ترجمة معاني سورة التوبة باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation
آية رقم 1
(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
آية رقم 2
நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
آية رقم 3
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
آية رقم 4
ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
آية رقم 5
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 6
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
آية رقم 7
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
آية رقم 8
(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
آية رقم 9
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
آية رقم 10
அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்."
آية رقم 11
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
آية رقم 12
அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
آية رقم 13
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
آية رقم 14
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.
آية رقم 15
அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 16
(முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.
آية رقم 17
'குஃப்ரின்' மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
آية رقم 18
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கதாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
آية رقم 19
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
آية رقم 20
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
آية رقم 21
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
آية رقم 22
அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.
آية رقم 23
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
آية رقم 24
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
آية رقم 25
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்;) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
آية رقم 26
பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக் குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
آية رقم 27
அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 28
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 29
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள; ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
آية رقم 30
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
آية رقم 31
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
آية رقم 32
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
آية رقم 33
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
آية رقم 34
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில; சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
آية رقم 35
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).
آية رقم 36
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
آية رقم 37
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
آية رقم 38
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு உன்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
آية رقم 39
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
آية رقم 40
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
آية رقم 41
நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
آية رقم 42
"(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்" என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
آية رقم 43
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்கள்?
آية رقم 44
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
آية رقم 45
(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்குமங்கும்) உழலுகின்றனர்.
آية رقم 46
அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) "தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.
آية رقم 47
உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
آية رقم 48
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
آية رقم 49
"(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்" என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
آية رقم 50
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்" என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
آية رقم 51
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
آية رقم 52
(நபியே!) நீர் கூறுவீராக "(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?" ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் எள்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
آية رقم 53
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
آية رقم 54
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.
آية رقم 55
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
آية رقم 56
நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்; என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
آية رقم 57
ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
آية رقم 58
(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
آية رقم 59
அல்லாஹ்வும் அவனுடைய தூரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்" என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).
آية رقم 60
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
آية رقم 61
(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத்துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்." எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
آية رقم 62
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
آية رقم 63
எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவிலலையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
آية رقم 64
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்; " நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்."
آية رقم 65
(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், "நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.
آية رقم 66
புகழ் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
آية رقم 67
நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
آية رقم 68
நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தராமான வேதனையுமுண்டு.
آية رقم 69
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
آية رقم 70
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்றாஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள், தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
آية رقم 71
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 72
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.
آية رقم 73
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
آية رقم 74
இவர்கள் நிச்சமயாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
آية رقم 75
அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
آية رقم 76
(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
آية رقم 77
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
آية رقم 78
அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா,
آية رقم 79
இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
آية رقم 80
ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
آية رقم 81
(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); "இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் "நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
آية رقم 82
எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.
آية رقم 83
(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் "நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்ந விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்தமெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்" என்று கூறுவீராக!.
آية رقم 84
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
آية رقم 85
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
آية رقم 86
மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்" என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்; "எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்" என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.
آية رقم 87
(போரில் கலந்துககொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
آية رقم 88
எனினும், (அல்லாஹ்வின்) தூரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
آية رقم 89
அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
آية رقم 90
கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகழ் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.
آية رقم 91
பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
آية رقم 92
போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் "உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே" என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.
آية رقم 93
குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.
آية رقم 94
(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பி போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகழ் கூறுகின்றனர்; "புகழ் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்.
آية رقم 95
(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே அதுவே அவர்கள் தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.
آية رقم 96
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.
آية رقم 97
காட்டரபிகள் குஃபிரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 98
கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்றார்கள் ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையம்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 99
கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
آية رقم 100
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
آية رقم 101
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.
آية رقم 102
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
آية رقم 103
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 104
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.
آية رقم 105
(நபியே! அவர்களிடம்;) "நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்" என்று கூறும்.
آية رقم 106
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பர்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
آية رقم 107
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபன்னவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; "நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
آية رقم 108
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது ஆங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
آية رقم 109
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
آية رقم 110
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒருவடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.
آية رقم 111
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
آية رقم 112
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
آية رقم 113
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
آية رقم 114
இப்றாஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறிலலை மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
آية رقم 115
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
آية رقم 116
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
آية رقم 117
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
آية رقم 118
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
آية رقم 119
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
آية رقم 120
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
آية رقم 121
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப்பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
آية رقم 122
முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
آية رقم 123
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
آية رقم 124
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், "இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?" என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
آية رقم 125
ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.
آية رقم 126
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்" என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை (அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
آية رقم 127
யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி' "உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?" என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.
آية رقم 128
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
آية رقم 129
(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக!
تقدم القراءة