ﰡ
                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை நீங்கள் அவசரமாக தேடாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் முற்றிலும் உயர்ந்தவன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவன் தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான். “நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர அறவே இல்லை; ஆகவே (என்னை) அஞ்சுங்கள்”என்று நீங்கள் (மனிதர்களை) எச்சரியுங்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்தான்; அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் முற்றிலும் உயர்ந்தவன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்தான். அவனோ பகிரங்கமான வாதியாக (எதிரியாக) இருக்கிறான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    கால்நடைகள், அவற்றை உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் உங்களுக்கு (குளிருக்கும் வெப்பத்திற்கும் இதமான) ஆடையும் இன்னும் (பல) பலன்களும் உள்ளன. அவற்றிலிருந்து (சிலவற்றைப்) புசிக்கிறீர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நீங்கள் அவற்றை மாலையில் (இருப்பிடங்களுக்கு) ஓட்டி வரும் நேரத்திலும் (காலையில்) மேய்க்க ஓட்டிச் செல்லும் நேரத்திலும் அவற்றில் உங்களுக்கு அழகு(ம் மகிழ்ச்சியும்) இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மிகுந்த சிரமத்துடனே தவிர நீங்கள் சென்று அடைய முடியாத ஊருக்கு அவை (உங்களையும்) உங்கள் சுமைகளையும் சுமக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    குதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகனிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அவற்றை அல்லாஹ் படைத்தான்). இன்னும் நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன்) படைப்பான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். வழிகளில் (சில) கோணலானதும் உள்ளது. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவன்தான் மேகத்திலிருந்து மழை நீரை இறக்குபவன். அதில் உங்களுக்கு குடிநீர் இருக்கிறது; அதிலிருந்து மரங்கள் (செடி கொடிகள், புற்பூண்டுகள்) முளைக்கின்றன. அவற்றில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அதைக் கொண்டு பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை மரம், திராட்சைகள் இன்னும் எல்லா கனிவர்க்கங்களி(ன் மரங்களி)லிருந்தும் அவன் உங்களுக்கு முளைக்க வைக்கிறான். நிச்சயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு இவற்றில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தினான். நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளையைக் கொண்டு (உங்களுக்கு) வசப்படுத்தப்பட்டவையாகும். நிச்சயமாக சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இவற்றில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் எதை பூமியில் உங்களுக்காக மாறுபட்ட நிறங்களையுடையதாகப் படைத்தானோ (அதையும் உங்களுக்கு வசப்படுத்தினான்). நல்லுபதேசம் பெறுகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    கடலிலிருந்து பசுமையான (மென்மையான) மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காகவும், நீங்கள் அணிகிற ஆபரணங்களை அதிலிருந்து நீங்கள் வெளியெடுப்பதற்காகவும், அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும், (இவற்றை எல்லாம் பெற்றதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் வசப்படுத்தியவன் அவன்தான். இன்னும் அதில் (கடலை) பிளந்து செல்பவையாக கப்பல்களைப் பார்க்கிறீர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பூமி உங்களைக் கொண்டு அசையாதிருப்பதற்காக அதில் அவன் மலைகளை அமைத்தான். இன்னும் நதிகளையும் நீங்கள் (உங்கள் இலக்குகளுக்கு) வழி பெ(ற்)று (செல்)வதற்காக பாதைகளையும் (அமைத்தான்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் பல அடையாளங்களை (இலக்குகளை அறிவிக்க அமைத்தான்). (இரவில் பயணம் செய்யும்) அவர்கள் நட்சத்திரங்களைக் கொண்டு (தங்கள் இலக்குகளுக்கு) வழி பெறுகின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    படைப்பவன் படைக்காதவன் போல் ஆவானா? (இருவரும் சமமானவர்களா?) நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ படைக்கப்படுகிறார்கள்;
