ترجمة سورة التوبة

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة التوبة باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .
‘பராஆ’விலகுதல் (எனும் அறிவிப்பு) அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் அவனுடைய தூதர் புறத்திலிருந்தும் இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களுக்கு (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அந்த இணைவைப்பவர்களிலிருந்து விலகிக்கொள்கின்றனர் என்று அறிவிக்கப்படுகிறது).
ஆகவே, (இணைவைப்பவர்களே) “நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக) சுற்றலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துபவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.”
இணைவைப்பவர்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகியவர்கள் என்று அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் (அறிவிக்கப்படும்) அறிவிப்பாகும் (இது). ஆகவே, (இணைவைப்பதிலிருந்து) நீங்கள் திருந்தினால் அது உங்களுக்கு மிக்க நன்று. நீங்கள் விலகினால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
(எனினும்,) இணைவைப்பவர்களில் நீங்கள் உடன்படிக்கை செய்து பிறகு (அதில்) அவர்கள் உங்களுக்கு எதையும் குறைக்காமலும், உங்களுக்கு எதிராக ஒருவருக்கும் உதவாமலும் இருந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களுடைய தவணை (முடியும்) வரை முழுமைப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நேசிக்கிறான்.
புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை -நீங்கள் அவர்களை எங்கு கண்டாலும்- கொல்லுங்கள்; அவர்களை(ச்சிறைப்) பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்; ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்களை எதிர்பார்த்து) அவர்களுக்காக அமருங்கள். அவர்கள் திருந்தி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்தால் அவர்களுடைய வழியை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன் பெரும் கருணையாளன்.
(நபியே!) இணைவைப்பவர்களில் ஒருவர் உம்மிடம் பாதுகாப்புத் தேடினால், அல்லாஹ்வின் பேச்சை அவர் செவியுறும் வரை அவருக்கு பாதுகாப்பு அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பான இடத்திற்குச் சேர்த்து விடுவீராக! அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அறியாத சமுதாயம் ஆகும்.
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைப்பவர்களுக்கு எப்படி ஒப்பந்தம் இருக்கும்? (ஆயினும்) புனித மஸ்ஜிதிடத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்தவர்களைத் தவிர. அவர்கள் உங்களுடன் ஒழுங்காக நடந்துகொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களை நேசிப்பான்.
எவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (தங்களுக்குள்ள) உறவையும் ஒப்பந்தத்தையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை) மறுக்கின்றன. (வெறுக்கின்றன). அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப விலையை வாங்கினார்கள். (மக்களை) அவனுடைய பாதையை விட்டுத் தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்தது கெட்டுவிட்டது.
அவர்கள், நம்பிக்கையாளர்கள் விஷயத்தில் உறவையும் ஒப்பந்தத்தையும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள்தான் வரம்பு மீறிகள்.
அவர்கள் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிகின்ற மக்களுக்கு (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.
அவர்கள் தங்கள் ஒப்பந்தத்திற்குப் பின்னர் தங்கள் சத்தியங்களை முறித்தால், உங்கள் மார்க்கத்தில் குறை கூறினால், அவர்கள் (இக்குற்றத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக (இத்தகைய) நிராகரிப்புடைய தலைவர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக அவர்களுக்கு சத்தியங்கள் அறவே இல்லை. (இவர்கள் தங்கள் சத்தியங்களின் படி நடந்து கொள்ள மாட்டார்கள்.)
தங்கள் சத்தியங்களை முறித்து தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றுவதற்கு உறுதியாக நாடிய மக்களிடம் நீங்கள் போர்புரிய மாட்டீர்களா? அவர்கள்தான் (விஷமத்தை) உங்களிடம் முதல் முறையாக ஆரம்பித்தனர். நீங்கள் அவர்களைப் பயப்படுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன்.
அவர்களிடம் போரிடுங்கள். உங்கள் கரங்களால் அல்லாஹ் அவர்களை வேதனைசெய்வான், அவர்களை இழிவுபடுத்துவான், அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான், நம்பிக்கை கொண்ட மக்களின் நெஞ்சங்க(ளில் உள்ள காயங்க)ளை குணப்படுத்துவான்.
