ترجمة سورة المرسلات

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة المرسلات باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-

(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-

மேலும், வானம் பிளக்கப்படும் போது-

அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-

மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-

எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?

தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.

மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.

முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.

குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.

ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.

இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).

அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).

எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).

நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
Icon