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அழைக்கப்படும் அவர்கள்) இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர்; (தாம்) எப்போது (மறுமையில்) எழுப்பப்படுவோம் என்பதை அறியமாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவன் தான். ஆகவே, மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய உள்ளங்கள் (அந்த உண்மையான இறைவனை) நிராகரிக்கின்றன. இன்னும் அவர்கள் பெருமையடிக்கிறார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் அறிவான் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக அவன் பெருமையடிப்பவர்களை நேசிக்கமாட்டான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்”என்று அவர்களிடம் கூறப்பட்டால் “(அவை,) முன்னோரின் கட்டுக்கதைகள்”என்று கூறுகின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இதன் காரணமாக, மறுமை நாளில் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமை யாக (இவர்கள்) சுமப்பார்கள். இன்னும் இவர்கள் எவர்களை கல்வியின்றி வழிகெடுத்தார்களே அவர்களின் (பாவச்)சுமைகளிலிருந்தும் (இவர்கள்) சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள் இவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டமாக இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களின் கட்டடத்திற்கு அடித்தளங்களில் இருந்து வந்தான். (அதை அழித்தான்.) அவர்களுக்கு மேலிருந்து (அவர்கள் எழுப்பிய மாளிகையின்) முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறி(ந்து கொள்ள முடி)யாத விதத்தில் வேதனையும் அவர்களுக்கு வந்தது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பிறகு, மறுமை நாளில் அவர்களை இழிவு படுத்துவான்; “(எனக்கு இணையானவை என நீங்கள் கற்பனை செய்து, பிறகு) அவர்கள் விஷயத்தில் (எது பெரியது? என்று) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த என் இணைகள் எங்கே?” என்று கூறுவான். கல்வி கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக இன்று இழிவும், தண்டனையும் நிராகரிப்பவர்கள் மீதுதான் (நிகழும்).”
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அவர்கள்) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்க வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகின்றனர். (அவர்கள்) “ஒரு தீமையையும் நாங்கள் செய்து கொண்டிருக்கவில்லை”(என்று கூறி) பணிந்து விடுவார்கள். “அவ்வாறல்ல! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்”(என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    “நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமானவர்களாக (தங்கி விடுங்கள்).” பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் கெட்டுவிட்டது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு, “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்”என்று கூறப்பட்டது, “நன்மையை (இறக்கினான்)” என்று கூறினார்கள். நல்லறம் புரிந்தவர்களுக்கு இந்த உலகில் நன்மை உண்டு. (அவர்களுக்குரிய) மறுமையின் வீடுதான் (இம்மையை விட அவர்களுக்கு) மிக மேலானது. (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களின் (மறுமை) வீடு மிகச் சிறந்தது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அந்த வீடு) அத்ன் (என்னும்) சொர்க்கங்கள், அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுக்கு கூலி கொடுக்கிறான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அல்லாஹ்வை அஞ்சியவர்கள்) நல்லவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகின்றனர். “ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்”என்று (வானவர்கள்) கூறுவார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    வானவர்கள் தங்களிடம் வருவதை அல்லது உம் இறைவனின் கட்டளை வருவதைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்தனர். அல்லாஹ் அவர்களுக்கு தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, அவர்கள் செய்தவற்றின் தீமைகள் அவர்களை அடைந்தன. அவர்கள் எதை பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்த(ழித்த)து.