ترجمة سورة مريم

الترجمة التاميلية
ترجمة معاني سورة مريم باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. காஃப் ஹா யா ஐன் ஸாத்.
2. (நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக.
3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது,
4. ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.)
5. நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு!
6. அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார்.
7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.)
8. அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்.
9. அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான்.
10. அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்.
11. பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்.
12. (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
13. இன்னும், இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறையச்சமுடையவராகவே இருந்தார்.
14. மேலும், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். (அவர்களுக்கு) மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.
15. அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது ஸலாம் நிலவுக!
16. (நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று,
17. (குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.
18. (அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்.
19. அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை ‘‘உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்ப தற்காக உமது இறைவனால் அனுப்பப்பட்ட (வானவ) தூதர்தான் நான்'' என்றார்.
20. அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்.
21. அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்.
22. பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.
23. பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்.
24. (பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்.
25. இப்பேரீச்ச மரத்தின் கிளையை, உமது பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குவீராக. அது பழுத்த பழங்களை உம் மீது சொரியும்.
26. ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.
27. பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்.
28. ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக் கெட்டவளாக இருக்கவில்லையே!'' என்று கூறினார்கள்.
29. (அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்.
30. (இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்.
31. நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.
32. என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்.
33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது).
34. இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.
35. ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.
36. நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)
37. ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்.
38. (இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
39. ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
40. நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவர்களுக்கும் சொந்தம் கொள்வோம். அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
41. (நபியே!) இவ்வேதத்தில் இப்றாஹீமை பற்றியும் கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராக, நபியாக இருந்தார்.
42. அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்.
43. ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்.
44. என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்.
45. என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்).
46. அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்.
47. அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார்.
48. ‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்.)
49. பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்.
50. அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)
51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
52. தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.
53. நம் கருணையினால் அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு வழங்கினோம்.
54. (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
55. தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்.
56. (நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார்.
57. இன்னும் அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.
58. (ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.
59. (இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்.
60. ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
61. அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.
62. (அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்.
63. இத்தகைய சொர்க்கத்திற்கு நம் அடியார்களில் இறையச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்.
64. (வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல.
65. வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).
66. (இவ்வாறிருக்க) மனிதன் ‘‘நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.
67. இதற்கு முன்னர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் நினைத்துப்பார்க்க வேண்டாமா?
68. ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்.
69. பின்னர், ரஹ்மானுக்கு மாறுசெய்வதில் கடினமாக இருந்த அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்து நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம்.
70. பின்னர், நரகத்தில் எரிவதற்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம்.
71. அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.
72. ஆனால், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.
73. நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்.
74. இவர்களை விட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
75. (நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்.
76. நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.
77. (நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான்.
78. அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?
79. (இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்.
80. அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.
81. (இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்.
82. அவ்வாறல்ல; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும்.
83. (நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
84. ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.
85. இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில்,
86. இன்னும் குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் நாம் ஓட்டுகின்ற நாளில்,
87. ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்.
88. ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர்.
89. (நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்.
90. வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன.
91. ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால்.
92. சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல.
93. ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது.
94. அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.
95. அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும்.
96. நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.
97. (நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
98. இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?
Icon