அவர்களுடைய உள்ளங்களின் கோபத்தை போக்குவான். அல்லாஹ் (அவர்களில்) தான் நாடியவர் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனம் விரும்பி) போர்புரிந்து, அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களையும் அன்றி (மற்றவர்களை தங்கள்) அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல் இருக்க, நீங்கள் (இப்படியே) விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணினீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன்.
தங்கள் மீது நிராகரிப்பிற்கு (தாங்களே) சாட்சி கூறியவர்களாக இருக்கும் நிலையில் இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு உரிமை இருக்கவில்லை. அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. நரகத்தில்தான் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்பதெல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்(கள்)தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருக்கக்கூடும்.
ஹாஜிக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று நீங்கள் ஆக்கினீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னிடமிருந்து (தன்) கருணை, பொருத்தம் இன்னும் சொர்க்கங்களைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவற்றில் அவர்களுக்கு நிலையான இன்பம் உண்டு.
அவற்றில் அவர்கள் எப்போதும் நிரந்தரமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ், அவனிடம் மகத்தான கூலியுண்டு.
நம்பிக்கையாளர்களே! உங்கள் தாய் தந்தைகளையும், உங்கள் சகோதரர்களையும் பொறுப்பாளர்களாக (பாதுகாவலர்களாக) எடுத்துக் கொள்ளாதீர்கள் அவர்கள் இறைநம்பிக்கையை விட நிராகரிப்பை விரும்பினால். உங்களில் எவர்கள் அவர்களை பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொள்வார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
(நபியே!) கூறுவீராக: உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுவதை நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவனுடைய பாதையில் போரிடுவதையும்விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் தன் (வேதனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
திட்டவட்டமாக அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் (போர்) அன்றும் அல்லாஹ் உங்களுக்கு உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. பூமி அது விசாலமாக இருந்தும் உங்கள் மீது நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பினீர்கள்.
பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும் தன் (புறத்திலிருந்து) அமைதியை இறக்கினான். இன்னும் சில படைகளை இறக்கினான். அவற்றை நீங்கள் பார்க்கவில்லை. நிராகரித்தவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களின் கூலியாகும்.
பிறகு, அதற்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடியவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
நம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால் அல்லாஹ் நாடினால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (தேவையான செல்வத்தை உங்களுக்கு வழங்குவான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
வேதம் கொடுக்கப்பட்டவர்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காதவர்களிடம் -அவர்கள் (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்க, உடனே ‘ஜிஸ்யா’(வரி) கொடுக்கும் வரை- அவர்களிடம் போர் புரியுங்கள்.
‘உஜைர்’அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘மஸீஹ்’அல்லாஹ்வுடைய மகன் என்று கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வாய்களில் இருந்து வரும் அவர்களின் (கற்பனைக்) கூற்றாகும் (தவிர, உண்மையில்லை). முன்னர் நிராகரித்தவர்களின் கூற்றுக்கு ஒப்பாகி(பேசுகி)ன்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பான். அவர்கள் எப்படி (உண்மையை விட்டு) திருப்பப்படுகின்றனர்?
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் அறிஞர்களையும் தங்கள் துறவிகளையும் மர்யமுடைய மகன் (ஈசா) மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். வணக்கத்திற்குரிய ஒரே ஒரு கடவுளை அவர்கள் வணங்குவதற்குத் தவிர (இணை வைப்பதற்கு) அவர்கள் ஏவப்படவில்லை. வணங்கப்படும் கடவுள் அவனைத் தவிர (வேறு எவனும்) அறவே இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிகத் தூயவன்.
இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டு (ஊதி) அல்லாஹ்வுடைய ஒளியை அணைப்பதற்கு நாடுகின்றனர். நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தன் ஒளியை முழுமைப்படுத்துவதைத் தவிர (மற்றதை) மறுக்கிறான்.
அவன் தன் தூதரை நேர்வழியைக் கொண்டும் உண்மை மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், -இணைவைப்பவர்கள் வெறுத்தாலும்- எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அவன் அதை ஓங்க வைப்பதற்காக.
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்துவ அறிஞர்கள் இன்னும் துறவிகளில் இருந்து அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையைவிட்டு தடுக்கின்றனர். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
அவற்றின் மீது நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும் நாளில். அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளும், அவர்களுடைய விலாக்களும், அவர்களுடைய முதுகுகளும் சூடிடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.”