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இணைவைத்தவர்கள் கூறினர்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; அவன் (கட்டளை) இன்றி எதையும் தடுத்திருக்க மாட்டோம்.” இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்) செய்தார்கள். தூதர்கள் மீது தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் பொறுப்பு) உண்டா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    “அல்லாஹ்வை வணங்குங்கள்; ஷைத்தானை விட்டு விலகுங்கள் என்று (போதிப்பதற்காக) எல்லா சமுதாயங்களிலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களும் அவர்களில் உண்டு; வழிகேடு உறுதியாகி விட்டவரும் அவர்களில் உண்டு. ஆகவே, பூமியில் சுற்றுங்கள்; (நபிகளைப்) பொய்ப்பிப்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) அவர்கள் நேர்வழி காட்டப்படுவதின் மீது நீர் பேராசைப்பட்டாலும் (பிறரை) வழிகெடுப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு இல்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இறக்கின்றவர்களை அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான் என்று அல்லாஹ் மீது இவர்கள் மிக உறுதியாக சத்தியம் செய்தனர். அவ்வாறன்று; (“இறந்தவர்களை எழுப்புதல்”) அவன் மீது கடமையான (சத்திய) வாக்காகும்! எனினும், மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் எதில் முரண்படுகிறார்களோ அதை (அல்லாஹ்) அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், நிராகரித்தவர்கள் நிச்சயமாக தாம் பொய்யர்களாக இருந்தோம் என்பதை அறிவதற்காகவும் (மறுமையில் அவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், அதற்கு நாம் (கூறுகிற) கூற்றெல்லாம் “ஆகு!” என்று கூறுவதுதான். (அது) ஆகிவிடும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எவர்கள் தாம் அநீதியிழைக்கப்பட்ட பின்பு அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊரை, நாட்டை) துறந்தார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)தை அமை(த்து தந்து அதில் வசிக்க வை)ப்போம். (அவர்களுக்குரிய) மறுமையின் கூலிதான் (இதைவிட) மிகப் பெரிது. (இதை மற்றவர்கள்) அறிந்திருக்க வேண்டுமே!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (இவர்கள் துன்பங்களை) பொறுத்தவர்கள்; தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வைப்பவர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) உமக்கு முன்பு நாம் (தூதர்களாக மனித) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (இவர்களை நோக்கி) “நீங்கள் (இதை) அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள்”(என்று கூறுவீராக!).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம்.ஏனெனில், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை (நீர்)அவர்களுக்கு தெளிவுபடுத்துவீர், இன்னும் (அந்த ஞானத்தையும் நபியின் கூற்றையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும்! (அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டும்!)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    தீமைகளை (புரிய) சூழ்ச்சி செய்தவர்கள் தங்களை அல்லாஹ் பூமியில் சொருகிக் கொள்வான் என்பதை அல்லது தாம் உணராத விதத்தில் தங்களுக்கு வேதனை வரும் என்பதை அச்சமற்று விட்டனரா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லது தமது பயணத்தில் தம்மை அவன் (சோதனையால்) பிடி(த்து அழி)த்து விடுவதை (அச்சமற்றுவிட்டனரா?). அவர்கள் (அவனை) பலவீனப்படுத்துபவர்கள் இல்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லது (அவர்களது பூமியையும் செல்வத்தையும்) கொஞ்சம் (கொஞ்சமாக) குறைத்து அவர்களை அவன் பிடி(த்து அழி)த்து விடுவதை (அச்சமற்றனரா?). (மக்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமானவன், பெரும் கருணையாளன். (அதனால்தான் நீங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளீர்கள்.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ் படைத்த ஒரு பொருளையேனும் இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தவையாக வலப்புறமாக இன்னும் இடப்புறமாக சாய்கின்றன. அவை (அவனுக்கு) மிகப் பணிந்தவையாகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்விற்கு சிரம் பணிகிறார்கள். அ(ந்த வான)வர்கள் பெருமையடிப்பதில்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனைப் பயப்படுகின்றனர்; தாங்கள் ஏவப்படுவதை செய்கின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களே! வணங்குவதற்கு) இரண்டு கடவுள்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (நீங்கள் எவனை வணங்கவேண்டுமோ) அவனெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, என்னை பயப்படுங்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன! கீழ்ப்படிதல் (கட்டாயமாக, நிலையானதாக,) என்றென்றும் அவனுக்கே உரியது. ஆகவே, (அந்த) அல்லாஹ் அல்லாததையா (கடவுளாக ஆக்கிக்கொண்டு அதை) அஞ்சுகிறீர்கள்?