (இஸ்ரவேலர்களில் இறுதியாக) மர்யமுடைய மகன் ஈசாவை நாம் பின்னால் அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை கொடுத்தோம். அவரை (உண்மையாக) பின்பற்றியவர்களின் உள்ளங்களில் இரக்கத்தையும் கருணையையும் நாம் ஏற்படுத்தினோம். அவர்கள் துறவரத்தை மார்க்கத்தில் புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர். நாம் அவர்கள் மீது அதை கடமையாக்கவில்லை. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே தவிர (வேறு ஒன்றுக்காக அவர்கள் அதை ஏற்படுத்தவில்லை). ஆனால் அதை (-அந்த துறவறத்தை) அதை பேணவேண்டிய முறையில் அதை அவர்கள் பேணவில்லை. அவர்களில் இருந்து எவர்கள் (இந்த நபியையும் இந்த வேதத்தையும்) நம்பிக்கை கொள்வார்களோ அவர்களின் கூலியை நாம் அவர்களுக்கு கொடுப்போம். அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
Verse 28
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அவனது தூதரை நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களுக்கு தனது கருணையிலிருந்து இரு மடங்கு பங்குகளைக் கொடுப்பான். இன்னும், உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். அதன் மூலம் (கண்ணியத்தோடு மக்களுக்கு மத்தியில்) நீங்கள் நடந்து செல்வீர்கள். இன்னும், அவன் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Verse 29
(அவன் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதக்காரர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும் நிச்சயமாக சிறப்பு அல்லாஹ்வின் கரத்தில் இருக்கின்றது, அவன் நாடுகின்றவர்களுக்கு அதைக் கொடுக்கின்றான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.
تقدم القراءة