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு (மாதங்கள்) உண்டு. இதுதான் நேரான மார்க்க மாகும். ஆகவே, அவற்றில் (அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவதுபோன்று. நிச்சயமாக, அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(புனித மாதங்களை) பிற்படுத்துவதெல்லாம் நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகின்றனர். ஓர் ஆண்டில் (புனித மாதமாகிய) அதை ஆகுமாக்குகின்றனர். (வேறு) ஓர் ஆண்டில் அதை (புனிதம் என) தடை செய்கின்றனர். காரணம், அல்லாஹ் தடை செய்த (புனித மாதங்களின்) எண்ணிக்கைக்கு அவர்கள் ஒத்துவந்து, பிறகு, அல்லாஹ் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகும். அவர்களுடைய தீயச் செயல்கள், அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டன. அல்லாஹ் நிராகரிப்பவர்களான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்? மறுமையைவிட உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தியடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதே தவிர வேறில்லை!
(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய வேதனையால் உங்களை வேதனை செய்வான்; உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.
நீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்க நிராகரித்தவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன்தோழருக்கு “கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்”என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை(மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
நீங்கள் இலகுவானவர்களாக இன்னும் கனமானவர்களாக இருக்க (போருக்கு) புறப்படுங்கள், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் போரிடுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்தது. (இலகுவானவர்கள்: வாலிபர்கள், வாகனிப்பவர்கள், செல்வந்தர்கள். கனமானவர்கள்: வயோதிகர்கள், கால்நடையாக செல்பவர்கள், ஏழைகள்.)
(நபியே!) அருகில் உள்ள பொருளாகவும் சமீபமான பயணமாகவும் இருந்திருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றி இருப்பார்கள். எனினும் அவர்கள் மீது (செல்லவேண்டிய) எல்லை தூரமாகி விட்டது. “நாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால் உங்களுடன் வெளியேறி இருப்போம்“என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். (பொய் சத்தியத்தால் அவர்கள்) தங்களையே அழிக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்பதை அல்லாஹ் அறிவான்.
அல்லாஹ் உம்மை மன்னிப்பான்! (அவர்களில்) உண்மை உரைத்தவர்கள் (எவர்கள் என்று) உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை(யும் அவர்கள் யாரென்று) நீர் அறிகின்ற வரை ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்?
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடுவதிலிருந்து (விலகியிருக்க) உம்மிடம் அனுமதி கோர மாட்டார்கள். அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களை நன்கறிந்தவன்.
உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகித்தன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்தில் தடுமாறுகின்றனர்.
அவர்கள் (போருக்கு) வெளியேறுவதை நாடியிருந்தால் அதற்கு ஒரு தயாரிப்பை ஏற்பாடு செய்திருப்பார்கள். எனினும் (உம்முடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்தான். ஆகவே, அவர்களைத் தடுத்து விட்டான். தங்குபவர்களுடன் தங்கிவிடுங்கள் என்றும் (அவர்களுக்கு) கூறப்பட்டது.
அவர்கள் உங்களுடன் வெளியேறி (வந்து) இருந்தால் தீமையைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்; உங்களுக்கு குழப்பத்தைத் தேடி உங்களுக்கிடையில் விரைந்திருப்பார்கள். அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
(அவர்கள் இதற்கு) முன்னர் குழப்பத்தைத் தேடியுள்ளனர். உமக்கு காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர். இறுதியாக (வெற்றி எனும்) சத்தியம் வந்தது, அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தும் அல்லாஹ்வின் கட்டளை (மார்க்கம்) வென்றது.
(நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்”என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள் அவர்கள் சோதனையில் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது.
(நபியே!) உம்மை ஒரு நன்மை அடைந்தால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. உம்மை ஒரு சோதனை அடைந்தால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று கூறி, அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (உம்மை விட்டு) திரும்புகின்றனர்.
(நபியே!) “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) எங்களை அறவே அடையாது; அவன்தான் எங்கள் (எஜமானன்,) இறைவன்” என்று கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கவும்.
கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ் தன்னிடமிருந்து அல்லது எங்கள் கரங்களால் ஒரு வேதனையைக் கொண்டு உங்களை சோதிப்பதை நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களுடன் எதிர்பார்ப்பவர்கள்.
“விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்”என்று கூறுவீராக!
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; அவர்கள் சோம்பேறிகளாக இருந்தே தவிர தொழுகைக்கு வரமாட்டார்கள்; அவர்கள் வெறுத்தவர்களாக இருந்தே தவிர (அவர்கள்) தர்மம் புரிய மாட்டார்கள் ஆகிய இவற்றைத் தவிர அவர்களுடைய தர்மங்கள் அவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படுவதற்கு (வேறு எதுவும்) அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை.
(நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் அவர்களை உலக வாழ்க்கையில் வேதனை செய்வதையும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்க அவர்களுடைய உயிர்கள் பிரிந்து சென்று விடுவதையும்தான்.
“நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்”என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். (ஆனால்) அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும் அவர்கள் பயப்படுகிற மக்கள் ஆவர்.
ஒரு ஒதுங்குமிடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் கண்டால் அவர்களோ விரைந்தவர்களாக அதன் பக்கம் திரும்பியிருப்பார்கள்.
(நபியே!) தர்மங்களில் உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் உண்டு. அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்பட்டால் திருப்தியடைவார்கள். அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படவில்லையென்றால் அப்போது அவர்கள் ஆத்திரப்படுகின்றனர்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததை நிச்சயமாக அவர்கள் திருப்தியடைந்து, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தனது அருளிலிருந்து(ம்) இன்னும் அவனுடைய தூதர் (தன் தர்மத்திலிருந்தும்) எங்களுக்குக் கொடுப்பார்கள்; நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் பக்கம்தான் ஆசையுள்ளவர்கள்”என்றும் அவர்கள் கூற வேண்டுமே!
ஸகாத்துகள் அல்லாஹ்விடமிருந்து (விதிக்கப்பட்ட) கடமையாக வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும், அவர்களின் உள்ளங்கள் (புதிதாக இஸ்லாமுடன்) இணைக்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளுக்கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
“அவர் (அனைத்தையும் செவியேற்கும்) ஒரு காது” என்று கூறி நபியை இகழ்பவர்களும் அவர்களில் உள்ளனர். (நபியே!) கூறுவீராக: “(அவர்) உங்களுக்கு நல்ல காது ஆவார். (அவர்) அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார்; நம்பிக்கையாளர்களை ஏற்றுக் கொள்கிறார். உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு கருணையாவார்.” அல்லாஹ்வின் தூதரை இகழ்பவர்கள் அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.
உங்களைத் திருப்திபடுத்துவதற்காக அவர்கள் உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திபடுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்.
நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முரண்படுவாரோ அவருக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் உண்டு, அதில் (அவர்) நிரந்தரமானவர் என்பதை அவர்கள் அறியவில்லையா? இதுதான் பெரிய இழிவாகும்.
(நம்பிக்கை கொண்ட) அவர்கள் மீது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு அறிவித்துவிடுவதை நயவஞ்சகர்கள் (போலியாக) பயப்படுகின்றனர். கூறுவீராக: “பரிகசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்குபவன் ஆவான்.”
(இதைப் பற்றி) நீர் அவர்களைக் கேட்டால் “நாங்கள் இருந்ததெல்லாம் (பேச்சில்) மூழ்குபவர்களாகவும் விளையாடுபவர்களாகவும்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையுமா பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?”
நீங்கள் (செய்யும் விஷமத்தனத்திற்கு) புகல் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தால் (மற்ற) ஒரு கூட்டத்தை நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால், வேதனை செய்வோம்.
நயவஞ்சக ஆண்களும், நயவஞ்ச பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்களே! அவர்கள் தீமையை ஏவுகின்றனர்; நன்மையை விட்டு தடுக்கின்றனர். தங்கள் கரங்களை மூடிக் கொள்கின்றனர் (கருமித்தனம் செய்கின்றனர்). அவர்கள் அல்லாஹ்வை மறந்தார்கள்; ஆகவே, (அல்லாஹ்வும்) அவர்களை மறந்தான். நிச்சயமாக நயவஞ்சகர்கள்தான் பாவிகள்.
