ترجمة سورة الحجر

الترجمة التاميلية
ترجمة معاني سورة الحجر باللغة التاميلية من كتاب الترجمة التاميلية .
من تأليف: عبد الحميد الباقوي .

1. அலிஃப் லாம் றா. (நபியே!) இவை (முந்திய) வேதங்களுடைய இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனுடைய (சில) வசனங்களாகும்.
2. தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர்.
3. (நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீர் அவர்களை விட்டுவிடுவீராக. அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
4. (பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலேயே தவிர நாம் அவர்களை அழித்து விடவில்லை.
5. ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
6. (நம் நபியாகிய உம்மை நோக்கி) ‘‘வேதம் அருளப்பட்டதாகக் கூறுகின்ற நீர் நிச்சயமாகப் பைத்தியக்காரர்தான்'' என்று கூறுகின்றனர்.
7. ‘‘மெய்யாகவே நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (உமக்குச் சாட்சியாக) நீர் வானவர்களை அழைத்துக் கொண்டுவர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.)
8. (நபியே!) நாம் வானவர்களை இறக்கிவைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழித்து முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.)
9. நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம்.
10. (நபியே!) உமக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பிவைத்தோம்.
11. (எனினும்,) அவர்களிடம் (நமது) தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்கவில்லை.
12. (அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்திவிட்டோம்.
13. (ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். முன் சென்றவர்களுடைய நடைமுறை சென்றிருக்கிறது. (அவர்கள் அழிந்தது போல இவர்களும் அழிந்து விடுவர்.)
14. வானத்தில் ஒரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்துவிட்டு, அதில் பகல் நேரத்திலே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ளாமல்),
15. ‘‘எங்கள் கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியம் செய்யப்பட்டு விட்டோம்'' என்றே கூறுவார்கள். (உண்மையை நம்பமாட்டார்கள்.)
16. நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம்.
17. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக்கொண்டோம்.
18. ஆகவே, (வானவர்களின்) ஒரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதைத் தவிர, (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜூவாலை அதை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்.
19. நாம் பூமியை விரித்து, அதில் உறுதிமிக்க அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்.
20. உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கின்ற எண்ணற்ற) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை நாமே அதில் அமைத்தோம்.
21. ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம்.
22. மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பிவைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழை நீரை மேகத்திலும், நிலத்திலும்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.)
23. நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்).
24. உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்.
25. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) ஒன்று கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
26. (காய்ந்தபின் ‘கன் கன்' என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம்.
27. அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.
28. (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப்போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்,
29. ‘‘நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்'' (என்று கூறி, பிறகு, சிரம்பணிய கட்டளையிட்டான்.)
30. அவ்வாறே வானவர்கள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்;
31. இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்.
32. (அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?'' என்று கேட்டான்.
33. அதற்கவன் ‘‘(காய்ந்தபின்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிய தயாரில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)'' என்று கூறினான்.
34. அதற்கு இறைவன் ‘‘நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (நமது சமூகத்திலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்'' என்று கூறினான்.
35. மேலும், ‘‘விசாரணை நாள் (வரும்) வரை உன் மீது நிச்சயமாக என் சாபமும் (கோபமும்) உண்டாவதாக!'' (என்றும் கூறினான்.)
36. அதற்கவன் ‘‘என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரை நீ எனக்கு அவகாசமளி'' என்று கேட்டான்.
37, 38. அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்.
37, 38. அதற்கு (இறைவன்) ‘‘நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது'' என்றான்.
39. அதற்கவன் ‘‘என் இறைவனே! நீ என்னை வழி கெடுத்ததன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்.
40. எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்ல) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)'' என்று கூறினான்.
41. அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி.’‘
42. (மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு ஒரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர.
43. (உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான்.
44. அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள்.
45. நிச்சயமாக, இறையச்சமுடையவர்களோ சொர்க்கங்களிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள்.
46. (அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்'' (என்று கூறப்படும்).
47. (ஒருவருக்கு ஒருவர்மீது இம்மையில்) அவர்களின் நெஞ்சங்களில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள்.
48. அதில் அவர்களை ஒரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
49. (நபியே!) நீர் என் அடியார்களுக்கு அறிவிப்பீராக: ‘‘நிச்சயமாக நான் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவேன்.
50. இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் மிக்க கொடிய வேதனை.
51. (நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீர் அவர்களுக்கு அறிவிப்பீராக.
52. அவர்கள் இப்றாஹீமிடம் சென்று ‘ஸலாமுன்' (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் ‘‘நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்' என்றார்.
53. அதற்கவர்கள், ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகன் ஒருவரைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்'' என்று கூறினார்கள்.
54. அதற்கவர் ‘‘இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்!'' என்று கூறினார்.
55. அதற்கவர்கள், (‘‘பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உமக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப் பற்றி) நீர் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்'' என்று கூறினார்கள்.
56. அதற்கவர், ‘‘வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனுடைய அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்'' என்றார்.
57. (பின்னர் வானவர்களை நோக்கி, ‘‘இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?'' என்று கேட்டார்.
58. அதற்கவர்கள் ‘‘(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள்.
59. ‘‘எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்). நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம்
60. எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கி விடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்'' (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.)
61. (இறைவனால்) அனுப்பப்பட்ட (அவ்)வானவர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது,
62. (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கிறீர்களே!'' என்று அவர் கூறினார்.
63. அதற்கவர்கள், ‘‘(உங்கள் மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்.
64. மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்து விடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம்.
65. ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றார்கள்.
66. மேலும், நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அவ்வானவர்கள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம்.
67. (இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர்.
68. (லூத் நபி அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர்கள் என் விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவு படுத்தாதீர்கள்.
69. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்'' என்று கூறினார்.
70. அதற்கவர்கள் ‘‘உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?'' என்று கூறினார்கள்.
71. அதற்கவர் ‘‘இதோ! என் பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களைத் திருமணம்) செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்.
72. (நபியே!) உம் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை.)
73. ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது.
74. அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை தலைக் கீழாகப் புரட்டிவிட்டோம்.
75. உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
76. நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப் போகக்கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது.
77. நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.
78. (இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
79. ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் தெளிவான வழியில்தான் இருக்கின்றன.
80. (இவ்வாறே) ‘ஹிஜ்ர்' என்னும் இடத்திலிருந்த (ஸமூது என்னும்) மக்களும் நம் தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
81. நாம் அவர்களுக்கு நமது (பல) அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவற்றை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்.
82. அச்சமற்று வாழலாம் எனக் கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள்.
83. அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது.
84. அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்க வில்லை.
85. வானங்களையும் பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரை இத்தீயவர்களின் விஷமத்தை) நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வருவீராக.
86. நிச்சயமாக உமது இறைவனே (அனைத்தையும்) படைத்தவன், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன் ஆவான்.
87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களை (உடைய ‘அல்ஹம்து' என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான (முழு) குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.
88. (பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக.
89. ‘‘நிச்சயமாக நான் தெளிவான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்'' என்றும் கூறுவீராக.
90. (நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
91. இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
92. (ஆகவே,) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரிடமும் கேள்வி கணக்குக் கேட்போம்,
93. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி.
94. ஆகவே, உமக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்தறிவித்து விடுவீராக. மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
95. பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கை விட்டு) நிச்சயமாக நாமே உம்மைப் பாதுகாப்போம்.
96. இவர்கள் (உம்மைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்குகிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
97. (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீர் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்.)
98. நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக;
99. உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக!
Icon