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    உங்களிடம் அருட்கொடையில் எது உள்ளதோ அது அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு கிடைத்தது). பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்தித்து அதை நீக்கக் கோரி) கதறுகிறீர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பிறகு, அவன் உங்களை விட்டு (அத்)துன்பத்தை நீக்கினால், அப்போது உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் (துன்பத்தை நீக்கிய அந்த) இறைவனுக்கு இணைவைக்கின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை நிராகரிப்பதற்காக(வே இவ்வாறு இணைவைக்கின்றனர்). ஆகவே “(இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். (மறுமையில்) நீங்கள் (உங்கள் தீய முடிவை) அறிவீர்கள்”
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தைத் தாம் அறியாத (கற்சிலைகள், பிசாசுகள் போன்ற)வற்றுக்கு ஆக்குகின்றனர் (-அதை வைத்து பூஜை செய்கின்றனர்). அல்லாஹ் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும் தங்களுக்கு தாங்கள் விரும்புவதையும் ஆக்குகின்றனர். அவனோ (சந்ததிகளின் தேவையை விட்டு) மிக பரிசுத்தமானவன்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் கறுத்ததாக ஆகிவிடுகிறது. இன்னும் (அதனால்) அவன் துக்கப்படுகிறான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    தனக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் தீமையினால் “கேவலத்துடன் அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைப்பதா?” என்று (பிற) மக்களை விட்டு மறைந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்: அவர்களின் (இந்த) தீர்ப்பு கெட்டு விட்டது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே கெட்ட தன்மை உள்ளது. அல்லாஹ்விற்கே மிக உயர்ந்த தன்மை உண்டு. அவன் மகா மிகைத்தவன், மகா ஞானவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே விட்டிருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    தாங்கள் வெறுப்பவற்றை அல்லாஹ்விற்கு ஆக்குகின்றனர். நிச்சயமாக தங்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. கண்டிப்பாக நிச்சயம் இவர்களுக்கு நரகம்தான்; நிச்சயம் இவர்கள் (நரகத்தில் கேட்பார் இன்றி விட்டு) விடப்படுபவர்கள் ஆவர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) அல்லாஹ் மீது சத்தியமாக! உமக்கு முன்னர் (பல) சமுதாயங்களுக்கு (நம்) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பினோம். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களை அழகாக்கினான். ஆகவே இன்று(ம்) அவர்களுக்கு அவனே நண்பன் ஆவான். அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) இவர்கள் எதில் தர்க்கித்தார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காகவும் (மக்கள் எல்லோருக்கும்) ஒரு நேர்வழியாக இருப்பதற்கும் (குறிப்பாக, அதை) நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு ஓர் அருளாக இருப்பதற்கே தவிர (வேறு எதற்கும்) உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ் மேகத்திலிருந்து மழையை இறக்குகிறான்; அதன் மூலம் பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிக்கின்றான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் (அக்கால்நடைகளின்) வயிறுகளிலிருந்து கலப்பற்ற, அருந்துபவர்களுக்கு மதுரமான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பேரீச்சை மரத்தின் கனிகள் இன்னும் திராட்சைகளில் இருந்து போதையூட்டக்கூடிய (மது போன்ற)தையும், நல்ல உணவுகளையும் செய்கிறீர்கள். நிச்சயமாக இதில் சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் கட்டுகிற (பெட்டிகள்போன்ற) வற்றிலும் வீடுகளை (கூடுகளை) அமைத்துக்கொள் என்று