ترجمة سورة المزّمّل

الترجمة التاميلية
ترجمة معاني سورة المزّمّل باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
2. (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)
3. அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்;
4. அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக.
5. நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உம் மீது இறக்கிவைப்போம்.
6. நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது.
7. நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன.
8. நீர் (அவற்றில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீராக!
9. அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீர் (உமது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக.
10. (நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருப்பீராக.
11. (நபியே! நீர் அவர்களுக்குச் சிபாரிசு செய்யாது) என்னையும், என்னைப் பொய்யாக்கி வைக்கும் அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடுவீராக! அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
12. நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு கை கால்களில் போடப்படும்) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கிறது.
13. விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கிறது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கிறது.
14. அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும்.
15. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நமது) தூதர் ஒருவரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பிவைத்தோம்.
16. எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனைப் பலமாகப் பிடித்துக் கொண்டோம்.
17. நீங்கள் (இதை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம் பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கின்ற) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்.
18. (அந்நாளில்) வானம் பிளந்துவிடும்; இது நடந்தே தீரவேண்டிய அவனுடைய வாக்குறுதியாகும்.
19. நிச்சயமாக இது மிக்க நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய (இவ்)வழியை எடுத்துக்கொள்ளவும்.
20. (நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (தொழுகையில்) நின்று வருகிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (ஏழைகளுக்கு உதவுவதன் மூலம்) அல்லாஹ்வுக்கு அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவற்றையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
Icon