நயவஞ்சக ஆண்களுக்கும் நயவஞ்சக பெண்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகத்தின் நெருப்பை அல்லாஹ் வாக்களித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அதுவே அவர்களுக்குப் போது(மான கூலியாகு)ம். அல்லாஹ் அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
(நயவஞ்சகர்களே! நீங்கள்) உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே. அவர்கள் உங்களைவிட பலத்தால் கடுமையானவர்களாக; செல்வங்களாலும் சந்ததிகளாலும் அதிகமானவர்களாக இருந்தனர். (அவர்கள் இவ்வுலகில்) தங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்கள் பங்கைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தது போன்று, (நீங்களும்) உங்கள் பங்கைக் கொண்டு சுகமடைந்தீர்கள். அவர்கள் (பரிகசிப்பதில்) மூழ்கியது போன்றே (நீங்களும்) மூழ்கினீர்கள். அவர்கள், இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அவ்வாறே நீங்களும் நஷ்டவாளிகள்.)
இவர்களுக்கு முன்னருள்ள நூஹ் (நபி) உடைய சமுதாயம், ஆது, ஸமூது, இப்றாஹீம் (நபி) உடைய சமுதாயம், மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் சரித்திரம் அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாக இருந்தனர்.
நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள். அவர்கள், நன்மையை ஏவுகின்றனர்; தீமையைவிட்டு தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தை கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களையும், (அத்ன் எனும்) நிலையான சொர்க்கங்களில் நல்ல தங்குமிடங்களையும் அல்லாஹ் வாக்களித்தான். (அவர்கள்) அவற்றில் நிரந்தரமானவர்கள். அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
நபியே! நிராகரிப்பவர்களிடமும் நயவஞ்சகர்களிடமும் போரிடுவீராக. அவர்களைக் கண்டிப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். மீளுமிடத்தால் அது கெட்டுவிட்டது.
(நயவஞ்சகர்கள்) தாங்கள் (தூதருக்கு எதிராக ஏதும்) கூறவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியமிடுன்றனர். நிராகரிப்பின் வார்த்தையை அவர்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிமானதற்குப் பின்னர் நிராகரித்தனர். அவர்கள் அடைய முடியாததை (செய்ய) திட்டமிட்டனர். (அதாவது தூதரை கொல்வதற்கு முயற்சித்தனர்.) அல்லாஹ் தன் அருளினால், இன்னும் அவனுடைய தூதர் (தனது தர்மத்தினால்) இவர்களுக்கு (செல்வத்தை வழங்கி) நிறைவாக்கினார்கள் என்பதற்கே தவிர (வேறு எதற்காகவும்) இவர்கள் (தூதரை) தண்டிக்க (நாட)வில்லை. (அதாவது அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரின் உபகாரத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக நன்றிகெட்டதனமாக தூதரையே கொல்ல நாடினர் நயவஞ்சகர்கள்.) அவர்கள் திருந்தினால் அது அவர்களுக்கே சிறந்ததாக இருக்கும். அவர்கள் (திருந்தாமல்) விலகிச் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை துன்புறுத்தக்கூடிய வேதனையால் வேதனை செய்வான். பூமியில் அவர்களுக்கு (எந்த) ஒரு பாதுகாவலரும் இல்லை, எந்த ஓர் உதவியாளரும் இல்லை.
“(அல்லாஹ்) தன் அருளிலிருந்து எங்களுக்குக் கொடுத்தால் நிச்சயமாக நாம் தர்மம் செய்வோம்; நிச்சயமாக நாம் நல்லவர்களில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்தவர்களும் அவர்களில் உண்டு.
அவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்தபோது, அதில் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே (தங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றாது) விலகிவிட்டனர்.
ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் வாக்களித்ததற்கு மாறாக நடந்த காரணத்தினாலும் அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்கள் அவனை சந்திக்கும் நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் அவர்களுக்கு நயவஞ்சகத்தை முடிவாக்கினான்.
நிச்சயமாக அவர்களின் ரகசியத்தையும் இன்னும் அவர்களின் பேச்சையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிகமிக அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
நம்பிக்கையாளர்களில் இருந்து தர்மங்களில் உபரியாக (தர்மம்) செய்பவர்களையும் (தர்மம் புரிய) தங்கள் உழைப்பைத் தவிர (செல்வம் எதையும்) பெறாதவர்களையும் இவர்கள் குறை கூறுகின்றனர் (குத்திப் பேசுகின்றனர்). இன்னும் அல்லாஹ் அவர்களை கேலிசெய்கிறான். துன்புறுத்தக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.