உம் இறைவன் தேனீக்கு செய்தியளித்தான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பிறகு “ஒவ்வொரு பூக்களிலிருந்தும் புசி, உனது இறைவன் (உனக்கு அறிவித்த) சுலபமான வழிகளில் (உன் கூட்டை நோக்கிச்) செல்”(எனக் கட்டளையிட்டான்). இதனால் அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியேறுகிறது. அதில் மக்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு உங்களை உயிர்கைப்பற்றுகிறான். (பலவற்றை) அறிந்திருந்த பின்பு ஒன்றையும் அறியாமல் ஆவதற்காக அற்பமான (முதுமை) வயது வரை திருப்பப்படுபவரும் உங்களில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    உங்களில் சிலரை சிலரைவிட வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான் மேன்மையாக்கினான். இவ்வாறிருந்தும், மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் மீது திருப்பக் கூடியவர்களாக (-மேல்மிச்சமான செல்வத்தை தங்கள் அடிமைகளுக்கு தரக்கூடியவர்களாக) இல்லை. அவர்களும் அதில் (இவர்களுக்கு) சமமானவர்களே. அல்லாஹ்வின் அருளையா (அவர்கள்) நிராகரிக்கின்றனர்?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை உங்களுக்காக அல்லாஹ் படைத்தான். உங்கள் மனைவிகளிலிருந்து ஆண் பிள்ளைகளையும், பேரன்களையும் உங்களுக்கு படைத்தான். நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். (இவ்வாறிருக்க) அவர்கள் (சிலைகள் அல்லது இறந்தவர்கள் பிள்ளைகள் தருவார்கள் என்று) பொய்யை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கின்றனரா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்வை அன்றி இவர்களுக்கு வானங்கள் இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும் உணவளிக்க உரிமை பெறாத, இன்னும் (அதற்கு அறவே) ஆற்றல் பெறாத (சிலைகள், இறந்தவர்கள், ஏனைய படைப்புகள் போன்ற)வர்களைத்தான் இவர்கள் வணங்குகின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களை(யும் தன்மைகளையும்) விவரிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (தன் தன்மையை) அறிவான்; (அவனுக்குரிய தன்மையை அவன் அறிவித்தால் தவிர) நீங்கள் அறிய மாட்டீர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத ஓர் அடிமை. இன்னும் ஒருவர் அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். (இவ்விருவரும்) சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அல்லாஹ்விற்கே. எனினும் அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான்: இரு ஆடவர்கள் அவ்விருவரில் ஒருவர் ஊமை. எதையும் செய்ய சக்தி பெறமாட்டார்; அவர் தன் எஜமானர் மீது சுமையாக இருக்கிறார். அவரை அவர் எங்கு (வேலைக்கு) அனுப்பினாலும் ஒரு நன்மையும் அவர் செய்யமாட்டார். இவரும், நேரான வழியில் தானும் இருந்துகொண்டு (மற்றவர்களையும்) நீதத்தைக் கொண்டு ஏவுகின்றவரும் சமமாவார்களா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவை அல்லாஹ்வுக்கே சொந்தம். ஆகவே (மறுமை நிகழும்) நேரத்தின் நிலை, பார்வை சிமிட்டுவதைப் போல் அல்லது (அதைவிட) மிக நெருக்கமானதாகவே தவிர இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருக்கின்ற நிலையில் உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். உங்களுக்குச் செவிகளையும், பார்வைகளையும், உள்ளங்களையும் படைத்தான் நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    வான ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டவையாக (மிதக்கும்) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை அல்லாஹ்வைத் தவிர எவரும் தடு(த்து நிறுத்தி இரு)க்கவில்லை. நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ் உங்கள் வீடுகளில் உங்களுக்கு (வசதியான) தங்குதலை அமைத்தான்; கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்கு கூடாரங்களை அமைத்தான். அவற்றை நீங்கள் பயண நாளிலும், நீங்கள் தங்குகின்ற நாளிலும் எளிதாக்கிக் கொள்கிறீர்கள். அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளிகள், (ஒட்டகத்தின்) உரோமங்கள் (வெள்ளாட்டின்) முடிகள் ஆகியவற்றிலிருந்து (ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் (அவற்றின் வியாபாரத்தினால் அதிகமான செல்வத்தையும், மரணம் சமீபிக்கும்) ஒரு காலம் வரை ஒரு சுகமான பயன்பாட்டையும் உங்களுக்கு ஆக்கினான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ், தான் படைத்திருப்பவற்றில் உங்களுக்கு