الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா المنافقون இன் மொழிபெயர்ப்பு
Verse 1
வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதிக்கின்றனர். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Verse 2
அவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களை (அல்லாஹ்வின் உலக தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) கேடயமாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை மிகக் கெட்டுவிட்டன.
Verse 3
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (முதலில் வெளிப்படையாக) நம்பிக்கை கொண்டனர், (ஆனால்) பிறகு, (உள்ளுக்குள்) நிராகரித்தனர். ஆகவே, அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரை இடப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (தங்களுக்குரிய சீர்திருத்தத்தை) புரிய மாட்டார்கள்.
Verse 4
(நபியே!) நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் உடல்கள் (-வெளித் தோற்றங்கள்) உம்மைக் கவரும். அவர்கள் (உம்மிடம் ஏதும்) கூறினால் அவர்களின் கூற்றை நீர் செவியுறுவீர். (அவர்களின் பேச்சு அந்தளவு கவர்ச்சியாக, ஈர்ப்புடையதாக இருக்கும். அவர்களின் உள்ளங்களும் அறிவுகளும் பயனற்றவையாக இருப்பதால் அவர்களின் வெறும் உடல் தோற்றம் மட்டும்தான் பிரமாண்டமாக இருக்கும். எனவே,) அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரப்பலகைகளைப் போல் இருப்பார்கள். ஒவ்வொரு சப்தத்தையும் தங்களுக்கு பாதகமாகவே எண்ணுவார்கள். அவர்கள்தான் (உங்களுக்கு மோசமான) எதிரிகள். ஆகவே, அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அல்லாஹ் அவர்களை அழிப்பான். (நேர்வழியில் இருந்து) அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகின்றார்கள்!
Verse 5
(உங்கள் செயல்களுக்காக வருந்தி, திருந்தி) வாருங்கள், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (அல்லாஹ்விடம் பாவ)மன்னிப்புத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால் தங்கள் தலைகளை (இங்கும் அங்கும்) வேகமாக அசைக்கிறார்கள். இன்னும், (உம்மை விட்டும்) புறக்கணிப்பவர்களாகவே அவர்களை நீர் பார்ப்பீர். அவர்கள் கர்வம் கொள்பவர்கள் ஆவார்கள்.
Verse 6
நீர் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினாலும், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமம்தான். அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Verse 7
“அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள் மீது தர்மம் செய்யாதீர்கள், இறுதியாக அவர்கள் (நபியை விட்டும்) பிரிந்து விடுவார்கள்” என்று இவர்கள்தான் கூறுகிறார்கள். வானங்கள் இன்னும் பூமியின் பொக்கிஷங்கள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. என்றாலும் நயவஞ்சகர்கள் புரிய மாட்டார்கள்.
Verse 8
“நாம் மதீனாவிற்கு திரும்பினால் கண்ணியவான்கள் (ஆகிய நாம்) தாழ்ந்தவர்களை, (-முஹாஜிர்களை) அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்தான் கண்ணியம் உரியது. என்றாலும், நயவஞ்சகர்கள் (இதை) அறியமாட்டார்கள்.
Verse 9
நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் (மறக்கச் செய்து, உலகக் காரியங்களில்) ஈடுபடுத்தி விடவேண்டாம். யார் அப்படி செய்துவிடுவார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Verse 10
உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா! நீ என்னை (என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா! (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா!). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.”
Verse 11
ஓர் உயிரை (வாங்குவதை) அல்லாஹ் தாமதப்படுத்தவே மாட்டான் - அதற்குரிய தவணை வந்துவிட்டால். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.
تقدم القراءة