(நபியே!) நீர் அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! அல்லது அவர்களுக்காக மன்னிப்புத் தேடாதீர்! அவர்களுக்காக நீர் எழுபது முறை மன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். அதற்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; அல்லாஹ், பாவிகளான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
பின் தங்கியவர்கள், அல்லாஹ்வின் தூதருக்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) தாங்கள் தங்கியதைப் பற்றி மகிழ்சியடைந்தனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போரிடுவதை வெறுத்தனர். (மற்றவர்களுக்கு) “வெயிலில் (போருக்குப்) புறப்படாதீர்கள்” என்று கூறினர். (நபியே!) “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிகக் கடுமையானது” என்று கூறுவீராக. (இதை) அவர்கள் சிந்தித்து விளங்குபவர்களாக இருக்க வேண்டுமே!
(இவ்வுலகில்) அவர்கள் குறைவாக சிரிக்கட்டும். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலியாக (மறுமையில்) அதிகமாக அழட்டும்!
(நபியே!) அல்லாஹ் உம்மை (வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்திடம் திருப்பி, (அடுத்த போரில் உம்முடன்) அவர்கள் வெளியேறுவதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், (நீர்) கூறுவீராக: “ஒருபோதும் என்னுடன் அறவே புறப்படாதீர்கள். என்னுடன் சேர்ந்து (எந்த) ஒரு எதிரியிடமும் அறவே போரிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் முதல் முறை (வீட்டில்) உட்கார்ந்து விடுவதை விரும்பினீர்கள். ஆகவே, (இப்போதும்) பின் தங்கிவிடுபவர்களுடன் உட்கார்ந்து விடுங்கள்.”
(நபியே!) அவர்களில் இறந்த ஒருவர் மீது ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழாதீர். அவருடைய புதைகுழிக்கு அருகில் நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர். இன்னும் அவர்களோ பாவிகளாக இறந்தனர்.
அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் உலகில் அவர்களை வேதனை செய்வதற்கும், அவர்கள் நிராகரித்தவர்களாக இருக்க அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும்தான்.
அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனுடைய தூதருடன் சேர்ந்து போரிடுங்கள் என்று ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்களிலுள்ள செல்வந்தர்கள் உம்மிடம் அனுமதிகோரி, “எங்களை விட்டுவிடுவீராக!; (போருக்கு வராமல் வீட்டில்) உட்கார்ந்தவர்களுடன் (நாங்களும்) இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.
பின் தங்கிய பெண்களுடன் அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டது. அவர்கள் சிந்தித்து விளங்க மாட்டார்கள்.
எனினும் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் (அல்லாஹ்வின் பாதையில்) போரிட்டனர். அவர்களுக்குத்தான் நன்மைகள் உண்டு. அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
அல்லாஹ், அவர்களுக்காக சொர்க்கங்களை ஏற்படுத்தினான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அதுதான் மகத்தான வெற்றி.
கிராமவாசிகளில் புகல் கூறுபவர்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு (புகல் கூறி) வந்தார்கள், அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கோராமல்) உட்கார்ந்தார்கள். இவர்களில் நிராகரித்தவர்களை துன்புறுத்தும் வேதனை அடையும்.
பலவீனர்கள் மீதும், நோயாளிகள் மீதும், (போருக்கு) செலவழிப்பதை பெறாதவர்கள் மீதும் -அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நன்மையை நாடினால்- ஒரு குற்றமுமில்லை. நல்லறம் புரிவோர் மீது (குற்றம் கூற) வழி ஏதும் இல்லை. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
நீர் அவர்களை (வாகனத்தில்) ஏற்றுவதற்காக உம்மிடம் அவர்கள் வந்தால் உங்களை ஏற்றுவதற்கு நான் எதையும் பெறவில்லையே என்று நீர் கூற, (போருக்கு) செலவு செய்வதை தாம் பெறாத கவலையினால் அவர்களுடைய கண்கள் கண்ணீரால் பொங்கி வழிய திரும்பியவர்கள் மீதும் (குற்றம்) இல்லை.