நிழல்களை அமைத்தான். மலைகளில் உங்களுக்கு குகைகளை அமைத்தான். வெப்பத்தை (விட்டும் குளிரை) விட்டும் உங்களை காக்கக்கூடிய சட்டைகளையும், உங்கள் (எதிரிகளின்) பலமான தாக்குதலை விட்டும் உங்களை காக்கக் கூடிய (உருக்கு) சட்டைகளையும் அமைத்தான். இவ்வாறுதான் அவன் தன் அருளை உங்கள் மீது முழுமையாக்குகிறான் நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பதற்காக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகினால் (கவலைப்படாதீர்.) உம் மீது கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்வின் அருட்கொடையை அறிகிறார்கள். பிறகு அதை நிராகரிக்கின்றனர். அவர்களில் அதிகமானவர்கள் நன்றி கெட்டவர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (நாம்) ஒரு சாட்சியாளரை எழுப்புவோம். பிறகு, (தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசவும்) அனுமதிக்கப்படாது. அவர்கள் (அதற்கு) காரண(மு)ம் கேட்கப்பட மாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    தீங்கிழைத்தவர்கள் (மறுமையில்) வேதனையைக் கண்டால் (அதைக் குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), அவர்களை விட்டு (வேதனை) இலகுவாக்கப்படாது. இன்னும் அவர்கள் (வேதனையை பிற்படுத்தி) அவகாசமும் அளிக்கப் படமாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இணைவைத்தவர்கள் தங்கள் இணை தெய்வங்களை (மறுமையில்) கண்(டு கொண்)டால் (அல்லாஹ்வை நோக்கி) “எங்கள் இறைவா! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்”என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி “நிச்சயமாக நீங்கள் பொய்யர்கள்தான், (நாங்கள் தெய்வங்களல்ல)” என்று கூறிவிடுவர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அந்நாளில் அவர்கள் அல்லாஹ்விற்கு பணிந்து விடுவார்கள். இவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை இவர்களை விட்டு மறைந்து விடும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    தாமும் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (பிறரையும்) தடுத்தவர்கள் -அவர்களுக்கு, அவர்கள் விஷமம் செய்து கொண்டு இருந்த காரணத்தால் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்துவோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்பி, (நிராகரித்த) இவர்களுக்கு எதிரான சாட்சியாளராக உம்மைக் கொண்டு வரும் நாளில் (அந்த வேதனையை அடைவார்கள்). (நபியே!) எல்லாவற்றையும் மிக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டு அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் ஞானம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட அந்த) ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள். சத்தியங்களை அவற்றை உறுதிபடுத்திய பின்பு முறிக்காதீர்கள். அல்லாஹ்வை உங்கள் மீது பொறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை அறிவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    தான் நெய்த நூலை (அது) உறுதி பெற்ற பின்பு (பல) உதிரிகளாக பிரித்த வளைப் போன்று ஆகிவிடாதீர்கள். ஒரு சமுதாயத்தை விட (வேறு) ஒரு சமுதாயம் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்காக (பலவீனர்களுடன் நீங்கள் செய்த) உங்கள் சத்தியங்களை ஏமாற்றமாக, வஞ்சகமாக ஆக்கிக் கொள்கிறீர்களா?. நிச்சயமாக அல்லாஹ் உங்களை இதன் மூலம் சோதிக்கிறான். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றை மறுமை நாளில் (அவன்) உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ் நாடியிருந்தால் (இஸ்லாமைப் பின்பற்றுகிற) ஒரே ஒரு சமுதாய மாக உங்களை ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கின்றான். தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகின்றான். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி நிச்சயமாக (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    உங்கள் சத்தியங்களை உங்களுக்கு மத்தியில் ஏமாற்றமாக, (வஞ்சகமாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) பாதம் அது நிலைபெற்ற பின் சருகிவிடும். (சத்தியத்தை முறித்து) அல்லாஹ்வின் பாதையை விட்டு நீங்கள் தடுத்த காரணத்தால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். இன்னும் உங்களுக்கு மகத்தானதொரு வேதனை உண்டு.