ترجمة سورة الزخرف

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة الزخرف باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

ஹா, மீம்.
தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக!
நிச்சயமாக நாம் இதை அரபிமொழி குர்ஆனாக ஆக்கினோம், நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக.
நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) தாய் புத்தகத்தில் (அல்லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ளதும், நம்மிடம் மிக உயர்ந்ததும் மகா ஞானமுடையதும் ஆகும்.
நீங்களோ வரம்பு மீறுகின்ற மக்களாக இருக்க, (உங்களை) மன்னித்து உங்களைப் பற்றி (-உங்களுக்குரிய தண்டனையைப் பற்றி) கூறுவதை நாம் விட்டுவிடுவோமா?
முந்தியவர்களில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்.
அவர்களிடம் எந்த ஒரு நபியும் வருவதில்லை, அவர்கள் அவரை பரிகாசம் செய்கின்றவர்களாக இருந்தே தவிர.
ஆக, (உம்மை ஏற்க மறுக்கின்ற) இவர்களைவிட வலிமையால் மிக பலமான(அ)வர்களை நாம் அழித்தோம். முந்தியவர்களின் உதாரணம் (தண்டனை, இவர்களின் கண் முன்) சென்றிருக்கிறது.
வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள், (பதில்) கூறுவார்கள்:
அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். இன்னும் அதில் உங்களுக்கு பாதைகளை ஏற்படுத்தினான் (அவற்றின் மூலம்) நீங்கள் (உங்களுக்குத் தேவையான இடங்களுக்கு) சரியான பாதையில் செல்வதற்காக.
அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப்படுவீர்கள்.
அவன் தான் ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், உங்களுக்கு கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் பயணம் செய்கின்றவற்றை ஏற்படுத்தினான்.
அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும் பிறகு உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும், இன்னும் நீங்கள் (பின்வரும் பிரார்த்தனையை) நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை படைத்தான் அந்த இறைத்துதியாவது:) “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.
இன்னும், (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்புகின்றவர்கள் ஆவோம்”
அவனது அடியார்களில் சிலரை (-வானவர்களை) அவர்கள் அவனுக்கு (குழந்தைகளாக) ஆக்கிவிட்டனர். நிச்சயமாக மனிதன் மிகத் தெளிவான மகா நன்றி கெட்டவன் ஆவான்.
அவன் தான் படைத்தவற்றில் பெண் பிள்ளைகளை (தனக்கு) எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்(துக்கொடுத்)தானா?
அவர்களில் ஒருவருக்கு, அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ (-வானவர்கள் அல்லாஹ்வின் பெண் குழந்தைகள் என்று) அதை (-அவருக்கு பெண் பிள்ளை பிறந்திருப்பதை) நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும் அவர் துக்கப்படுகிறார்.
யார் ஆபரணங்களில் (அவை அணிவிக்கப்பட்டு) வளர்க்கப்படுகிறாரோ, இன்னும் அவர் வாதிப்பதில் தெளிவற்றவராக இருக்கின்றாரோ அவரையா அல்லாஹ் தனக்கு பிள்ளைகளாக எடுத்துக்கொள்வான்? (பலவீனமான படைப்பாகிய பெண்களையா அல்லாஹ்விற்கு பிள்ளைகள் என்று கூறுகின்றீர்கள்?)
ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை பெண்களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி சாட்சியாக இருந்து) பார்த்தார்களா? இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். (அது பற்றி) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
இவர்கள் கூறுகின்றனர்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனை செய்கின்றவர்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை.
இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் அதை பற்றிப் பிடித்திருக்கின்றார்களா? (அப்படி ஒரு வேதத்தை நாம் கொடுக்கவில்லையே! அப்படி இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)
மாறாக, அவர்கள் கூறுகின்றனர்: நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே நேர்வழி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)
இவ்வாறு உமக்கு முன்னர் நாம் எந்த ஓர் எச்சரிப்பாளரையும் ஓர் ஊரில் அனுப்பியதில்லை, “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்று அதன் செல்வந்தர்கள் கூறியே தவிர. (முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)
(நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்”
ஆகவே, அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். ஆக, பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் கவனிப்பீராக!