(குற்றம் சுமத்த) வழியெல்லாம் அவர்கள் செல்வந்தர்களாக இருக்க உம்மிடம் அனுமதி கோருபவர்கள் மீதுதான். அவர்கள் பின் தங்கிய பெண்களுடன் ஆகுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். ஆகவே, அவர்கள் அறிய மாட்டார்கள்.
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களிடம் திரும்பினால் உங்களிடம் அவர்கள் புகல் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: “புகல் கூறாதீர்கள். நாங்கள் உங்க(ள் புகல்க)ளை நம்ப மாட்டோம். உங்கள் செய்திகளிலிருந்து (சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்ப்பான். இன்னும் அவனுடைய தூதரும் (உங்கள் செயலைப் பார்ப்பார்.) பிறகு மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)னிடம் திருப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
அவர்களிடம் நீங்கள் திரும்பினால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமி(ட்)டு (பொய் கூறு)வார்கள். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு கூலியாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைவதற்காக உங்களிடம் சத்தியமிடுகின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (அம்)மக்களைப் பற்றி திருப்தியடையமாட்டான்.
நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் கிராம அரபிகள் மிகக் கடுமையானவர்கள். இன்னும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியவற்றின் சட்டங்களை அவர்கள் அறியாமல் இருக்க மிகத் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்
தாங்கள் தர்மம் செய்வதை நஷ்டமாக எடுத்துக் கொள்பவர்களும் கிராம அரபிகளில் உண்டு. உங்களுக்கு (கெட்ட) சுழற்சிகளை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் மீதுதான் வேதனையின் சுழற்சி உள்ளது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தாங்கள் தர்மம் புரிவதை அல்லாஹ்விடம் வணக்கங்களாகவும், தூதரின் பிரார்த்தனைகளாகவும் எடுத்துக் கொள்பர்களும் கிராம அரபிகளில் (சிலர்) உண்டு. அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அது அவர்களுக்கு வணக்கமாகும். அல்லாஹ் அவர்களைத் தன் கருணையில் நுழைப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
முஹாஜிர்களிலும் அன்ஸாரிகளிலும் முதலாமவர்களான முந்தியவர்கள், இன்னும் இவர்களை நல்லறத்தில் பின்பற்றிய(மற்ற)வர்கள் ஆகிய இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) ஏற்படுத்தினான். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
உங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் இன்னும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது ஊறிவிட்டனர். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை அறிவோம். அவர்களை இருமுறை வேதனை செய்வோம். பிறகு, பெரிய வேதனையின் பக்கம் (அவர்கள்) திருப்பப்படுவார்கள்.
மற்றவர்கள் சிலர் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். நல்ல செயலையும் மற்ற கெட்டதையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன்,பெரும் கருணையாளன்.
(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். அவர்களுக்கு பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
நிச்சயமாக, அல்லாஹ்தான் தன் அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்துவதை (பிழை பொருப்பை) ஏற்கிறான்; தர்மங்களை எடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின் தவ்பாவை) மகா அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா?
(நபியே!) கூறுவீராக: “(நீங்கள் செய்வதை) செய்யுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்க்கிறார்கள். மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் திருப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
இன்னும், அல்லாஹ்வின் உத்தரவிற்காக தள்ளிவைக்கப்பட்ட மற்றவர்கள் ஒன்று, அல்லாஹ் அவர்களை தண்டிப்பான். அல்லது அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
கெடுதல் செய்வதற்காகவும் நிராகரிப்பிற்காகவும் நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிப்பதற்காகவும் முன்னர் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர்பார்த்தும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக்கொண்டவர்களும் (அவர்களில் உள்ளனர்). “நாங்கள் நன்மையைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை”என்று நிச்சயமாக சத்தியம் செய்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
ஒருபோதும் அதில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை விரும்புகின்ற ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்களை நேசிக்கிறான்.