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட) ஒப்பந்தத்திற்கு பகரமாக ஒரு சொற்ப விலையை வாங்காதீர்கள். நீங்கள் (நன்மையை) அறிபவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    உங்களிடம் உள்ளவை தீர்ந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவை நிரந்தரமானவை. பொறுத்தவர்களுக்கு அவர்களின் கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விட மிக அழகிய முறையில் நிச்சயம் கொடுப்போம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆண் அல்லது பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக நல்லதை செய்வாரோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை விட மிக அழகிய முறையில் அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் (அதற்கு முன்பு) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவன் மீது (தவக்குல்)நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மீது அவனுக்கு (-ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் நட்பு வைப்பவர்கள் மீதும் அவனுக்கு (-அல்லாஹ்விற்கு) இணைவைப்பவர்கள் மீதும் தான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) நாம் ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை மாற்றினால் - அல்லாஹ் தான் இறக்குவதை மிக அறிந்தவனாக இருக்கிறான் - இவர்கள் (உம்மை நோக்கி) “நிச்சயமாக நீர் (தானாக இதை) இட்டுக்கட்டுபவர்தான்”என்று கூறுகின்றனர். மாறாக இவர்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மையை) அறிய மாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    “நம்பிக்கை கொண்டவர்களை உறுதிப்படுத்துவதற்காகவும், நேர்வழியாகவும் முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்’(என்றழைக்கப்படும் ஜிப்ரயீல்) உண்மையைக் கொண்டு இறக்கினார்”என்று (நபியே!) கூறுவீராக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    “அவருக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் (ரோமானிய) மனிதர்தான் (அல்லாஹ் அல்ல)” என்று அவர்கள் கூறுவதை திட்டவட்டமாக அறிவோம். எவர் பக்கம் (இதை) சேர்க்கிறார்களோ அவருடைய மொழி அரபியல்லாததாகும். இதுவோ (நாகரிகமான) தெளிவான அரபி மொழியாகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டார்களோ அவர்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பொய்யை இட்டுக்கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். இவர்கள்தான் பொய்யர்கள். (நபி பொய்யர் அல்ல.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின்னர், அவனை நிராகரிப்பாரோ, ஆனால் தான் நிர்பந்திக்கப்பட்டு தனது உள்ளமோ நம்பிக்கையில் திருப்தியடைந்ததாக இருப்பவரைத் தவிர. (அவர் மன்னிக்கப்பட்டவர்), எனினும், எவராவது நெஞ்சத்தால் நிராகரிப்பை விரும்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய கோபம் நிகழும். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அது, நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட உலக வாழ்வை விரும்பினார்கள். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கின்ற மக்களை நேர்வழி செலுத்த மாட்டான் என்ற காரணத்தினாலாகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அ(த்தகைய)வர்களின் உள்ளங்களின் மீதும், செவிகள் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள்தான் (தங்கள் தீயமுடிவை) உணராதவர்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள்தான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பிறகு, தாங்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு நாடு துறந்து, பிறகு போர் புரிந்து, (சோதனைகளை) சகித்தவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன், இவற்றுக்குப் பின் (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஒவ்வொரு ஆன்மாவும் தன்னைப் பற்றி தர்க்கித்ததாகவே அது வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). (அந்நாளில்) ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்தவற்றுக்கு முழு கூலி கொடுக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஓர் ஊரை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான். (அவ்வூர்) நிம்மதி பெற்றதாக, அச்சமற்றதாக இருந்தது. எல்லா