இப்ராஹீம் தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! "நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்,
“என்னை(யும் உங்களையும்) படைத்தவனைத் தவிர. (மற்ற அனைத்து பொய்யான தெய்வங்களை விட்டும் நான் முற்றிலும் நீங்கியவன்.) நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
இதை (-“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை”என்பதை) தனது சந்ததிகளில் நீடித்து இருக்கின்ற ஒரு வாக்கியமாக - சட்டமாக அவர் ஆக்கினார், அவர்கள் (தங்கள் இறைவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக.
(இவர்களை நாம் அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. தெளிவான தூதரும் (அவர்களிடம் வந்தார்).
அவர்களிடம் உண்மையான வேதம் வந்தபோது, “இது சூனியம்” என்றும் “நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிப்பவர்கள்” என்றும் கூறினார்கள்.
இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட வேண்டாமா! என்று அவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்க்கையை இவ்வுலக வாழ்வில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்வாக்கினோம், அவர்களில் சிலர் சிலரை (அவர்கள் தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (-ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுவதற்காக.) உமது இறைவனின் அருள்தான் (-சொர்க்கம்தான் இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் சேகரிப்பதைவிட மிகச் சிறந்ததாகும்.
மக்கள் எல்லாம் (குஃப்ர் - நிராகரிப்பில் மாறிவிடுவார்கள், நிராகரிக்கின்ற) ஒரே ஒரு சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்று இல்லையெனில் ரஹ்மானை (-அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களுக்கு - அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன முகடுகளையும் ஏணிகளையும் நாம் ஆக்கியிருப்போம். அவற்றின் மீது (-அந்த ஏணிகளின் மீது) அவர்கள் (தங்கள் வீட்டு மாடிகளுக்கு) ஏறுவார்கள்.
இன்னும் அவர்களின் வீடுகளுக்கு (வெள்ளிக்) கதவுகளையும் கட்டில்களையும் (நாம் ஆக்கியிருப்போம்). அவர்கள் அவற்றின் மீது சாய்ந்து படுப்பார்கள்.
தங்கத்தையும் (நாம் அவர்களுக்கு சொந்தமாக்கி இருப்போம்). இவை எல்லாம் உலக வாழ்க்கையின் இன்பங்களே தவிர வேறு இல்லை. உமது இறைவனிடம் உள்ள மறுமை (-சொர்க்க வாழ்க்கை) இறையச்சமுள்ளவர்களுக்குத் தான்.
யார் ரஹ்மானை நினைவு கூர்வதை புறக்கணிப்பாரோ (அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மாட்டாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான்.
நிச்சயமாக இவர்கள் (-இந்த ஷைத்தான்கள்) அவர்களை (-இணை வைப்பவர்களை நேரான) பாதையில் இருந்து தடுக்கின்றனர். இன்னும், அ(ந்த இணைவைப்ப)வர்கள் நிச்சயமாக தாங்கள் நேர்வழி நடப்பவர்கள்தான் என்று எண்ணுகிறார்கள்.
இறுதியாக, அவன் (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்தவன்) நம்மிடம் வரும் போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-அந்த ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான்.
நீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக நீங்கள் (-வழி கெடுத்தவர்கள், வழிகெட்டவர்கள் எல்லோருமாக) வேதனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக வேதனை பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான வேதனை கொடுக்கப்படும்.)
(அல்லாஹ்வின் வேத ஆதாரங்களை செவி ஏற்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடர்களாகவும் அவனது அத்தாட்சிகளை பார்க்கமுடியாமல் யாரை அல்லாஹ் குருடர்களாகவும் ஆக்கிவிட்டானோ) அந்த செவிடர்களை நீர் செவி ஏற்க வைக்க முடியுமா? அல்லது அந்த குருடர்களையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவர்களையும் நீர் நேர்வழி நடத்திட முடியுமா?
ஆகவே, ஒன்று (நபியே!) நிச்சயமாக உம்மை நாம் மரணிக்கச் செய்வோம். பிறகு, நிச்சயமாக நாம் அவர்களிடம் பழிவாங்குவோம்.
அல்லது அவர்களுக்கு நாம் வாக்களித்ததை (-வேதனையை) நாம் உமக்கு (உமது வாழ்நாளிலேயே) காண்பிப்போம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது முழு ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்!
ஆகவே, (நபியே!) உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை (-இந்த குர்ஆனை) உறுதியாக பற்றிப்பிடிப்பீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கின்றீர்.
நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) உமக்கும் உமது மக்களுக்கும் ஒரு (பெரிய) சிறப்பாகும். (இதன் படி நீங்கள் அமல் செய்தது பற்றி) உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்.