அல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தான் கட்டுவதை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது தான் கட்டுவதை சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் அடித்தளமிட்டு, அது அவனுடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகமாகவே நீடித்திருக்கும், அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டானால் தவிர (அது நீங்காது). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள்; (எதிரிகளை) கொல்வார்கள்; (அவர்களிலும் சிலர்) கொல்லப்படுவார்கள். தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் தன் மீது கடமையான வாக்குறுதியாக (அல்லாஹ் இதை வாக்களித்துள்ளான்). அல்லாஹ்வைவிட தன் வாக்கை அதிகம் நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, அதற்குப் பகரமாக நீங்கள் விற்றுக்கொண்ட விற்பனையைக் கொண்டு மகிழ்ச்சியுறுங்கள். இதுதான் மகத்தான வெற்றி!
(அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; (அல்லாஹ்வை) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; பாவத்தை விட்டுத் தடுக்கக்கூடியவர்கள்; அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவர். (இத்தகைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!
நிச்சயமாக (இணைவைப்பவர்கள்) அவர்கள் நரகவாசிகள் என்று தங்களுக்குத் தெளிவாகிய பின்னர், அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் இணைவைப்பவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல.
(நபி) இப்றாஹீம் தன் தந்தைக்கு மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதிக்காகவே தவிர (வேறு எதற்காகவும்) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவர் ஓர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர்.
ஒரு கூட்டத்தை அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெடுப்பவனாக ஆகியிருக்கவில்லை.நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; இன்னும் மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு எந்த ஒரு பாதுகாவலரும் இல்லை; ஓர் உதவியாளரும் இல்லை.
நபி இன்னும் சிரம காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள், திட்டவட்டமாக அன்ஸாரிகள் மீது அல்லாஹ் மன்னித்தான் (தோழர்களாகிய) அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் வழிதவற நெருங்கிய பின்னர். பிறகு(ம்) அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன் ஆவான்.
(மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவர் மீதும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாகும் வரையும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்களும் நெருக்கடியாகும் வரை (அவர்கள் பிற்படுத்தப்பட்டனர்). அல்லாஹ்விடமிருந்து (தப்பி) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்துவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின் தவ்பாவை) மகா அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும் உண்மையாளர்களுடன் இருங்கள்.
மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரைவிட தங்கள் உயிர்களை நேசிப்பதும்- தகுந்ததல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஓரு தாகமோ, ஒரு களைப்போ, ஓரு பசியோ அடையாது; இன்னும் நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற ஓர் இடத்தை இவர்கள் மிதிக்க மாட்டார்கள்; எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை இவர்கள் அடையமாட்டார்கள் இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்பட்டே தவிர. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிவோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
(போரில்) ஒரு சிறிய, பெரிய தர்மத்தை அவர்கள் தர்மம் புரியமாட்டார்கள்; ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் கடக்க மாட்டார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக அழகியதை அல்லாஹ் அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக அவர்களுக்கு (நன்மையாக) அது பதியப்பட்டே தவிர.
நம்பிக்கையாளர்கள் அனைவருமே (நபியை தனியாக விட்டுவிட்டு ஊரிலிருந்து) புறப்படுவது சரியல்ல. மார்க்கத்தில் அவர்கள் ஞானம் பெறுவதற்காகவும் தங்கள் சமுதாயத்திடம் திரும்பும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் உங்களில் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு கூட்டம் (மட்டும் போருக்கு) புறப்பட்டிருக்க வேண்டாமா? (ஊரில் தங்கிய) அவர்கள் (இதன் மூலம்) எச்சரிக்கையாக இருப்பார்கள்.
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களில் உங்களை அடுத்திருக்கின்றவர்களிடம் போரிடுங்கள். அவர்கள் உங்களிடம் ஒரு கடுமையைக் காணட்டும். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கின்றனர். ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களோ, அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்களோ மகிழ்ச்சியடைகின்றனர்.
அகவே, எவர்களுடைய உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துடன் ஒரு அசுத்தத்தையே (அது) அதிகப்படுத்தியது! அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே இறந்தனர்.
ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகும் அவர்கள் திருந்தவில்லை; அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை.
ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறியாத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை திருப்பிவிட்டான்.
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது பேராசையுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரும் இரக்கமுள்ள; பெரும் கருணையுள்ள ஒரு தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்துவிட்டார்.
(நபியே) கூறுவீராக! அவர்கள் (உம்மை விட்டு விலகி) திரும்பினால் “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர அறவே வணக்கத்திற்குரிய (வேறு இறை)வன் இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன்; அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி.”
Icon