இடங்களிலிருந்தும் தாராளமாக அதன் (உணவு) வாழ்வாதாரம் அதற்கு வந்தது. ஆக, அல்லாஹ்வு(க்கு மாறுசெய்து அவனு)டைய அருட்கொடைகளை நிராகரித்தது. ஆகவே, அ(வ்வூரில் உள்ள)வர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அல்லாஹ் பசி இன்னும் பயத்தின் ஆடையை அதற்கு சுவைக்கச் செய்தான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்களிலிருந்தே ஒரு தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் வந்தார். அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வேதனைப் பிடித்தது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமான நல்லதை புசியுங்கள், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவன் உங்கள் மீது தடுத்ததெல்லாம்; செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவை ஆகியவையாகும். எவர் (விருப்பத்துடன் அதை) நாடியவராக அல்லாமல், (சட்டத்தை) மீறியவராக அல்லாமல் (பசிக் கொடுமையால் மேற் கூறப்பட்ட தடுக்கப்பட்டவற்றில் எதையும் உண்ணவேண்டிய) நிர்பந்தத்திற்குள்ளானாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவரை மன்னித்து கருணை புரியும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நீங்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதற்காக உங்கள் நாவுகள் வருணிக்கும் பொய்யைக் குறித்து இது (ஹலால்) ஆகுமானது; இது (ஹராம்) ஆகாதது என்று கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (உலகில் அவர்கள் அனுபவிப்பதோ) ஒரு சொற்ப சுகமாகும். (ஆனால் மறுமையில்) அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) இதற்கு முன்னர் (ம் அத்தியாயம் ம் வசனத்தில்) நாம் உம்மீது விவரித்தவற்றை யூதர்களாக இருப்பவர்கள் மீது (ஹராம் என்று) தடுத்தோம். நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கு (தாங்களே) தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பிறகு, நிச்சயமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையின் காரணமாக கெட்டதைச் செய்து, அதற்கு பின்னர் அதிலிருந்து விலகி திருந்தி மன்னிப்புக்கேட்டு, (தங்களை) சீர்படுத்தினார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப் பின்பு (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக இப்றாஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்வுக்கு மிக பணிந்தவராக கொள்கை உறுதியுடையவராக இருந்தார். இணைவைப்பவர்களில் (ஒருவராக) அவர் இருக்கவில்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக (இருந்தார்). (அல்லாஹ்) அவரைத் தேர்ந்தெடுத்தான், நேரான பாதையில் அவரை நேர்வழி செலுத்தினான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இவ்வுலகில் அவருக்கு உயர்வைக் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் உள்ளவர் ஆவார்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பிறகு, (நபியே!) நீர் கொள்கை உறுதியுடையவராக இருக்கின்ற நிலையில் இப்றாஹீமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக! என்று உமக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை. (ஹனீஃப்: உண்மை முஸ்லிம், கொள்கை உறுதியுடையவர், அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடியவர், அறவே இணை வைக்காதவர்.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    சனிக்கிழமையை(க் கண்ணியப்படுத்துவது கடமையாக) ஆக்கப்பட்டதெல்லாம், அதில் முரண்பட்டவர்கள் மீதுதான். நிச்சயமாக உம் இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) ஞானம் இன்னும் அழகிய உபதேசத்தைக் கொண்டு உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன்தான் அவனுடைய பாதையிலிருந்து வழி தவறியவரை மிக அறிந்தவன் ஆவான். இன்னும் அவன் நேர்வழி செல்வோரையும் மிக அறிந்தவன் ஆவான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தண்டித்தால் நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறுத்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) பொறுப்பீராக. அல்லாஹ்வைக் கொண்டே தவிர உம் பொறுமை இல்லை. அவர்கள் மீது கவலைப்படாதீர்; அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி நெருக்கடியில் (நீர்) ஆகாதீர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான்.பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...