ترجمة سورة النبأ

Jan Trust Foundation - Tamil translation
ترجمة معاني سورة النبأ باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation .


எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

மகத்தான அச்செய்தியைப் பற்றி,

எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.

அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.

நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

ஒரே வயதுள்ள கன்னிகளும்.

பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
Icon