ترجمة معاني سورة إبراهيم باللغة التاميلية من كتاب الترجمة التاميلية
عبد الحميد الباقوي
ﰡ
آية رقم 1
1. அலிஃப் லாம் றா. (நபியே! இது) வேத நூல். இதை நாமே உம்மீது இறக்கியிருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வருவீராக! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும்.
آية رقم 2
2. அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே! ஆகவே, (இதை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெரும்கேடுதான்.
آية رقم 3
3. இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாததுடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டுபண்ணுகின்றனர். இவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
آية رقم 4
4. (நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
آية رقم 5
5. நிச்சயமாக நாம் மூஸாவை நம் பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து “நீங்கள் உமது மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவீராக. அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக'' (என்று அவருக்குக் கட்டளையிட்டோம்.) (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
آية رقم 6
6. மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் ‘‘அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண் பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழ விட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது'' (என்று கூறினார்.)
آية رقم 7
7. உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
آية رقم 8
8. இன்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்'' என்றும் கூறினார்.
آية رقم 9
9. உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்க(ளின் விபரங்க)ளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு ‘‘வாருங்கள் வாருங்கள்'' என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.
آية رقم 10
10. அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு பணிந்து வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரை உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.
آية رقم 11
11. அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) ஓர் ஆதாரத்தை நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை'' (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நம்பிக்கையாளர்கள் (அனைவரும்) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும்,
آية رقم 12
12. ‘‘நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும் கூறினார்கள்.
آية رقم 13
13. நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்'' என்றும்
آية رقم 14
14. ‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.
آية رقم 15
ﮣﮤﮥﮦﮧ
ﮨ
15. ஆகவே, (நபிமார்கள்) அனைவரும் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள். பிடிவாதக்கார வம்பர்கள் அனைவருமே ஏமாற்றமடைந்(து அழிந்)தனர்.
آية رقم 16
16. அவர்களுக்கு பின்னால் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும்.
آية رقم 17
17. அதை அவர்கள் (மிக சிரமத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக் கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையும் (அவர்களுக்கு) உண்டு.
آية رقم 18
18. எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிக்கின்ற இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப்போல் இருக்கிறது! புயல் காலத்தில் அடித்த கனமான காற்று அதை அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்கள் தேடிக்கொண்டதில் ஒன்றையும் அவர்கள் அடைய மாட்டார்கள். இது வெகு தூரமான வழிகேடாகும்.
آية رقم 19
19. நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? அவன் விரும்பினால் உங்களைப் போக்கிவிட்டு (உங்களைப் போன்ற) புதியதோர் படைப்பைக் கொண்டுவந்து விடுவான்.
آية رقم 20
ﭡﭢﭣﭤﭥ
ﭦ
20. அல்லாஹ்வுக்கு இது ஒரு சிரமமான காரியம் அல்ல.
آية رقم 21
21. (மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்.
آية رقم 22
22. (இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான்.
آية رقم 23
23. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தங்கள் இறைவனின் கட்டளைப்படி அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களில் (ஒருவர் மற்றொருவரை நோக்கி ‘‘உங்களுக்கு தொடர்ந்து) ஈடேற்றம் (ஸலாம்) உண்டாவதாகுக!'' என்று முகமன் கூறுவார்கள்.
آية رقم 24
24. (நபியே! ‘தவ்ஹீத் கலிமா' என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எப்படி (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது.
آية رقم 25
25. அது (பருவ காலத்தில் மட்டுமன்றி) இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு அல்லாஹ் (பல) உதாரணங்களை விவரிக்கிறான்.
آية رقم 26
26. (நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: வேர் அறுபட்டு பூமிக்கு மேல் (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப் போன ஒரு) கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது.
آية رقم 27
27. மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (‘கலிமா தையிப்' என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டுவிடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது.)
آية رقم 28
28. (நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பைக் கொண்டு மாற்றி, தங்கள் மக்களையும் அழிவுக்கிடங்கில் இறக்கிவிட்டவர்களை நீர் பார்க்கவில்லையா?
آية رقم 29
ﮐﮑﮒﮓﮔ
ﮕ
29. அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
آية رقم 30
30. அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு (பல பொய் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான்.
آية رقم 31
31. (நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னதாகவே இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யட்டும்.
آية رقم 32
32. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்துகிறான். (நீங்கள் பயணம் செய்யும் பொருட்டுத்) தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும், (கால்வாய்களையும்) உங்கள் விருப்பப்படி பாய வசதியளித்தான்.
آية رقم 33
33. (தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் (படைத்து) உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் (அவற்றை)அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.
آية رقم 34
34. இன்னும், நீங்கள் கேட்டவற்றை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவன், மிக மிக நன்றிகெட்டவன் ஆவான்.
آية رقم 35
35. இப்றாஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர்கள் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கிவைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக!
آية رقم 36
36. என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழிகெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறுசெய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவாய்.
آية رقم 37
37. எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாய மற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்). மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனிவர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.
آية رقم 38
38. எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ உள்ளவற்றில் எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.
آية رقم 39
39. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவன் ஆவான்.
آية رقم 40
40. என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக!
آية رقم 41
41. எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்கு நிறைவேறுகின்ற (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)
آية رقم 42
42. (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடிய தொரு மறுமை) நாள் வரும் வரைதான்!
آية رقم 43
43. (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்.
آية رقم 44
44. ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘இதற்கு முன்னர் நீங்கள் உங்களுக்கு (இவ்வுலகில்) அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?'' (என்று கேட்பான்.)
آية رقم 45
45. ‘‘தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்கவில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூறவில்லையா'' (என்றும் பதில் கூறுவான்.)
آية رقم 46
46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவையாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை!)
آية رقم 47
47. அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மாறி விடுவான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (அவர்கள் அனைவரையும்) மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்.
آية رقم 48
48. (நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப்பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் முன்னால் கூடிவிடுவார்கள்.
آية رقم 49
ﮭﮮﮯﮰﮱﯓ
ﯔ
49. குற்றவாளிகள் அனைவரும், அந்நாளில் விலங்கிடப்பட்டிருப்பதையும் நீர் காண்பீர்.
آية رقم 50
ﯕﯖﯗﯘﯙﯚ
ﯛ
50. அவர்களுடைய சட்டைகள் தாரால் செய்யப்பட்டிருக்கும். அவர்களுடைய முகத்தை நெருப்பு சூழ்ந்து கொண்டிருக்கும்.
آية رقم 51
51. ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.
آية رقم 52
52. மனிதர்கள் இதைக்கொண்டு எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்கும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின் கட்டளைகள் உள்ளடங்கிய) ஓர் அறிக்கையாகும்.
تقدم القراءة