உமக்கு முன்னர் நாம் நமது தூதர்களில் அனுப்பியவர்களை (-அவர்களின் சமுதாயத்தை சேர்ந்த நம்பிக்கையாளர்களை) நீர் விசாரிப்பீராக! “ரஹ்மானை அன்றி வணங்கப்படுகின்ற (வேறு) கடவுள்களை நாம் ஏற்படுத்தி இருக்கின்றோமா? என்று.
திட்டவட்டமாக நாம் மூசாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். அவர் கூறினார்: “நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.”
அவர்களிடம் அவர் நமது அத்தாட்சிகளுடன் வந்த போது அப்போது அவர்கள் அவற்றைப் பார்த்து சிரித்தார்கள்.
அவர்களுக்கு நாம் ஓர் அத்தாட்சியைக் காண்பிக்க மாட்டோம் அது அதன் சகோதரியை விட (-முந்தி வந்த அத்தாட்சியை விட) பெரியதாக இருந்தே தவிர. நாம் அவர்களை வேதனையால் பிடித்தோம் அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக.
அவர்கள் கூறினர்: “ஓ சூனியக்காரரே! (-அறிஞரே! உமது இறைவன்) உம்மிடம் வாக்களித்ததை (-கேட்டு அல்லது இந்த வேதனையை நீக்குமாறு) உமது இறைவனிடம் எங்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்.”
அவர்களை விட்டும் நாம் வேதனையை அகற்றும் போது அப்போது அவர்கள் (மூசாவிற்கு கொடுத்த வாக்கை) முறித்து விடுகின்றனர்.
ஃபிர்அவ்ன் தனது மக்களை அழைத்தான்: “என் மக்களே! எகிப்துடைய ஆட்சி எனக்கு சொந்தமானது இல்லையா? இந்த ஆறுகள் (என்னைச் சுற்றி) எனக்கு முன்னால் ஓடுகின்றன. நீங்கள் (இவற்றை) உற்று நோக்கவில்லையா?” என்று கூறினான்.
இந்த பலவீனமானவரை விட, தெளிவாக பேச முடியாதவரை விட நான் சிறந்தவன்தானே?
அவர் மீது தங்கத்தின் காப்புகள் போடப்பட (-அணிவிக்கப்பட) வேண்டாமா? அல்லது வானவர்கள் அவருடன் சேர்ந்தவர்களாக (உடன்) வர வேண்டாமா!
அவன் தனது மக்களை (மிகவும்) அற்பமாகக் கருதினான். ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.
அவர்கள் நமக்கு கோபமூட்டவே நாம் அவர்களிடம் பழிவாங்கினோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
அவர்களை (நிராகரிப்பாளர்களுக்கு) முன்னோடிகளாகவும் மற்றவர்களுக்கு படிப்பினையாகவும் நாம் ஆக்கினோம்.
மர்யமின் மகன் ஓர் உதாரணமாக விவரிக்கப்பட்டபோது, அப்போது உமது மக்கள் அதனால் கூச்சல் போடுகின்றனர். (கிறிஸ்தவர்கள் ஈஸாவை வணங்குவது போன்று முஹம்மதை நாம் வணங்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் போலும் என்று பேச ஆரம்பித்தனர்.)
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவர் (முஹம்மது) சிறந்தவரா? (எங்கள் கடவுள்களே சிறந்தவை. எனவே, நாங்கள் அவற்றையே வணங்குவோம்.) தர்க்கம் செய்வதற்காகவே தவிர அவரை (-ஈஸாவை) அவர்கள் உமக்கு உதாரணமாக பேசவில்லை. மாறாக, அவர்கள் தர்க்கம் செய்கின்ற மக்கள் ஆவர்.
(ஈஸா) அவர்மீது நாம் அருள் புரிந்த ஓர் அடியாராகவே தவிர அவர் (கடவுளாக) இல்லை. அவரை நாம் இஸ்ரவேலர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்.
நாம் நாடினால் இந்த பூமியில் (உங்களை அழித்துவிட்டு) உங்களுக்குப் பதிலாக வானவர்களை ஆக்கியிருப்போம். அவர்கள் (ஒரு தலைமுறைக்குப் பின் ஒரு தலைமுறையாக) வழித்தோன்றி வருவார்கள்.
நிச்சயமாக அவர் (-ஈசா) மறுமையின் அடையாளமாவார். ஆகவே, அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள். என்னை பின்பற்றுங்கள்! இதுதான் நேரான பாதையாகும்.
ஷைத்தான் (இந்த நேரான பாதையை விட்டு) உங்களை தடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரி ஆவான்.
தெளிவான அத்தாட்சிகளுடன் ஈஸா வந்த போது அவர் கூறினார்: “திட்டமாக நான் உங்களிடம் ஞானத்துடன் வந்துள்ளேன். இன்னும் நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ அதில் சிலவற்றை உங்களுக்கு விவரிப்பதற்காகவும் வந்துள்ளேன். ஆகவே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள்! இதுதான் நேரான பாதையாகும்.
கூட்டங்கள் தங்களுக்கு மத்தியில் (ஈசாவின் விஷயத்தில்) தர்க்கித்தனர். அநியாயக்காரர்களுக்கு வலி தரக்கூடிய நாளில் வேதனையின் நாசம் உண்டாகட்டும்.
அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் மறுமை அவர்களிடம் திடீரென்று வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
இறையச்சமுள்ளவர்களைத் தவிர (மற்ற) நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர் சிலருக்கு எதிரிகள் ஆவர்.
(இறையச்சமுள்ள) என் அடியார்களே! இன்று உங்களுக்கு பயமில்லை. நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
(அந்த அடியார்கள்) நமது வசனங்களை நம்பிக்கை கொண்டனர், இன்னும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள்.
நீங்களும் உங்கள் மனைவிகளும் சொர்க்கத்தில் நுழையுங்கள். (அதில்) நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
தங்கத்தினாலான தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். அதில் மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. நீங்கள் அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
இதுதான் நீங்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளினால் நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்ட அந்த சொர்க்கம்.
உங்களுக்கு அதில் அதிகமான (பல வகை) பழங்கள் உண்டு. அவற்றில் இருந்து நீங்கள் உண்பீர்கள்.
நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்தின் வேதனையில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அவர்களை விட்டும் வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அதில் நம்பிக்கை இழந்திருப்பார்கள்.
நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள்தான் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
“மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (மாலிக்கை) அழைப்பார்கள்: அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)”
திட்டவட்டமாக நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம். என்றாலும், உங்களில் அதிகமானவர்கள் அந்த சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்.
(இந்த சத்தியத்திற்கு எதிராக) ஒரு காரியத்தை அவர்கள் முடிவு செய்து விட்டார்களா? நிச்சயமாக நாங்கள்தான் (அவர்களை இழிவுபடுத்தும் காரியத்தை) முடிவு செய்வோம்.
நாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகின்றனரா? மாறாக, நமது தூதர்கள் அவர்களிடம் இருந்து (அவர்கள் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கின்றனர்.
(நபியே!) கூறுவீராக! “ரஹ்மானுக்கு (-அல்லாஹ்விற்கு) குழந்தை இருந்தால் (அதை) வணங்குபவர்களில் முதலாமவன் நான்தான்.”
வானங்கள் இன்னும் பூமியின் அதிபதி, அர்ஷுடைய அதிபதி அவர்கள் வர்ணிக்கின்ற வர்ணிப்புகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன்.
ஆகவே, (நபியே!) அவர்களை விடுங்கள்! அவர்கள் (தங்கள் பொய்யான வாதங்களில்) மூழ்கட்டும், (தங்கள் உலக வாழ்க்கையில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்படுகின்ற அவர்களது (தண்டனையின்) நாளை அவர்கள் சந்திப்பார்கள்.
அவன்தான் வானத்திலும் வணங்கப்படுபவன், பூமியிலும் வணங்கப்படுபவன். அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.
வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அவன் மிக்க பாக்கியமுடையவன். அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல் இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (நல்லவர்கள்) சிபாரிசு செய்வார்கள். (தங்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)
அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) எப்படி திருப்பப்படுகின்றார்கள்.
இன்னும், “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள் ஆவார்கள்” என்ற அவருடைய (-நபியுடைய) கூற்றின் அறிவும் அவனிடம்தான் இருக்கிறது. (தனது தூதர் கூறுவதை அவன் நன்கறிவான்.)
ஆகவே, (நபியே!) அவர்களை புறக்கணிப்பீராக! அவர்களுக்கு சலாம் கூறி விடுவீராக! அவர்கள் விரைவில் (அவர்களின் தண்டனையை) அறிவார்கள்.
Icon